Monday, December 31, 2007

தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ்

தன்மானமில்லா தமிழர்களின்
புகலிடமான காங்கிரஸ்
(இன்றைய தமிழக காங்கிரஸ் பற்றிய ஒர் பார்வை)
க.அருணபாரதி
 
'இந்தி்'யத் தேசிய காங்கிரசின் தோற்றம்
              அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான்.  வடநாட்டு பார்ப்பன பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்தி மொழியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை அதன் செயல் திட்டமாகவே செயல்படுத்தவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை அவர்களுக்கு பின் வளர்ந்த தேர்தல் கம்யூனிஸ்டுகள், பாரதீய சனதா போன்ற தேசியக் கட்சிகளும் நிரூபித்தன. அவை அவ்வப்போது அம்பலப்பட்டும் வருகின்றன.
 
தமிழக காங்கிரசின் கொள்கை
             "ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் கற்பழித்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே. ஈழத்தமிழர்கள் எங்கள் தலைவரை என்ன காரணத்துக்கு என தெரியாமலேயே கொன்று விட்டனர். அவர் ஒரு அப்பாவி. எனவே அம்மக்கள் இனி செத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எமக்கு மூவாயிரம் ஆண்டு தமிழ் மொழியின் உறவை விட 50 ஆண்டு கால காங்கிரசும் அவாகளது பேரன் பேத்திகளின் உறவே போதும். அது தான் நாங்கள் இன்னும் வடநாட்டு பனியா சக்திகளுக்கும் அதன் மகள் மகன்களுக்கும் பல்லக்கு தூக்கி அடிமை சேவகம் புரிந்திட உதவுகிறது. இந்திய தேசியம் பேசுவோம். ஆனால் கட்சிக்குள் கூட எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மாட்டோம்". இது தான் தமிழக காங்கிரசின் எழுத்திலேறாமால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கொள்கை அறிக்கை.
 
ஈழப்பிரச்சனையில் காங்கிரசின் நிலைப்பாடு
            ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் காங்கிரசின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். அக்கட்சி சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை 'இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. அதனை காங்கிரசும் உணர்ந்திருக்கிறது. அப்புறம் ஏன் தனி ஈழத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் தலைவரை கொன்று விட்டனராம். இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவர் தானே. அவா பிரதமராக இருந்த போது அவரை சுட்டுக் கொன்ற சீக்கியர்களை எதிர்த்து இதே காங்கிரஸ் தொண்டர்கள் தான் வன்முறையை ஏவீ அவர்களை கொன்று குவித்தனர். பின்னர், சுட்டுக் கொன்ற சீக்கியனின் மனைவியையே தேர்தலில் நிக்க வைத்து பாராளுமன்றத்திற்கும் அனுப்பினர். அது மட்டுமில்லாமல் சீக்கிய இனத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் பதவியே கொடுத்தார்கள்.
 
            ஆனால், ஈழப் போராளிகள் ராசீவ் காந்தியை கொன்றுவிட்டனர் என்று கூறி, நாளும் கொடுமை அனுபவித்து வரும் ஈழமக்களை மேலும் தன்பத்தில் ஆழ்த்துவதில் இவர்களுக்கு என்ன அக்கறை? இந்திரா காந்தியை சட்டுக் கொன்றவனின் மனைவிக்கு நாடாளுமன்ற பதவி கொடுத்த காங்கிரஸ் நண்பர்களே  ஏன் தமிழர்களிடம் மட்டும் இந்த பாகுபாடு?
 
            பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் 'இந்தி'யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு?  தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது பயங்கரவாதம் என சொல்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், அக்கட்சி வட கிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமை கோரி போராடும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் இந்திய அரசே நடத்தும் பேச்சுவார்த்தைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை? கருத்து சொல்லவில்லை?
 
        இந்த பாகுபாட்டைத் தான் 'இந்தி'ய தேசியம் என்கிறோம்.
 
ராசீவ்காந்தியின் சாதனைகள் 
            ராஜீவ் காந்தி என்கிற அரசியல் கோமாளியின் முட்டாள்தனமான முடிவுகளால் இந்திய அரசால் ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது பற்றி வாய் திறக்க எந்த தமிழகக் காங்கிரஸ்காரனாலும் முடியுமா? போபர்ஸ் ஊழல் வழக்கால் உள்நாட்டு அரசியலில் நாராடிக்கப்பட்டு காரி உமிழப்பட்ட ராசீவ்காந்திக்கு திடீரென பிறந்த அக்கறை தான் ஈழப்பிரச்னையில் அவரது தலையீடு.  எந்த நாடு நாங்கள் அகிம்சையால் சுதந்திரம் பெற்றோம் என உலகநாடுகளிடம் பீற்றிக் கொண்டு போலி வேடமிட்டதோ அந்த நாட்டை எதிர்த்து அகிம்சை முறையில் உண்ணாவிரத அறப்போர் தொடங்கினார் விடுதலைப்புலி திலீபன். எதற்காக?  ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என்று கோரிக்கையை வைத்து. அந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, திலீபன் அந்த உண்ணாவிரத மேடையிலேயே நீர் கூட அருந்தாமல் வீரமரணமெய்த வைத்தவர் தானே இந்த ராசீவ்காந்தி. அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த ஈழத்தாய் அன்னை பூபதியும் மரணமெய்திட செய்தவர் தானே இந்த ராசீவ் காந்தி.
 
        கடந்த 07.11.2007 அன்று வெளிவந்த துக்ளக் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் சோ, விடுதலைப் புலிகளின் இயக்கம் தடைசெய்யப்படாமல் இயங்கியக் காலத்திலேயே அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லலாமா என ராசீவ்காந்தி ஆலோசனை  நடத்தியது உண்மை தான் என வாக்குமூலமே அளித்துள்ளார். அது பற்றி சூடு, சொரணையுள்ள எந்த காங்கிரஸ்காரனாவது வாய்திறந்தானா? ஒர் இயக்கத்தின் தலைவரை அவ்வியக்கம் தடை செய்யப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே அதன் தலைவரை சுட்டுக் கொல்ல ஆலோசனை நடத்தியவன் அரசியல் தலைவனா? அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அப்பாவி காங்கிரஸ் தமிழர்கள் திருந்துவார்களா?
 
      ராசீவ் காந்தியின் ஆணையால் ஈழத்திற்கு இந்திய இராணுவம் சென்றது. சிங்களன் மட்டுமல்ல 'இந்தி'யனும் தமிழனுக்கு எதிரிதான் என நிரூபித்தது. சிங்கள அரசும் செய்யத் துணியாத அட்டூழியங்களை அடுக்கடுக்காக செய்தது இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை கற்பழித்ததற்கான தடையங்கள் சிக்கிவிடக் கூடாதென, அவர்களது பிறப்புறுப்பிலும் துப்பாக்கியால் சிதைத்த கொடூரங்களையும் அரங்கேற்றினர் "இந்தி"ய இராணுவத்தினர். இந்திய இராணுவத்திலிருந்த ஒன்றிரண்டு தமிழர்கள் தன் மொழி மற்றும் இன உணர்வால் தமிழாகள் சிலரை தப்பியோடும்படி எச்சரித்ததை கண்டு பொறுக்காத மற்ற இராணுவத்தினர், தமிழ் இராணுவ வீரர்களையும் கொன்றனர். அதனால், அப்போரில் இறந்தவர்களின் பெயர்களைக் கூட இன்றுவரை வெளியிடாமல் வைத்திருக்கிறது 'இந்தி'ய அரசு. இந்த "சாதனை"களுக்கெல்லாம் சொந்தக் காரர் தானே இந்த ராசீவ் காந்தி.அவரது கொலை சம்பவம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒர் இனத்தின் விடுதலைக்கே தடையாக நிற்பது தான் காந்தி உங்களுக்கு கற்றுத் தந்த அகிம்சையின் பயன்பாடா? இது தான் தங்கள் அகிம்சை வழியின் லட்சணமா?
 
        அகிம்சை பற்றி பேசுவதற்கான தகுதி காங்கிரசுகாரர்களுக்கு என்றோ போய்விட்டது. மற்ற கட்சிகள் அதன் எதிர்கட்சிகளுடன் தான் சண்டை போடுவர். அடித்துக் கொள்வர். ஆனால், இதிலோ அனைத்திலும் வித்தியாசமாக அந்த கட்சிக்குள்ளேயே தினமும் ஒரு சண்டைக் கட்சி அரங்கேறுகிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரமரணத்திற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தால் இரத்தக் கண்ணீர் வடித்ததாக அறிக்கை விட்ட காங்கிரஸ்காரர்களே... அது இரத்தக் கண்ணீர் அல்ல. தங்கள் கட்சிக்குள் சிலர் பதவிக்காக மண்டையை உடைத்துக் கொண்டதால் சத்தியமூர்த்திபவனில் வழிந்த இரத்தம்.
 
அம்மணமாகும் 'இந்தி'யத் தேசியம்
எழுச்சி பெறும் தமிழ்த் தேசியம்
 
            வெறும் 50 வருடங்களாக காங்கிரஸ் உயிருடன் இருக்கும் காங்கிரசு அமைப்புக்குள் இருக்கும் தொண்டர்களுக்கு, மூவாயிரம் வருடங்களாக நாம் தமிழராக இருக்கிறோம் என்ற உணர்வு ஏன் இங்குள்ளவர்களுக்கு இல்லை? நம் தமிழர்களை தானே ஈழத்தில் தினம் தினம் சுட்டுக் கொல்லப்பட்டு மடிகின்றன சகோரதரனும், கற்பழித்து கொல்லப்படுகிற அக்கை தங்கைகளும் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தானே என்ற உணர்வு ஏன் இவர்களுக்கு இல்லை? வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள கொள்கைகளற்ற கொள்ளைக்கட்சியின் மீது இவர்களுக்கு அபிமானம் பிறந்தது எப்படி,? சுயலாபங்களுக்குகாக, தன் சொந்த தேசமான தமிழ்த் தேசத்தை மறந்து விட்டு வடநாட்டு பனியாக்களுக்குக பல்லக்குத் தூக்கும் துரோகிகளின் கூடாரமாக இக்கட்சி மாற்றமெடுத்தது எதனால்?
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழர்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் பொழுது இந்திய தேசியம் பேச வக்கற்ற காங்கிரசுக்கு, தமிழர்களின் உறவுகள் ஈழத்தில் செத்து மடிகின்ற போது மட்டும் வாய்திறப்பது எதனால்? கேரளத்தில் இருந்து கொண்டும், கர்நாடகத்தில் இருந்து கொண்டும், ஆந்திராவில் இருந்து கொண்டும் தமிழனுக்கு நீர் தரக் கூடாது என செயல்படும் கம்யூனிஸ்டு, பா.ச.க, காங்கிரசுவாதிகள் உள்ளிட்ட 'இந்தி'ய தேச ஏமாற்று சக்திகள் தமிழகத்திலும் அதையே சொல்ல வேண்டியது தானே? இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு? இது தான் 'இந்தி'யத் தேசியம்.
 
       இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. காங்கிரசில் உள்ள தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.
 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, December 18, 2007

நினைவுகளின் சுமை (கவிதை)

நினைவுகளின் சுமை
க.அருணபாரதி
 
நினைவுகளின் சுமையால்
நகர்கிறது வாழ்க்கை..

நிலைக்காது எனத்தெரிந்தும்
அடங்காத வேட்கை..
 
இமைகளின்  துடிப்போடு
இயங்கிடும் நாட்கள்..
 
இனியவள் பிரிவாலே
வழியெங்கும் முட்கள்..
 
வனங்களில் திரிகின்ற
விலங்குகள் போல
 
மனம் அலைகிறதே
உன்நிழல் தேடி..
 
சினங்களை மறைத்தேன்
சிரித்தேன் திரிந்தேன்
 
கனவினில் உன்னோடு
கதை பேசியபடி..
 
துன்ப வெயிலில்
கால் சிவந்தபோது
 
தூரிகையாய் மனதை
வருடிய கனவே..
 
இன்பத் தமிழிலே
உனைபாடித் திரிவேன்
 
இருந்தாலும் இறந்தாலும்
இதுவென் உணவே...
 

Monday, December 17, 2007

தமிழா உன்கொடி ஏறுமடா...


தமிழா உன்கொடி ஏறுமடா...
தாய் போல
தன்னுடைய
தாய்மொழியை
நேசித்தவன்..
 
வாய்ப் பேச்சால்
உலகத்தையே
வாயடைக்க
செய்தவன்..
 
தீயருக்கும்
திகட்டாமல்
விருந்தோம்பல்
படைத்தவன்..
 
நேயம் கொண்டு
எறும்பிற்கும்
அரிசிமாக் கோல
உணவு கொடுத்தவன்..
 
சங்கம் வளர்த்து
தன் மொழியை
சரியாமல்
வளாத்தவன்..
 
எங்கும் இன்று
அடிபட்டு ஓயாமல்
அழுபவன்..
 
தமிழன்..
 
ஈழத்தில் ஓங்கிநிற்கும்
உன் கையை
பலப்படுத்து..
 
ஈனத்துரோகிகளை
கண்டெடுத்து
தளைபடுத்து...
 
வானத்தில் மலர்த்தூவ
உன்கொடி ஏறுமடா...
அந்நாளில் உன்புகழை
உலகமே கூறுமடா...

 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
 
மேலும் கவிதைகளுக்கு : புரட்சிப்பூக்கள்

Tuesday, December 11, 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !

- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு -
 வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி !
 
ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர்வலம் தற்பொழுது கணினியிலும் உலாப்பேசி என விஞ்ஞான வளர்ச்சிகளுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. தாய் மீது இயற்கையிலேயே பற்று கொள்ளும் குழந்தைகள் போல தமிழ் மீது பற்று கொண்டடி தமிழர்கள் தம்மை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டதுவே இச்சாதனைகளுக்கெல்லாம் காரணமாகும்.
 
இணையத்தீன் வளர்ச்சியால் உருவான கருத்துப் பரிமாற்ற ஊடகமான வலைப்பதிவுகளின் வளர்ச்சியும் இதில் அடக்கம். அதனை மேலும் வளர்க்க, முன்னெடுத்து செல்ல ஒன்றுபடும் தமிழர்களின் ஆர்வத்தை பாராட்டுவதோடு நின்றுவிடாமல் அவர்களோடு நாமும் துணை நிற்க வேண்டும்.
 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய தமிழ்க் கணினி பயிற்சி பயிலரங்கு அப்படிப்பட்ட முயற்சிகளுள் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். முதன் முதலாக சென்னையிலும் பின் கோவையிலும் வலைப்பதிவர் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டிருந்தாலும், முழுதாகத் திட்டமிடப்பட்டு நிறைவோடு பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக தான் இதனை பார்க்கிறோம்.
 
இப் பயிலரங்கிற்கான முன் முயற்சிகளை எடுத்த இரா.சுகுமாரன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இணையத்தில் சிதறிக் கிடந்த புதுச்சேரி வலைப்பதிவர்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைப்பாளராக திறம்பட செயல்பட்ட அவருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...! நிகழ்விற்கான துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டதிலிருந்து நிகழ்வு முடிந்த பின்னும் அடுத்த என்ன செய்யலாம் என சிந்தித்த வண்ணம் இருக்கும் அவருடன் நானும் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
 
அடுத்து, கோ.சுகுமாரன் அவர்கள். முன்னெடுத்த முயற்சிக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என துரிதமாக செயல்பட்டவர். நிகழ்ச்சி நடக்கும் நாளுக்கு முன்னிரவு குறுந்தகடு அவரது வீட்டில் தான் தயாரானத. நானும் அவரும் சுமார் 4.30 மணி வரை சோர்வு கொள்ளாமல் பணிகளை கவனித்தோம். ஏற்கெனவே மனித உரிமை பேராளியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருக்கு, இவ்வேளைகள் ஒன்றும் சுமையல்ல என்பதை நன்றாக உணர்ந்தோம். நகரின் மையப் பகுதியில் இருந்ததால் அவரது வீடே வலைப்பதிவர் சிறகத்தின் விருட்சமாக இருந்தது. பத்திரிக்கையாளர்கள் கவனிப்பு, விருந்தினர்கள் உபசரிப்பு, அரங்க வேலைகள் என எப்பொழுதும் வலைப்பதிவர் சிறகத்தின் பின்னணியில் சுழன்று நின்று வேலை பார்த்த அவருக்கு நன்றியும் பாராட்டுக்களும் ....!
 
அடுத்து நிகழ்ச்சியின் வழங்கப்பட்ட கோப்புகள், தாள்கள், பேனர்கள், பேனர் கட்டுவது, துண்டறிக்கை ஒட்டுவது என உண்மையான செயல் வீரர்களாக செயல்பட்டவர்கள் ம.இளங்கோ , வீரமோகன் ஆகியோர் ஆவர். நிகழ்ச்சி நடக்கும் முன்னிரவு சுமார் 1 மணி வரை உடனிருந்து கோப்புறை, பேனர் என அலைந்து திரிந்தவர்கள் இவர்கள். நிகழ்வகளின் முன் நிற்காமல் பின்னணியில் இருந்து உணர்வுப்பூர்வமாக உழைத்த இவர்களது உழைப்பு போற்றத்தக்கது.  அமைப்புக் குழுவில் இருந்தாலும் எந்த புகைப்படத்திற்கும் புகழுரைக்கும் மயங்காத இவர்களை போன்றவர்களின் உழைப்பில் தான் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் இப்படியொரு நிகழ்வை நடத்த சாத்தியப்பட்டிருக்கிறது. அவர்களது உழைப்புக்கும் உணர்வுக்கும் தலைவணங்குகிறேன்...
 
இவர்கள் மட்டுமல்லாமல் இணையதளத்தில் பட்டறைக்குரிய பங்கேற்பாளர்களை பதிவு செய்யும்படி வலைதளம் செய்து அதனை எளிதாக்கிய தூரிகா வெங்கடேஷ்,
 
பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் செவிமடுத்து பேராசியர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பேசியும் பயிற்றுவித்தும் சிறப்பித்த முனைவர் நா.இளங்கோ மற்றும் முனைவர் மு.இளங்கோவன், எ-கலப்பை வடிவமைத்து கணினியில் தமிழைத் தட்டச்சு செய்வதை எளிதாக்கிய பெங்களுர் தமிழ் ஆர்வலர் "தமிழா" முகுந்த், சென்னையிலிருந்து வந்து பட்டறைக்கு வலுசேர்த்த மா.சிவக்குமார், நந்தக்குமார், இலவச இயங்குதளமான உபுண்டுவை அறிமுகம் செய்த கலக்கிய இராமதாஸ், விறுவிறுப்பாக நிகழ்வை இணையத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பதிவு செய்து சிறப்பித்த வினையூக்கி, மற்றும்  ஒசைச்செல்லா என பலருக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
   
இவர்களோடு, புகைப்படங்களை எடுத்து இந்நிகழ்வை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தன் கைவண்ணத்தாலும் கலை எண்ணத்தாலும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் லோகோவிற்கு வடிவம் தந்து அதற்கு உயிரூட்டிய ஓவியர் இராசராசன், மற்றும் திரு இராமமூர்த்தி, வேலை பளுவுக்கி்டையே குறுந்தகடு வடிவமைப்புக்காக நேரம் ஒதுக்கி உழைத்து அதனை செழுமை படுத்திய கணினி மென்பொறியாளர் கல்பீஷ், இரவோடிரவாக குறுந்தகடுகள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட சீத்தா பிரபாகரன், மற்றும் அன்றைய தினம் நிகழ்வில் பங்கேற்று உழைத்த அமைப்புக் குழுவைச் சேர்ந்த பிரேம்குமார், மற்றும் அமைப்புக் குழுவை சேர்ந்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்...........
 
மேலும் இந்நிகழ்வை பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்ற செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆகியவற்றுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முயற்சியாக கிராமங்களில் தமிழ் கணினி பற்றிய செய்திகளை பயிற்சி பயிலரங்கு வழியாகவும் பரப்புரையாகவும் செய்து அடித்தட்டு மக்களும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்திடும் வண்ணம் இச்சிறகம் சிறகடிக்கும் என நம்புகிறோம். அதற்கு இதுவரை உழைத்த தோழர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து உழைத்து அந்த வெற்றியையும் தமிழ் சமூகத்திற்கு வழங்கிட செயல்படுவோமாக...
 
 வெல்க தமிழ் !

குறிப்பிடத்தக்க பதிவுகள்