Wednesday, December 02, 2009

கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்



“இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...”


வறுமைக்கு பெயர் பெற்ற சோமாலியா நாட்டில் தற்பொழுது என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை, அங்கு பணியாற்றுகின்ற ‘எல்லைகள் கடந்த மருத்துவர்கள்’ - மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் - Médecins sans Frontières (MSF) என்ற பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மேலுள்ளவாறு அறிவித்திருக்கிறது. ஏறத்தாழ 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சோமாலியாவில் உச்சத்தில், தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது, பஞ்சப்பேய்.


கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம், சோமாலியாயில் குடும்பம் ஒன்றிற்கான உணவு மற்றும் குடிநீர்ச் செலவு மாதம் ஒன்றிற்கு 92 டாலர்களாக இருந்தது. அது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 171 டாலர;களாக, சுமார் 85 விழுக்காடு உயர்ந்துள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் தவிர்த்து விட்ட, சோமாலியா மக்கள் அதிகமானோர் உள்ளனர். பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர்.

மேலும், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் இங்கு நீடிக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நீடிக்கிறது. அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.


வேலையின்மையாலும், வறுமையாலும் வாடி வதையுறுகின்ற, ஆப்ரிக்க நாடுகளுக்கு, இந்நிலை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. கடந்த 1966-1970 ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஆப்பிரிக்க நாடுகள், அப்பொழுதே சுமார் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்களை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளமான பகுதியாகத் தான் இருந்தது. ஆனால், இன்றோ பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் 25 விழுக்காட்டிற்கும் மேலான உணவை முதலாளிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டியளவிற்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முதலாளிய நாடுகளின் கண்ணை உறுத்திய ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளம், பணக்கார நாடுகளால் சூறையாடப்பட்டது. தமது இராணுவ மேலாதிக்க நடடிவக்கைகள் மூலமும், ‘பொருளாதார ஒருங்கிணைப்பு’ என்ற பெயரிலான, உணவு உற்பத்தியை சீர்குலைக்கிற சந்தைப் பொருளாதாரச் சுரண்டல் திட்டங்களின் மூலமாகவும் ஆப்பிரிக்க நாடுகளை சிதைத்ததில், முழு பங்கும் ஏகாதிபத்திய நாடுகளையே சேரும்.

இவற்றின் விளைவாக, தம் வளங்களையும், உரிமைகளையும் இழந்து, பரிதவிக்கின்றனர், அந்நாட்டு மக்கள்.


உலகமய முதலாளியத்தின் சுரண்டல் தீவிரவாதத்தின் எதிர் விளைவாக, ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இது தான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது.

முதலாளிய இலாப வெறியின் விளைவாக தோற்று விக்கப்பட்ட, தற்போதைய பொருளியல் நெருக்கடியை முன்னிட்டு, நிறுவனங்கள் மூடப்படுதல், வேலை யிழப்பு அதிகரித்தல், தொழிலாளர்கள் மேலும் அதிகமாக சரண்டப்படுதல், சுரண்டுகின்ற நிறுவனங்களுக்கு இன்னும் அதிகமான வரிச்சலுகை களை அள்ளி வீசுதல், இவ்வாறான தொடர் நடவடிக்கை களின் காரணமாக விலை வாசி உயர்தல் என பல்வேறு வடிவங்களில் உலக மக்கள் இன்று வாட்டப்பட்டு வருகின்றனர்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labor Organization- ILO), உலகில் ஒரு நாளுக்கு 2 டாலருக்குக் கீழ் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக உயரும் என்று அறிவித்திருக்கிறது. உலகமய வேட்டைக்காரர்களின் நாடான அமெரிக்காவிலோ, வேலையின்மை யின் விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டு மட்டும் சுமார் 106 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. (காண்க: பினான்சியல் எக்ஸ்பிரஸ், 26.10.09). ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன்(1000 கோடி) டாலர் கடனாளியாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.



“மனித குல வரலாற்றில் இவ்வாறான பஞ்சத்தை, முதன் முறையாக இவ்வுலகம் எதிர் கொள்கிறது” என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய (UN’s Food and Agriculture Organisation FAO) அமைப்பின், வளர்ச்சித்துறை இயக்குநர் கோஸ்டஸ் ஸ்டமௌலிஸ் குறிப்பிடுகிறார். அவ்வமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மிக அதிகபட்சமாக, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஆசிய - பசிபிக் பகுதிகளில் 642 மில்லியன் மக்களும், சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் 265 மில்லியின் மக்களும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதிகளில் 53 மில்லியன் மக்களும் பட்டினியில் உழல்கின்றனர்.


முதலாளிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்கள் பட்டினி கிடப்பதாகவும் அவ்வமைப்புத் தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், வெளியிடப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத்துறை நிறுவனத்தின் ஆண்டறிக்கை (United Nations - Food Agency, Annual report 2009), உலகம் முழுவதும் சராசரியாக 100 கோடி மக்கள் பட்டினியில் உழன்று கொண்டிருப்பதாகவும் அறிவித் துள்ளது. உலக நாடுகள் விவசாயத் துக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது.


விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படாததும், சேவைத்துறை ஊட்டி வளர்க்கப்படுவதும், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாத பெரும் நிதி மூலதனச் சூதாட்டங்களின் ஊக்குவிப்பும் தான் உலகமயத்தை உயிருடன் வைத்துள்ளன. வெளிப்படையாக இதனைக் குற்றம் சாட்டாமல், மறைமுகமாக அவ்வறிக்கை இதனை தெரிவித் திருப்பதன் மூலம், இவ்வறிக்கை, உலகமயத்திற்கு எதிரான குற்றப் பத்திரிக்கையாகவே விளங்குகின்றது.

மேலும் அவ்வறிக்கையில்,

· உலகின் 6இல் ஒரு மனிதர் பசியில் உழன்று கொண்டிருக்கிறார்,

· உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மையாலும், ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது,
· சகாராப் பகுதி ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராக விலை வாசி உயர்வையும், வறுமையையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்,


என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘உணவு இல்லாமல் போனால், மக்கள் கலகம் செய்வார்கள், இடம் பெயர்வார்கள் அல்லது இறப்பார்கள். எனவே இது உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்’ என்கிறார் ஐ.நா. உணவுத்திட்டத்தின் இயக்குநர், ஜோசட் ஷரன். அவர் தெரிக்கும், ‘உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்ற சொற்றொடரை, உலகமய முதலாளி யத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இடைவிடாத சுரண்டல்களின் மூலம், ஏழை நாடுகளை சீரழித்த முதலாளிய நாடுகள், ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ என்பது போல, தம் சுரண்டலின் ஒரு மிகச்சிறிய பகுதியை ‘ஏழை நாடுகளின் வறுமையைப் போக்குவதற்காக’ என்ற பெயரில் எலும்புத் துண்டுகளென வீசுயெறிகின்றன. அதற்கான தரகராக செயல்படுவது தான், ஐ.நா. உணவுத்துறைத் திட்ட நிறுவனத்தின் வேலை.

தற்பொழுது முதலாளிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில், சிக்கியிருப்பதால், பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்த சிறு உதவித் தொகையையும் கூட நிறுத்தி வைத்துள்ளன.


சோமாலியாவில், உணவுக்காகவும், உரிமைக்காகவும் உழைக்கும் மக்கள் ஆயுதமேந்தி நடத்தி வருகின்ற ஒருங்கிணைக்கப்படாத கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று முத்திரைக் குத்தி, ‘தாம் வழங்கும் உதவிகள் தீவிரவாதிகளுக்குத் தான் போய்ச் சேரும்’ என்று சோமாலியாவிற்கான நிதி உதவிகளை ஒருமையில் நிறுத்தியுள்ளது அமெரிக்கா. உணவு கொடுத்தால் அது தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேரும் என்று வேடம் போடுகின்ற அமெரிக்கா, சோமாலியா கலகக்காரர்களை அடக்கும் பொருட்டு, வலிமையும், பயிற்சியும் இல்லாத அந்நாட்டின் சிறு இராணுவத்திற்கு 40 டன் அளவிற்கான ஆயுதங்களை மட்டும் அள்ளி வீசியிருக்கிறது.


இவ்வாயுதங்கள் அல்-கொய்தா போன்ற இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு வணிகம் செய்யப்படுகின்றன என்று சோமாலியா நாட்டின் அரசியல்வாதிகள் சிலரே வெளிப்படையாக எச்சரித்துள்ள போது கூட அமெரிக்காவிற்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. உழைக்கும் மக்களின் கலகங்களை அடக்குவதில் மட்டுமே அமெரிக்கா அதீத கவனம் செலுத்துகிறது.


இவ்வாறு, ஏகாதிபத்திய நாடுகள் தாம் வீசும் எலும்புத் துண்டுத் தொகையைக் கூட, கொடுக்காத நிலையில், இவ்வாண்டு ஐ.நா.வின் உணவுத்துறை திட்ட அமைப்பிற்கான உதவி நிதி கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத வகையில், குறைந்து விட்டதாகவும் அவ்வமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.

கடந்த சூலை மாதம் இத்தாலியில் நடந்த ஜி8 எனப்படுகின்ற பணக்கார நாடுகளின் மாநாட்டிற்கு முன்பாக, ஐ.நா. உணவுத்துறை அமைப்பு இது குறித்து வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த ஜி8- பணக்கார நாடுகளின் மாநாட்டில், ஏழை நாடுகளுக்கான உதவித் தொகையை ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர்கள் அதிகரிப்போம் என்று கூட்டாக அறிவித்திருந்தன, பணக்கார நாடுகள். ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதற்கும், அந்நாடு களில் நுழைந்து மேலாதிக்கம் செய்வதற்குமே இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற போதும் கூட, பணக்கார நாடுகள் இதற்கென ‘உதவ’ இப்பொழுது தயாரில்லை.


இவ்வாறான தொடர் நடவடிக்கைகளின் மூலம், ‘உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம்’ என்கிற முதலாளிய நாடுகளின் போலி முழக்கத்தை, அந்நாடுகளே காற்றில் பறக்க விட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்நிலைமை என்றால், வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இன்றைய இந்தியாவில், 5 வயதுக்கு கீழான எடை குறைவுள்ளக் குழந்தைகளின் விகிதம் மட்டும் 42.5 விழுக்காடு. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை, உகாண்டா பாகிஸ்தான், வங்கதேச நாடுகளை விட பின்தங்கிய நிலையில் தான் இந்தியா உள்ளதென உலக நாடுகளுக்கிடையே கணக்கெடுக்கப்பட்ட பசி அளவுக் குறியீடு (Global Hunger Index 2008) குறிப்பிடுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 88 விழுக்காட்டு பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களும், 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களும், 85 விழுக்காட்டு முஸ்லிம் மக்களும் ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் ரூ.20க்கும் கீழ் தான் வருமானம் பெறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும், குடிசைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 150 மில்லியன். ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியான தாராவி இந்தியாவில் தான் இருக்கிறது. அதில் வாழுகின்ற பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் ஆவர். மகாராட்டிரத்தின் 15 மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவால், ஏப்ரல் 2003லிருந்து மே 2004க்குள் இறந்த 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 9,000.

இப்படிப்பட்ட இந்தியா தான் ‘வல்லரசாக’ப் போகிறதென்று நம்மை கனவுக் காணச் சொல்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமான வளர்ச்சி என்று திரிக்கும், இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஊதுகுழலான முதலாளிய ஊடகங்களுக்கும, இப்படிப்பட்ட ஏழ்மையில் உழலும் ‘இந்தியா’வின் கோர முகம் தெரிவதற்கான வாய்ப்பில்லை தான்.


அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளுடனான உலகமயப் பிணைப்பு காரணமாக, இந்தியத் தொழிற்துறை ஆட்டம் கண்டுள்ளதை அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல்களும், வேலை இழப்புகளும் நுணுக்கமாக இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பதற்கு வசதியாக, ஏற்கெனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரை குறையாக அமல்படுத்தி வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 1.09.09).


இவ்வறிவிப்பின் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணிநேரம், குறைந்தபட்சக் கூலி, விடுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தம் விருப்பம் போல் நிறுவனங்கள் நடந்து கொள்ளலாம் என்ற இந்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இவ்வாறு, வரிச்சலுகை என்ற பெயரில், பல்வேறு தனியார் நிறுவனங்களும் மக்களை சூறையாடிக் கொள்ள தங்குதடையின்றி அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள முதலாளிய ஆளும் வர்க்கங்கள் அனைத்தும், சர்வாதிகாரத் திமிருடன் தொழிலாளர் களை தம் விருப்பம் போல் சுரண்டிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு, போலிச் சட்டங்களையும் மீறி அனுமதியளித்துக் கொண்டிருக்கின்றன. முதலாளிகளின் விசுவாசப்படையான அரச அதிகார வர்க்கத்திற்கு எதிராக, அவ்வப்போது கோபத்துடன் குமுறி எழுகின்ற மக்களின் பதிலடிகள், கலகங்களாக பிறப்பெடுத்து, ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கச் செய்கின்றன.


இதனால் தான், சோமாலியா விலும் கென்யாவிலும் நடக்கிற உழைக்கும் மக்களின் கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று பெயரிட்டு, அமெரிக்கா அலறுகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், நொய்டாவில் கிராசியாநோ என்ற தனியார் நிறுவனத்தில், பணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியை அடித்துக் கொன்றதும், அண்மையில் கோவையில், 42 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்த பிரிக்கால் ஆலையின் நிர்வாகத்திற்கு, எதிரான போராட்டத்தில், அந்நிறுவனத்தின் நிர்வாகிக் கொல்லப்பட்டதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உழைக்கும் மக்களின் பதிலடிகள் தான். தொழிலாளர்களின் இந்த பதிலடிகளை ‘வன்முறை’ என்று சாடுகின்றன, இந்திய ஆளும் வர்க்கங்கள்.


சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் (International Food Policy Research Institute- IFPRI) சேர் ந்த பொதுச் சுகாதார ஆய்வாளர், பூர்ணிமா மேனன் அவர்களிடம், மக்களின் வறுமை குறித்து கேட்ட போது, “ஒரு அமைப்பின் தோல்வியை தான் நாம் இன்று காண்கிறோம். அது ஏதோ செய்கிறதே தவிர, பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை” என்று கூறுகிறார். (“I see a system failing. It is doing something, but it is not solving the problem”) (காண்க : தி நியுயார்க் டைம்ஸ்,மார்ச் 12, 2009).


அவர் கூற முற்படும் அமைப்பு, தற்பொழுது நிலவுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பு. அவ்வமைப்பின் தோல்வியைத் தான் இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் மிகக் கொடூரமான முறையில்.

உலகமயம் ஏவுகின்ற வர்க்க ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, இந்தியம் ஏவுகின்ற இன ஒடுக்குமுறை யையும் தாங்கி நின்று கொண்டிருக் கிறது, நம் தமிழ்த்தேசம். இவற்றை எதிர் கொள்ளும் போர்வாளாக தமிழ்த்தேசியத்தை நாம் கைகளில் ஏந்த வேண்டியச் சூழலை, வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது.



(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 இதழில் வெளியான எனது கட்டுரை)


Visit : www.tamizharkannotam.blogspot.com, www.keetru.com


Wednesday, October 21, 2009

பன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி


இனக்குழு சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த மனித இனம், முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கால், இயற்கையின் மீதே படையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதல் முதல் இன்றைக்கு உலகை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் பன்றிக் காய்ச்சல் வரையான அனைத்து நிகழ்வுகளும் முதலாளியத்தின் வழிநடத்தலால் மறைமுகமாகப் பிறப்பெடுத்தவையே.

இராசாயன உணவுமுறையும், இயற்கைக்கு எதிரான வாழ்முறையும் ஏற்படுத்திய கோலங்களாகவே நோய்கள் மனித இனத்தை ஆட்டிப்படைக்கின்றன. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், பிளேக், சார்ஸ், பறவைக் காய்ச்சல் என பலவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு தான் பாதிப்பு. ஆனால், மருந்து முதலாளிகளுக்கு இவை சந்தையை உருவாக்கிய வரங்கள். அந்த வரிசையில் தற்பொழுது ‘பன்றிக் காய்ச்சல்’ நோயும் இடம் பிடித்துள்ளது.

வெறும் 25லிருந்து 60 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு முகமூடியை, மக்களுக்கு அச்சமூட்டிய ஊடகங்களின் துணையால், ரூ. 300, ரூ.500 வரை விற்க முடிகின்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படுகின்ற இந்நோய் அதன் பெயருக்கேற்ப பன்றிகளில் இருந்து பரவும் நோய் அல்ல. இந்நோய்க்குக் காரணமான ‘H1N1‘ என்ற கிருமி பன்றிகளில் இருந்து உருவானதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது. வழக்கமாக பன்றிகளுக்கு அவ்வப் போது ஏற்படும் தொற்று நோய்களை விட இது வேறுபட்டதாகவும் பன்றிகளுக்கு மட்டும் பரவாமல் மனிதர்களிடமும் பரவக் கூடியத் தன்மையுள்ளதாகவும் இக்கிருமி வெளிப்பட்டது.

இந்தக் கிருமி மனிதர்களுக்கு பரவியதன் பரிணாமத்தில் முதலாளியத்திற்கும் முக்கியப் பங்கிருக்கிறது. சுமித் ஃபுட்ஸ் (Smith Foods Inc.) எனப்படும் பெரு நிறுவனத்தின் பன்றிப் பண்ணையிலிருந்தே இந்நோய்க் கிருமி உருவானது. இலாபவெறியுடனும் அலட்சியத்துடனும், தொடர் பராமரிப்புகள் ஏதுமின்றி பெருமளவிலான பன்றிகளை இந்நிறுவனத்திற்குரிய பண்ணையில் இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். அகற்றப்படாத கழிவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட சுகாதரமற்ற சூழ்நிலை அங்கிருந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப பன்றிகளுக்கிடையே ஒரு புதுவிதமான தொற்று நோய்க் கிருமி பிறப்பெடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எளிதில் பரவியது. விரைவில், இந்நோய் எளிதில பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இன்று(26.08.09) வரை 84 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பேர்ப்பட்ட சுகாதரமற்ற இந்நிறுவனம் தான், ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறை”யைக் கொண்டிருப்பதாகக் கூறி ISO 14001 எனப்படுகின்ற தரச்சான்றிதழ் 2005ஆம் ஆண்டில் முதன் முதலில் பெற்ற அமெரிக்க நிறுவனமாகும். முதலாளிகளின் தரநிர்ணய முறை பல்லிளிக்க வைக்கிறது.

செலவுகளை மிச்சம் பிடித்தும், இறைச்சியை அதிகளவு விற்றும் இலாபம் சம்பாதிக்க நினைத்த அந்நிறுவனத்தின் இலாபவெறி அலட்சியப் போக்கால் ஏற்பட்ட வினையாக இந்தக் கிருமி உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில், இந்நோயின் பெயர் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றிருந்ததால் பன்றிகளின் இறைச்சி விலை குறைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பன்றிப் பண்ணை நிறுவனங்கள் முறையிட்டதன் காரணமாக, அந்நோய்க் கிருமியின் பெயரான H1N1 என்ற பெயரை ஒபாமாவே முன்மொழிந்தார். உலக சுகாதார நிறுவனம் வழிமொழிந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பல முதலாளிய நாடுகளிலும் மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட நிலையில், பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்நோய்ப் பரவலை எண்ணி பெரு மகிழ்ச்சி கொண்டன. அந்நிறுவனங்களின் பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்தன. முதலாளிகளின் அலட்சிப் போக்கால் மட்டுமே இந்நோய் தோன்றியது ஒருபுறமாக இருந்தாலும். இந்நோயின் பிறப்புக் குறித்து இன்றும் மர்மங்கள் நிலவுகின்றன.

முதலாளியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் உயிரியல் போரில் இறங்கியிருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆங்கிலப் படங்களிலும், ‘ஈ’ போன்ற தமிழ்ப் படங்களிலும் கூட இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1960களில் இது போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. புற்றுநோய் ஆராய்ச்சியை முன்வைத்து இச்சோதனைகள் தொடங்கின. AIDS: A Biological Warfare என்ற ஆங்கில நூலில் தமிழக மருத்தவர் புகழேந்தி அவர்கள் எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமொரிக்காவில் அமைக்கப்பட்ட MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals என்ற திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1965 இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் இதற்கெனவே இயங்கி வந்தது. உயிரியல் சோதனை மட்டுமல்லமால் தனது சொந்த மக்கள் மீதே கதிர்வீச்சு சோதனை நடத்திய “திருப் பணி”களையும் இவ்வாய்வுக்கூடம் மேற்கொண்டதன் காரணமாக இக்கூடத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அரசோ தொடர்ந்து ஆய்வுக்கூடங்களை இடம் மாற்றியதேத் தவிர ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அமெரிக்காவின் வழக்கறிஞர் பாய்ட் கிரேவ்ஸ் என்பவர் எழுதிய State Origin: The Evidence of the Laboratory Birth of AIDS என்ற புத்தகத்தில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை இயக்குநர் பசீரெல்லா(A.H.Passerella - Director, Department of Defence, USA) எழுதியக் கடிதம் ஒன்றின் மூலம் இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். (பக்கம் 180)

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம், உயிரியல் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வல்லாதிக்க நாடுகளின் சோதனைகளின் ஒரு பகுதியாகக் கூட இந்நோய்க் கிருமி உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நோய்க் கிருமியின் உள்ளடக்கம் வலுத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ‘ரென்ஸ்.காம்’ (Rense.com) என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இக்கிருமியின் உட்கூறுகளாக பறவைக் காய்ச்சல் (Avian flu) மனிதக் காய்ச்சல்களுக்குக் காரணமான ‘ஏ’ ப்ளூ வகை(Human flu Type A) மற்றும் ‘பி’ ப்ளூ வகை(Human flu Type B), ஆசியாவில் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu) மற்றும் ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பு வகையாக இக்கிருமி உள்ளது. பத்திற்கு ஒன்று (1/10%) விழுக்காட்டில் தான் இயல்பு நிலையில் இவ்வாறான வடிவத்தை இக்கிருமி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறுகிய காலகட்டத்திலேயே நான்கு கண்டங்களில் உருவான பல்வேறு கிருமிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக இக்கிருமி இருப்பதால் இது சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என இவ்விணையம் ஐயம் எழுப்புகிறது.

தற்பொழுது இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளையும் வழங்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி யிருக்கிறது. முதலாளிகள் தலைமையிலான நாடுகளின் வல்லாதிக்க நோக்கிலும், முதலாளிகளின் லாபவெறியிலும் உருவாக்கப்படும் புதுப்புது நோய்களாலும், மருந்துகளாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படுவது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே ஆவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்முறைத் தற்காப்பு என்பதை விட காய்ச்சலுக்கு மருந்துகளை முன் வைப்பதிலேயே இவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள மண்ணின் மரபுக்கேற்ற வாழ்முறையும், உணவு முறையுமே நமக்குக் கேடயமாக வீற்றிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2009 இதழிலிருந்து...)

Saturday, August 08, 2009

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும் பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும்

பத்தாம் வகுப்புத் தேர்வு நீக்கமும்
பள்ளிக் கல்வியை விழுங்கும் திட்டமும்
க.அருணபாரதி


ஜி-20 மாநாடு

உலகமயத்தின் பேயாட்டத்தால் சீரழிக்கப்பட்ட இயற்கை, வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என மனித குலத்தை ஆபத்தில் தள்ளயிருக்கின்றது. முதலாளிய நாடுகள், இதனை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் முதலாளியப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரவும், தோய்ந்து போயிருக்கும் பொருளாதாரச் சுரண்டலை விரைவுபடுத்தி விரிவுபடுத்தவும் திட்டம் தீட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தான் அரங்கேறியிருக்கிறது, அண்மையில் இலண்டனில் நிகழ்ந்த பெரும் - 20 நாடுகளின் ‘ஜி-20’ கூட்டம்.

இம்மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியது, இங்கிலாந்து அரசு. வளர்ந்த முதலாளிய நாடுகளில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையை தகர்த்தெறிய ‘வளரும்’ நாடுகளின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற ‘அதிமேதாவி’த் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது தற்பொழுது ஏற்பட்டிருக்கும் மந்தநிலையின் மீட்சிக்காக, சுமார் 1.1. ட்ரில்லியன் டாலர், அதாவது 55 இலட்சம் கோடிகள் தேவை என இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தொகை ஏற்கெனவே முற்றுகையில் தவிக்கும் முதலாளிய நாடுகளிடமிருந்து வெளிப்படப் போவதில்லை. மாறாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் மூலம் வளரும் நாடுகளிடமிருந்து பெறப்பட்டு வங்கி முதலாளிகளின் மூலம் முதலாளிய நாடுகளுக்குப் போய்ச் சேரும். முதலாளிய நாடுகளும் சர்வதேச அமைப்புகளுக்கு நிதி அளிப்பதுப் போல பாசாங்கு செய்து விட்டு, இவற்றை கபளீகரம் செய்து கொள்ளும். உலகமயத்தால் கொழுத்துத் திரிந்த போது ‘ஜி-8’ என்று சுருங்கிக் கிடந்த முதலாளிய நாடுகள், தன்னிலை ஆட்டம் கண்டுள்ளதால் தற்பொழுது ‘ஜி-20’ என ‘வளரும்’ நாடுகளையும் சுரண்டல் நோக்கோடு வலிந்து சேர்த்துக் கொண்டன. இந்த ‘பெருந்தன்மை’யை வியந்தபடி முதலாளிய நாடுகளுக்கு புகழாரம் சூட்டுகிறார், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

மேலும், இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதை ‘வளர்ந்த’ நாடுகள் ‘வளரும்’ நாடுகளுக்குக் கொடுத்த அங்கீகாரம் என்கிறார். ஆம், அங்கீகாரம் தான். ‘வளரும்’ நாடுகளை சுரண்டி அடிமைப்படுத்துவதற்கு, அந்நாடுகள் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட ‘அங்கீகாரம்’ இது. இக்கூட்டம் நிகழ்ந்த அடுத்த மாதத்தில், சீனா ஆதிக்கம் செலுத்தும் ‘hங்காய் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், இந்த சுரண்டல் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தும்படி கோரிக்கையும் விடுத்தார். முதலாளிய நாடுகளின் விருப்பம் போல் உலகப் பொருளாதாரத்தில் ‘டாலர்’ ஆதிக்கம் செலுத்தவதை முறியடிக்க சீனா, ஜி-20 மாநாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியுற்றதைப் பற்றி கடைசிவரை மன்மோகன் சிங் எதுவும் சொல்லாமல் தவிhத்து, அமெரிக்க விசுவாசம் பேணிணார்.

காங்கிரசு அரசின், இது போன்ற அமெரிக்க விசுவாச நடவடிக்கைகளுக்கும், தீவிர உலகமய ஆதரவுப் போக்கிற்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் வெற்றி என்று யாரேனும் கருதுவார்களானால், அது உண்மை அல்ல. அதிகரித்துக் கொண்டிருக்கும் விலைவாசி, வேலையிழப்புகள், எதிர்காலம் குறித்த உத்திரவாதமின்மை என மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக விளங்கும் உலகமயத்தை, தீவிரமாக அமல்படுத்தும் இது போன்றக் கட்சிகளை மக்கள் மன்றத்தில் சரியான முறையில் அம்பலப்படுத்தி தோலுரிக்காமல் விட்டதே, இக்கட்சிகளின் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

யஷ்பால் பள்ளிக்கல்விச் சீர்த்திருத்தப் பரிந்துரைகள்

மனித வாழ்வின் அடிப்படை உரிமைகளை விலைபேசி விற்று வருகின்றது உலகமயம். கல்வியும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகமயத்தின் வரவால் கல்வி ஏற்கெனவே முழுமையாக வணிகமயமாகிவிட்ட நிலையில், தற்பொழுது ‘சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அக்கல்வி மேலும் சீரழிகின்றது.

பள்ளிக் கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பேராசிரியர் யஷ்பால் தலைமையிலானக் குழுவினரின் அறிக்கை 24.6.09 அன்று இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபிலிடம் வழங்கப்பட்டது. கல்வி வணிகமயமாவதையும், நிகர்நிலைக் பல்கலைக்கழகங்கள் கல்வியை விலை பேசுவதையும் இவ்வறிக்கை சில இடங்களில் சாடுகின்றது. இது போக, அவ்வறிக்கையில் மத்திய அரசிற்கு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் இரத்து செய்யப்பட வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ. உள்ளிட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு அகில இந்தியாவிற்குமான ஒரு புதிய கல்வி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை தான் இப்பரிந்துரைகளில் முதன்மையானவை.

இவ்வறிக்கையை பெற்ற பின்னர், 25.06.09 அன்று புதுதில்லியில் அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்வுகளால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் இது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டே பத்தாம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய மத்திய அரசு விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அகில இந்தியா முழுவதுக்குமான ஒரே பள்ளிக் கல்வி வாரியத்தை ஏற்படுத்தவும், வெளிநாட்டுக்குச் சென்று பயிலும் இந்திய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கே அழைத்து வரவும் நடுவண் அரசு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 23.06.09 அன்று ‘தி டெலிகிராப்’ ஏட்டிற்கு அளித்த பேட்டி ஒன்றில், நடுவண் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஆசிரியர் பணிநியமனத்தின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படத் தேவையில்லை என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிகவும் நகைப்புக்குரியதாகும். ஆசிரியர் பணி நியமனத்திக்கு போதிய அளவிற்கு தகுதியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் கிடைக்க வில்லை என்பதாகும். ‘சமூகநீதி’ வேடமிட்டு மறைந்திருக்கும் காங்கிரஸ் கபடதாரிகள் இப்படித்தான் அவ்வப்போது அம்பலப் படுகின்றனர்.

நடுவண் அரசிற்கு சொந்தமான உயர்கல்வி நிலையங்களின் ஆசிரியர் பணி நியமனங்களில் மட்டுமல்லாது, தனியார் கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அவரைக் கேட்டால், இது குறித்து ‘தேசிய’ அளவில் பொதுக் கருத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்.

மாணவர்களின் நலன் கருதியே பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து செய்யப்படுகின்றது என்று தோன்றினாலும், இதற்குள் பல்வேறு சூட்சமங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

இந்தியாவில், பள்ளிக் கல்வியுடன் கல்வியை முடித்துக் கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 1990- 1991 ஆம் கல்வியாண்டில், 42.6% விழுக்காடாக இருந்தது. இவ்வெண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு அரசுகளாலும் பல்லாயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்ட நிலையிலும் கூட 2004 ஆம் ஆண்டு வெறும் 40.67% விழுக்காடாகவே குறைந்தது. (பார்கக்க் : தி டைமஸ் ஆப் இந்தியா, 19, சனவரி 2004). இது தற்பொழுது சுமார் 39% விழுக்காடாக உள்ளது. மேலும், பள்ளிக்கல்வி பெறும் மாணவர்களில் வெறும் 11% விழுக்காட்டினரே கல்லூரி வரை சென்று படிக்கின்றனர் என்பதும் கூடுதல் தகவலாகும் (பார்க்க : டெக்கான் க்ரானிக்கல், சூன் 27, 2009.) இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரே என்பதை இன்றைய சூழ்நிலையில் சொல்லி விளங்க வைக்கத் தேவையில்லை.

இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து என்பது இவர்களை பள்ளிக் கல்வியை விட்டே ஓரங்கட்டும் நடவடிக்கையாகவும் அமையும். மேலும், பொதுத் தேர்வு இரத்து செய்யப்பட்டு ஆசிரியர்களிடம் மாணவர்கள் மதீப்பீட்டிற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது ஆசிரியரின் விருப்பு வெறுப்பு மதீப்பீடாக அமையவே வாய்ப்புள்ளன. மேலும், ஆசிரியர் மாணவர் உறவில் இது விரிசலையும் உண்டாக்கும். எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பிடுதலும், ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ச்சியான முறையில் மதிப்பீடுதலும் கூடிய மாற்றுத் தேர்வு முறை அவசியமாகின்றது. எனவே, பொதுத் தேர்வு இரத்து என்பது எதற்கும் தீர்வல்ல.

இன்றைய சூழ்நிலையில் மனஅழுத்தங்களுக்கு மிக முக்கியக் காரணிகளாக விளங்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தலைமை தாங்கும் உலகமயத்தை விரட்டுவதை விட்டுவிட்டு, மாணவர்களின் கல்வியில் கைவைப்பது முரணாக உள்ளது.

மாநிலக் கல்வி வாரியங்களைக் கலைத்து விட்டு, அகில இந்தியாவிற்குமான பொது பள்ளிக் கல்வி வாரியம் ஏற்படுத்துவதென்பது, இந்தியாவில் தேசிய இனங்களுக்கு எஞ்சியிருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்கும் ஒடுக்குமுறைத் திட்டமாகும். மேலும், இந்தித் திணிப்பிற்கும் இது வழிவகுக்கும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள், அதன் மாநிலக் கல்வி வாரியங்களைக் கொண்டு அந்தந்த இனத்து மக்களின், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை ஓரளவாவது தெரிந்து கொள்வதற்கான ஏற்பாட்டையும் இது சிதைத்து விடும். இதைத் தான் இந்தியத் தேசியக் காங்கிரஸ் விரும்புகிறது. எதிர்க்கட்சி என்பதால் தான் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல பாசாங்கு செய்கிறது, பாhப்பனீய பா.ச.க. ஒரு வேளை, பா.ச.க. ஆட்சியிலிருந்தால், இதே போன்ற திட்டத்தை அமல்படுத்தி ‘அகண்ட பாரத’க் கனவுகளை மாணவர்களுக்கு அள்ளி விட்டிருப்பார்கள்.

சொந்தநாட்டு மக்களின் உழைப்பையும் உடைமைகளையும் அயலானுக்குத் திறந்து விட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது கல்வியிலும் அதனை செய்யத் துடிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புகுந்து வணிகம் செய்திட அவற்றை அனுமதிக்கக் கோரும் ‘வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குமுறை மசோதா’வை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறார், கபில் சிபில்.

ஆஸ்திரேலியாவில் வடநாட்டு மாணவர்கள் மீது நடைபெற்ற இனவெறித் தாக்குதல்களைத் தவிர்க்கவே இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கத் தேவை எழுந்துள்ளது என்றும் வாதிடுகின்றார், கபில் சிபில். அமெரிக்கா உள்ளிட்ட ‘வளர்ந்த’ நாடுகள் பெரும்பாலானவற்றில் உயர் கல்வி அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றவை என்பதும் தனியார் பல்கலைக்கழகங்கள் அங்கு குறைவு என்பதும் மத்திய அமைச்சர் கபில் சிபில் அறியாததல்ல. இருந்த போதும், அது குறித்து அலட்டிக் கொள்ளாத கபில் சிபில், கல்வியில் தனியார் நிறுவனங்கள் போடும் ஆட்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளும் ‘நன்கொடை’ என்ற பெயரில் நடத்தி வரும் வசூல் வேட்டையை, பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், கண்துடைப்புக்காக சில கல்லூரிகளில் சோதனை நடத்திவிட்டு பிரச்சினை, தீர்ந்ததென்று செயல்படுகின்றது தமிழக அரசு. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கல்வித் துறையை கூறுபோடுவதற்கு தில்லி ஏகாதிபத்தியம் திட்டமிட்டுக் கொண்டிருக்க, ‘மாநில சுயாட்சி’ பேசும் தமிழக அரசோ, கண்மூடிக் கொண்டிருக்கிறது.

Wednesday, June 24, 2009

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!

இந்தியத்தின் அடிமைகளே!
இனியாவது விழித்தெழுங்கள்!

க.அருணபாரதி


நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

Wednesday, February 25, 2009

”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“ - கையெழுத்து இயக்கம் - படிவம்

"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்"
கையெழுத்து இயக்கப் படிவம்
இளந்தமிழர் இயக்கம் வெளியீடு
தஞ்சை, 24-02-2009.
"மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவோம்" என்ற மாவீரன் முத்துக்குமாரின் கட்டளையை நிறைவேற்றும் முகமாக மாணவர்கள். இளைஞர்கள். வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் "இளந்தமிழர் இயக்கம்", தமிழ் உணர்வுள்ள நல் நெஞ்சங்களின் ஆதரவோடு இன்று(25-2-09) தமது முதல் செயல் திட்டமான "தமிழீழ அதரவு பரப்புரைப் பயணத்தை" தொடங்கவிருக்கிறது.
அத்துடன் "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெற்றிடும் கையெழுத்து இயக்கமும் தொடங்கப்படுகின்றது. (அதற்கான படிவம் மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.) பயணத்திற்கும் இக் கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்து நாடுகள் கடந்து வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வேளையில் எமது கடமைகளையும் பொறுப்புகளையும் நாம் உணர்ந்திருக்கிறோம். அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் உறுதி கூறுகிறொம்.
"தமிழீழ ஆதரவு பரப்பரைப் பயண"த்திற்க்கு உதவிட விரும்பும் ஆர்வலர்களும், ஆங்காங்கே வரவேற்புகள் கொடுக்க விரும்பும் ஆதரவாளர்கள் கைபேசியிலும், தனி மடலிலும் தொடர்பு கொள்ளவும்.
மேலும் இவ்வியக்கத்தில் இணைந்திட விரும்பும் நேசமிகு உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம். தமிழீழ ஆதரவு, தமிழர் உரிமைப் பாதுகாப்பு என்ற இரு நோக்கங்களை மட்டும் முதன்மை படுத்தி தேர்தல் அரசியலை புறந்தள்ளிவிட்ட தன்னலம் கருதாது இனநலம் மட்டுமே கருத்தில் கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள். வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்தவர்கள் என அனைவரும் இவ்வியக்கத்தில் சேர்ந்து இவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக கட்டமைக்கும் அரும்பணியைச் செய்யலாம்.
குறிப்பு : இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அவரவர் தமது சக்திக்கேற்ப நகலெடுத்து (முதல் பக்கம் மட்டும் நகலெடுத்துவிட்டு அடுத்த பக்கங்கள் எண்களை வரிசையாக போட்டுக் கொள்ளவும்) பரப்புரை மேற்கொண்டு எத்தனை கையெழுத்துகள் சேகரித்த "இன எழுச்சி மாநாடு" நடைபெறும் நாளுக்கு முந்தைய தினமான 5-மார்ச்- 2009 அன்று மாலைக்குள் எம்மை வந்தடையமாறு செய்யுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
பேச : 9841949462
கே.ராஜாராம்
நிர்வாகக் குழு
பேச : 9894310997
கையெழுத்து படிவங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
இளந்தமிழர் இயக்கம்,
44-1, பஜனைக் கோவில் தெரு,
முத்துரங்கன் சாலை,
தியாகராயர் நகர்,
சென்னை-17.

Monday, February 23, 2009

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
 
             ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
             பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழினம் இன்று நாதியற்ற நிலையில் உள்ளது. ஈழத்தில் தமிழர்களை மலைமலையாகக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசுக்க எதிராக 10 கோடி தமிழர்கள் உலகெங்கும் இருந்து போராடியும் கூட நமக்கு சர்வதேசம் செவிசாய்க்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவின் சிங்களச் சார்பு நிலைபாடே.  தமிழகத்தில் உள்ள இந்தியத் தமிழர்களை சிறிதளவும் இந்திய அரசு மதிக்கவில்லை என்பதும் புலனாகிறது.
 
             ஈழத்தமிழர்களின் உயிர் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழகத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் தமிழின விரோதியாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகின்றது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழினத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கூட தடை செய்யப்படுகின்றது.
 
இளந்தமிழர் இயக்கம்
             இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து போராட வேண்டுமென்ற நோக்கில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர், உழவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு நீண்ட விவாதத்திற்கு பின் அக்குழு ஒரு இயக்கமாக செயல்பட ஒருமனதாக முடிவெடுத்தது. அவ்வியக்கத்திற்கு "இளந்தமிழர் இயக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ ஆதரபு பரப்புரைப் பயணம்
             இவ்வியக்கத்தின் சார்பில் தமிழீழ மக்கள் மீது சி்ங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் இன அழிப்புப் போர் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்ள "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படுகிறது. இப்பயணத்தின் போது தமிழீழ மக்களின் இன்னல்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, வீதி நாடகங்கள், குறும்படங்கள் திரையிடல் என பல்வேறு வழிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
 
பயணத்தின் தொடக்க விழா
             பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சையில் 25-02-09(புதன்) அன்று நடக்கிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன்,  ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்திப் பேசி பயணத்தை தொடக்கி வைக்கின்றனர்.
 
"காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" - கையெழுத்து இயக்கம்
             பயணத்தின் போது "இன விரோத காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. பயணத்தின் முடிவில் 6-3-09(வெள்ளி) அன்று சேலத்தில் "இன எழுச்சி மாநாடு" நடக்கிறது. அதில் இக்கையெழுத்துகள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.

க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
பேச - 9841949462
 
தொடர்புக்கு :
 
கோ.ராஜாராம்,
நிர்வாகக் குழு,
பேச - 9894310997
 

Monday, February 16, 2009

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏!






ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும்,

 தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது.


 
இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்" இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் அவைத்தலைவர் தே.சரவணன் உண்ணாப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் தலைவர் தே.சத்தியமூர்த்தி, பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைச் செயலாளர் க.ஆனந்த் 'இந்திய அரசின் தமிழினத் துரோகம்' என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.


 
ராஜபட்சேவின் அரக்கத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது படத்தின் முன் செருப்புகளை விட்டு "மரியாதை" செய்யப்பட்டது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மாண்ட தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படித்தார். ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
இப்போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.சுகுமாரன், புதுச்சேரி மாநில மிதிவண்டி வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் டாக்டர். மகான், விடுதலைச் சிறுத்தைகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.பாவாணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.இளையபெருமாள், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், பெரியார் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.


 
உண்ணாப்போராட்டத்தின் இறுதியில் காங்கிரசின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டு அதன் அரசியல் ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினது க.அருணபாரதி பேசினார். மேலும் அந்த ஆவணங்களை பரவலாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.



உண்ணாப்போராட்டத்தை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினார்.

வெளியிடப்பட்ட ஆவணங்கள்:








நன்றி  www.tamilseythi.com தமிழ்ச் செய்தி இணையதளம்

-----------------------------------------------------------
தோழமையுடன்
      க.அருணபாரதி
  www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Wednesday, February 04, 2009

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் ‘இந்தி’யம் - க.அருணபாரதி

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்
க.அருணபாரதி

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம். நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டுவீச்சிலும் பீரங்கித் தாக்குதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் மக்கள் 'தஞ்சமடைவதற்காக' என்று சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது சிங்கள இனவெறிப் படை பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. தொகை தொகையாக குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் உதவிப் பொருட்களை வாங்குவதற்காக பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது சிங்களப்படை நடத்திய உக்கிரத் தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஐ.நா. உட்பட பல நாடுகள் இந்த அரச பயங்கரவாதச் செயலைக் கண்டித்தன.

வன்னியில் பலநூறு பேர் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளும் மருத்துவர்களும் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா.அமைப்பே தெரிவித்துள்ளது. இந்த நிலையிலும் கூட தொடர்ந்து வரும் பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்களால், சிங்கள இராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதிகள், உயிரைக் காப்பதற்காக ஓடி வரும் தமிழ் மக்களை ஒரே இடத்தில் குவியச் செய்து குண்டு போட்டு கொன்றழிப்பதற்கான பொறி தானோ என்ற ஐயம் பலமாக எழுந்துள்ளது.

Erode tanks 1995களில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிங்கள இராணுவம், அப்பொழுது யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த தற்போதைய சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையலில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தும் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் நடத்திய வெறியாட்டமும் செம்மணியில் குவியல் குவியலாக தமிழர் உடல்கள் புதைக்கப்பட்டதையும் மனித நேயம் கொண்ட யாராலும் மறந்திருக்க முடியாது. தற்பொழுது உயிர் பிழைக்க வவுனியா வந்து தஞ்சம் புகுந்திருக்கும் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் அதே போன்தொரு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுரம், பொலநறுவ உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள காட்டுப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் உடல்கள் எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிப்பட்ட சிங்கள அரசின் தொடர்ச்சியான தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் உலகில் இனப்படுகொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை ஏற்கெனவே சேர்த்து பட்டியலிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு. அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன், "மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்" என சிங்கள அரசை வெளிப்படையாக தற்பொழுது கண்டித்துள்ளார். சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, கோத்பாய ராஜபக்சே மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது ஐ.நா.மன்றத்தில் இனப்படுகொலைக் குற்றம் இழைத்தற்கான வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. மேலும், ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளை சார்ந்தவர்களும், ஊடகவியல் அமைப்புகளும் சிங்கள அரசின் பாசிசப் போக்கைக் கண்டித்து வருவதால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையிலும் கூட, சிங்கள அரசுடன் 'நல்லுறவு' பேணுகிறதாம் 'இந்தி'யா. சொந்த மக்களை குண்டு போட்டு அழித்து, கொலைகாரன் என்று உலகமே அடையாளம் காட்டும் ஒருவனுடன் 'நல்லுறவு' பேணத் துடிப்பவனுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்?

ஈழத்தில் போரை நிறுத்த வேண்டுமென தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக சட்டமன்றம் இருமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று இந்தியப் பிரதமரிடம் வலிறுத்தி வந்தனர். இத்தனைக்குப் பிறகும், போர் நிறுத்தம் பற்றி கவலையே கொள்ளாததற்குக் காரணம், 'இது இலங்கை நடத்தும் போர் அல்ல. இந்திய அரசு தானே தலைமை தாங்கி சிங்களவனை வைத்து நடத்தும் போர்' என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கண்டு கலக்கமுற்ற தி.மு.க. அரசு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இலங்கைக்கு செல்லுமாறு வேண்டிக் கேட்டது.

அவருக்குப் பதிலாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். தமிழர்களின் கோரிக்கையான போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தத்தான் அவர் இலங்கை சென்றார் என்று நம்பிய 'இந்தி'ய தமிழர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசினார், சிவசங்கர மேனன். போர் நிறுத்தம் பற்றி வாயே திறக்காமல் 'நல்லுறவு' பேணுவதற்காகத் தான் சென்றேன் என்று கொழும்பில் கொழுப்புடன் தெரிவித்திருந்தார்.

இறந்து போன ஒரு பெண் பேராளியின் உடலைக் கூட இனவெறி பிடித்த சிங்கள இராணுவ மிருகங்கள் சின்னாபின்னாமாக்கிய செய்தி மனிதநேயம் கொண்ட அனைவரது நெஞ்சத்தையும் கலங்கச் செய்தது என்றாலும் ஒருவேளை 'இந்தி'ய அரசுக்கு இச்செயல் நிறைந்த மகிழ்ச்சியளித்திருக்ககூடும். அதனால் தான், இறந்து போன ஒரு தமிழ்ப் பெண்ணின் உடலுக்கே இது தான் கதி என்ற நிலைமையை ஏற்படுத்தி 'சனநாயகத்தை' நிலைநாட்டியிருக்கிற சிங்கள இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை 'உலகின் தலைச்சிறந்த இராணுவத் தளபதி' என்று நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் சிவசங்கர மேனன். அப்பொழுது தான் அவரது கொழும்பு வருகையின் உள் அர்த்தம் புரிந்தது. தில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்திக்கக் கூட பயந்து ஓடிய இந்த பார்ப்பான் தான் 'இந்தி'ய நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளராம்.

தமிழினம் மீது தீராத பகை கொண்ட ஆரிய பார்ப்பனிய இனவெறி 'இந்தி'ய அரசு, சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து செய்து வரும் ஆயுத, ஆள், நிதி உதவிகள் அவ்வப்போது அம்பலப்படும் பொழுதெல்லாம் தமிழக காங்கிரசார் தொடர்ந்து மறுத்து வந்தனர். பின்னர் கலைஞரை முன்னிலையில் வைத்துக் கொண்டே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு வழங்கப்பட்ட தற்காப்பு உதவிகள் தாம் அவை' என்று செய்தியாளர்கள் முன் அறிவித்தார். தில்லிக்கு தமிழகத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிச் செயல்களில் 'முதல்வரான' முதல்வர் கருணாநிதி இதனை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தார். தமிழனைக் கொல்வது தான் ஆரிய 'இந்தி'யத்திற்கு பாதுகாப்பா? என்று கேட்டால், 'நாம் ஆயதம் தராவிட்டால் சீனா தந்துவிடுமாம்' கூச்சமின்றி சொல்கின்றன துரோக காங்கிரசின் வெக்கங்கெட்ட 'தலைகள்'.

இந்தியா இப்பொழுது ஆயுத உதவி செய்துவிட்டதால் சீனாவோ பாகிஸ்தானோ தான் செய்த உதவிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளன. இறுதிப் போர் என்று சீனாவிடம் அண்மையில் கூட 120 பீரங்கிகளை பெற்றுள்ளது சிங்கள அரசு. இவை போதாதென்று ஈரோட்டில் மக்கள் பார்க்கும் விதமாக தைரியமாகவே கொச்சின் துறைமுகத்திற்கு பீரங்கிகள் அனுப்பி அங்கிருந்து இலங்கைக்கு வழங்கியிருக்கிறது 'இந்தி'யா. மேலும் தஞ்சை விமானப்படைத் தளத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்ததையடுத்து அத்தளத்தை இழுத்து மூடக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன.

எனவே, காங்கிரஸ்காரர்களுக்குத் தேவை, தமிழனைக் கொல்ல ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்த ஒரு காரணம் தானே தவிர இந்தியாவின் பாதுகாப்பு மண்ணாங்கட்டியெல்லாம் அல்ல என்பதை உணர முடிகின்றது. இந்தியா பீரங்கிகள் வழங்கிய தினத்துக்கு மறுநாள் தான் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் பீரங்கித் தாக்குதலால் மரணமடைந்தனர் என்ற செய்தி நம்மையடைந்தது. அதனால் தானோ என்னவோ, 'நம்ம பீரங்கி நல்லாத்தான் வேலை செய்கிறது போல..' என்றெண்ணி பிரணாப் முகர்ஜி உடனே ஓடோடி சென்று ராஜபட்சே பிரதர்ஸ்ஸூடன் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் 'நல்லுறவு' பேணவும் கொழும்பு சென்றார். 'போரை நிறுத்துங்கள்' என்று தமிழகமே உரக்கக் கத்தினாலும் அடிமைகள் குரல் எடுபடாது என்று செவிமடுக்காமல் சிங்கள அரசைத் தட்டிக் கொடுக்கும் காரியங்களில் தொடர்ந்து 'இந்தி'யா ஈடுபட்டிருக்கின்றபோது இனியும் இங்கு எவனாவது 'இந்தி'யன் என்று சொல்லிக் கொண்டு திரிவானா?

மேலும், தற்பொழுது போரில் ஈடுபட்டுள்ள சிங்கள இராணுவத்தினரின் படங்களை சிங்ள இராணுவத்தின் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில படங்கள் 'இந்தி'யப் படைகள் இப்போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்று பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையில் சார்க் மாநாட்டின்போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் பெருந்தொகையான இராணுவம் கொழும்பு சென்றது. மாநாடு முடிந்து இந்தியப் பிரதமர் திரும்பிய பின்னரும் கூட பாதுகாப்பிற்கு சென்றவர்கள் திரும்பவில்லை. ஏன்? இவர்கள் எங்கே சென்றார்கள்? ஒருவேளை கொழும்பில் தொலைந்து விட்டார்களோ..!?

மகாராட்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்நாடு மீது இந்திய அரசு போர் தொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகளவில் இதனை பெரும் பிரச்சனையாக்குகின்றது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாடக் கூட செல்லக் கூடாது என அறிவுறுத்துகிறது. சரி அது இருக்கட்டும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சுட்டுக் கொன்றழிக்கும் சி்ங்கள கடற்படைக்கு 'இந்தி'ய அரசு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? சுட்டுக்கொல்லப்பட்டு செத்து மடியும் தமிழக மீனவன் 'இந்தியன்' இல்லையா? 'இந்தி'ய அரசுக்கு ஏனிந்த இரட்டை வேடம்?

Indian army officers in Srilanka தற்பொழுது ஈழத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழக மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது சி்ங்களக் கடற்படை. இதனைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் அணியை இலங்கையுடன் விளையாட அனுப்பி வைக்கிறது 'இந்தி'ய அரசு. நமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள நாட்டுடன் விளையாடச் செல்கிறோமே என்ற குற்றவுணர்வு இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கும் ஏற்படவில்லை; ஏற்படாது. ஏனெனில் தமிழர்களை 'இந்தி'யர்களாக அவர்கள் பார்ப்பதே கிடையாது. நாம் தான் வெக்கமின்றி 'ஜனகணமண' பாடிக் கொண்டு 'இந்தி'ய அடிமைகளாகவே வாழ்ந்து தொலைக்கிறோம்.

மும்பை தாக்குதலை நடத்த கடல்வழி ஆயதங்களுடன் வந்தவர்களை தடுக்கத் துப்பில்லாத இந்திய கடற்படை, விடுதலைப்புலிகளுக்கு காய்கறி செல்கிறதா, கம்பிகள் செல்கிறதா என தமிழக மீனவர்களை பிராண்டி எடுத்து, தனது வலிமையைக் காட்டி வருகின்றது. இதுவரை ஒரு தமிழக மீனவனைக் கூட சிங்களவனின் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து காக்க வக்கில்லாத 'இந்தி'யக் கடற்படை 'வீரர்'கள், தமிழக மீனவப் பகுதிகளில் புலிகள் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் தமிழர்களின் பிணங்கள் விழுந்து கொண்டுள்ளன என்று நன்றாக அறிந்து வைத்து கவிதை படிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, பொறுமையாக மூன்று வாரங்கள் கழித்து பிப்ரவரி 15ஆம் தேதி கூடி அடுத்ததென்ன என ஆராய்வோம் என்று அறிக்கை விடுகிறார். காலம் தாழ்த்தித் தரப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது என்பதனை அறியாதவரல்ல கலைஞர். ஈழத்தமிழர்களின் உயிரை விட பதவிக்காக காத்திருக்கும் தனது குடும்பத்தினரின் எதிர்காலம் முக்கியமானதல்லவா அவருக்கு? அந்த பிப்ரவரி 15, இந்த ஆண்டு பிப்ரவரி அல்ல என்று அறிவிக்கக்கூடிய வார்த்தை ஜாலம் கலைஞரிடம் நிறையவே உண்டு என்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் 'தேசத் துரோகிகள்' என்று அறிவிக்கிறார், அ.திமு.க. தலைவி செயலலிதா. அவரது சொற்படியே பார்த்தால், விடுதலைப் புலிகளை உறுதியுடன் ஆதரிக்கும் ம.தி.மு.க. என்ற 'தேசத் துரோகிக்' கட்சியுடன் கூட்டு சேர்நது செயல்படும் அ.தி.மு.க. ஒரு தேசத் துரோக் கட்சியே! இஸ்ரேலின் குண்டு வீச்சில் பலியான அப்பாவி மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடத் தெரியும் அ.தி.மு.க.வின் ஆரிய இன அருந்தவப் புதல்வியிடம், ஈழத்தமிழர்களின் உயிர் போவது குறித்துக் கேட்டால் 'அப்பாவிகள் மரணமடைவது தவிர்க்கமுடியாதது' என சிங்களவர்கள் கூட சொல்லாத சொற்களை வாய்கூசாமல் சொல்லத் தெரிகிறது.

இவற்றுக்கெல்லாம் நடுவே, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசோ போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கிறார். அவரது முகத்திரையை அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரசே கிழிக்கிறது. "நீங்கள் தான் தில்லி அரசில் இருக்கிறீர்களே அங்கே போய் சொல்றது இதெல்லாம்" என்கின்றனர் காங்கிரசார். பாவம், 'இந்தி'யப் பிரதமரே கதி என்று தில்லி மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கும் சுகாதரத்துறை அமைச்சரான அவரது அருமைப் புதல்வர் அன்புமணி ராமதாஸ் என்ன செய்வார் இதற்கு..!

இந்தக் கட்சிகள் மட்டுமல்ல தமிழனத்திற்கு விடிவு வேண்டுகிற எந்தக் ஓட்டுக் கட்சியானாலும் சரி, 'இந்தி'யத் தேசியத்தை ஆதரிப்பதன் மூலம் ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழனுக்கும் சேர்த்து கல்லறை கட்ட தில்லிக்கு கல் எடுத்துக் கொடுக்கிறோம் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக ஓட்டுக் கட்சிகளின் இந்தக் கூத்தாட்டங்களுக்கு நடுவே, மக்கள் நடமாட்டமே இல்லாத சில நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு 'வெற்றி! வெற்றி!' என சிங்கள அரசு போடும் வெறிக்கூச்சலை வாந்தி எடுக்கும் செயலை இந்திய உளவுத்துறை ஆசியுடன் ஊடகங்கள் செய்து கொண்டுள்ளன. 'தினமலர்' போன்ற பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல தனது சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டிருப்பதை, புதுச்சேரியில் தனது நிருபரை வைத்தே ராசீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு விட்டு விடுதலை சிறுத்தைகள் தாம் செய்தனர் என்று பக்கம் பக்கமாக எழுதியதும், பின்னர், கையும் களவுமாக பிடிபட்டதும் உணர்த்துகின்றன.

தமிழர்களின் இந்த இழிநிலையையும் தமிழின விடுதலையையும் உரிமையையும் வலியுறுத்திப் பேசிய பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் போன்ற தலைவர்களை அடையாளம் காட்டும் இனத்துரோகச் செயலை தமிழகக் காங்கிரஸ் செய்கிறது. அந்த துரோகத்திற்கு துணைபோகும் வகையில் அதன் கைக்கூலிகள் அவர்களை சிறையிலடைக்கின்றனர்.

ஓட்டு அரசியல்கட்சிகளின் இச்செயல்களை எல்லாம் தாண்டி போர் நிறுத்தம் வலியுறுத்தி தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்துள்ளது நம்பிக்கை தருகின்றது. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டத்தை நசுக்குகின்ற கொடிய நொக்குடன் தமிழக அரசு அம்மாணவர்களை கைது செய்கிறது. உடல்நிலை மோசமாகி 4 மாணவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தித் திணிப்பில் ஈடுபட்ட தில்லியைக் கண்டித்து 1965களில் மாணவர்கள் முன்னெடுத்துச் சென்ற தமிழ்த் தேசிய எழுச்சியைப் போல இப்பொழுதும் ஏற்பட்டு விடுமோ என தமிழக அரசு அஞ்சுகிறது. பல கல்லூரிகளுக்கு அதன் முதல்வர்கள் விடுமுறை அளித்திருப்பதன் மூலம் மாணவர்கள் போராட்டத்திற்காக ஒன்று கூட விடாமல் தடுத்து விடலாம் என்றும் அரசு எண்ணுகிறது.

தமிழினத்தின் விடியலுக்காக தானே எழுச்சி கொள்ளும் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அலறியடித்து ஓடும் தமிழின எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்ட அணி திரள்வோம். தமிழ்த் தேசிய எழுச்சியின் மூலம் பாசிச சக்திகளை அடையாளம் காண்பதோடு அல்லாமல் அவர்களுக்குப் பாடை கட்டுவோம்! வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஈழத்தமிழனின் ரத்தத்தின் மேல் கம்பளம் விரித்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டுக் கேட்டு வரும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வரலாறு காணாத பாடம் புகட்டுவோம்! ஓட்டுக் கட்சிகளை அனைத்தையும் தூக்கி எறிந்து, 49-ஓ பிரிவைக் கையிலெடுப்போம்!

Monday, February 02, 2009

அவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்

அவசரச் செய்தி :
உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது
காவல்துறையினர் தாக்குதல்

சென்னை, 2-2-09.


ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர்.
 
செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட  உண்ணா போராட்ட்தின் போது, "நீங்கள் விடுதலைப் புலிகளா?" என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர்.
 
இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின்   காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
 
அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இது குறித்த கண்டனங்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமால் இச்செய்திகளை கைபேசி, மின்னஞ்சல் மூலமாக அனுப்பி செங்கல்பட்டு களத்திற்கு சென்று நேரில் உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 

Thursday, January 29, 2009

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசையும் அதற்கு துணை பொகம் இந்திய அரசையும் கண்டித்து தீக்குளித்து வீரமரணியம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

செய்தி: விகடன்

குறிப்பிடத்தக்க பதிவுகள்