Wednesday, April 21, 2010

உலகமயம் உருவாக்கிய நவீன சாமியார்கள் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)





  • பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அவரது ஆசிரமங்கள் தாக்கப்பட்டன.



  • கல்கி பகவான் என்றறியப்பட்ட சாமியாரின் மடத்தில். அவரது பக்தர்களுக்கு போதை மருந்து கொடுத்திருந்தது அம்பலமானது.



  • சங்கரமடத் தலைவர் காஞ்சி ஜெயந்திரர், கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானார்.



  • சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு வைத்துக் கொண்ட கிறித்தவ ஆயர்களை போப் ஆண்டவர் அனுமதித்திருந்தது, அம்பலமானது.


சமயவாதிகள் என சமூகத்தில் அறியப்படும் மேற்படியானவர்கள் அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், மாட்டிக் கொள்வதும் அன்றாடச் செய்திகளுள் ஒன்றாகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் இந்தச் சாமியார்களிடம் சென்று சிக்கிக் கொள்ளும் நிலை, அதிகரித்துள்ளதன் காரணத்தை ஆராய்வது நமக்கு அவசியம்.


நித்தியானந்தரின் மோசடி அம்பலமானவுடன், தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘என்ன தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாலும் இந்த மக்கள் திருந்தப்போவதில்லை’ என்றும் தெரிவித்திருந்தார். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தேர்தலில் போட்டியிடும், தன் ‘கழகக் கண்மணி’களைக் கூட பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, திருத்த முடியாத கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையானது.

மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்ட காரணத்தால், ஊடகங்களுக்கு, ஏதோ சமூகப் பொறுப்புணர்வு வந்துவிட்டதாக நாம் கருதிக் கொண்டால் அது பிழையே ஆகும்.

சாமியார்களின் புனிதப் பிம்பத்தை உடைத்தெறியும் முன்பு, கோடிகளில் திரைமறைவு பேரம் நடத்தப்பட்டு, அதில் உரிய விலை கிடைக்கப் பெறாத காரணத்தினாலேயே, இந்த மோசடிச் சம்பவங்கள் வெளியிடப்பட்டிருக்கக் கூடும். பரபரப்புக் காட்சிகளை வெளியிட்டுக் காசாக்குவதில் கைதேர்ந்த, ஊடகங்களுக்கு இதில் நிச்சயம் பங்கு இருந்திருக்கும்.

ஏனெனில், நித்தியானந்தரோ, கல்கியோ சாதாரணமானவர்கள் அல்லர். பல்வேறு நாடுகளில் தனது ஆசிரமங்களின் கிளைகளைப் பரப்பி, அதிகார வர்க்கத்தினருடன் கை குலுக்கி நின்றவர்கள். முற்றும் துறந்த துறவிகளான இவர்களின் சொத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடானவை. உலகமய காலகட்டத்திற்கு முன்பிருந்த, குறிச்சொல்லும் காவிச் சாமியார்களல்ல இவர்கள். மாடமாளிகைகள் போல ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு, கண்டம் விட்டு கண்டம் பறந்தோடி, கோடிகளில் விளையாடுகின்ற நவீன உலகமய சாமியார்கள் தான் இவர்கள்.

நித்தியானந்தர் போன்ற மோசடிச் சாமியார்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாக முன்னின்று உழைத்த ஊடகங்கள், இன்று அவர்களது மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும் முன்னிற் கின்றன. ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடர் மூலம் நித்தியானந்தாவிற்கு அடையாளம் கொடுத்த ‘குமுதம்”, அவரது காமலீலைகளை தம் இணையதளத்தில் வெளியிட்டு காசு சம்பாதிக்கவும் கூச்சப்படவில்லை. ‘நாங்களும் ஏமாந்து விட்டோம்’ என்று அப்பாவி பக்தர்களைப் போல் இதற்கு ஒரு சமாதானமும் கூறிக் கொண்டது. ஊடகங்களின் இந்த கூச்சமற்றத் தன்மை தன்னிலிருந்து பிறந்ததில்லை. தம்மை இயக்கும் முதலாளியத்திலிருந்து பிறந்தது அது.

கடவுள் நம்பிக்கையின் பெயரால், சோதிடப்பலன், எண் கணிதம், கைரேகை என பல்வேறு நம்பிக்கைகளை வீட்டிற்குள் திணிக்கும் தொலைக்காட்சிகளும், அவற்றையே பிரதானமாகக் கொண்ட பத்திரிக்கைகளும், உழைக்கும் மக்களிடையே அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை கிளறிவிடுகின்றன. இதன் விளைவாக, மக்கள் இது குறித்த ஆழ்ந்த சிந்தனையிலேயே விழுந்து கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தமது மொழி, இனம், கல்வி, வாழ்வாதாரம் என சராசரி மனிதர்களின் உரிமைகள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய உலகமயச் சூழலில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் இந்த ‘எதிர்காலம் குறித்த அச்சம்’ என்ற காரணி, மதங்களின் இருப்புக்கு உதவுகிறது.

முதலாளியத்தின் உழைப்புச் சுரண்டலால் தம் வசந்தங்களை இழந்து, ஒடுக்கப்பட்டு நிற்கின்ற உழைக்கும் மக்கள், தம் அவலங்களுக்கு காரணம் முதலாளியமே என்று எளிதில் உணர்ந்து விடுவதும் இல்லை. அவ்வாறு அவர்கள் உணராததற்கு முக்கியக் காரணியாக மக்களிடையே நீடிக்கும் கடவுள் நம்பிக்கையும் விளங்குகிறது. தாம் அறிந்து கொள்ள முடியாத பலவற்றுக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பித்துக் கொள்கிற ‘சமரச’ மனநிலையே இதனை தீர்மானிக்கிறது.

இதன் பின்னணியில் தான், ‘தம் பிறப்பையும், தம் வாழ்வையும், தம் துன்பங்களையும் தீர்மானிப்பது கடவுள் தான்’ என்று, தமக்குத் தாமே கற்பிதம் செய்து கொள்ளுமாறு உழைக்கும் மக்கள் பணிக்கப்படுகின்றனர். அதனை அவர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டும் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கையின் பெயராலும், விதியின் பெயராலும், உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதனால் தனியுடைமை யானது மக்களிடம் நிலவும் கடவுள் நம்பிக்கையை நிறுவனமயப்படுத்துகிறது. மதநிறுவனங்களை வளர்த்து விடுகிறது.

உழைக்கும் மக்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய உலகமய காலகட்டத்தில், உழைக்கும் மக்கள் கொடுந்துன்பம் அடைந்து வருகின்றனர். வேலை வாய்ப்பில் ஒரு நிச்சயமற்ற நிலை, சிறு தொழில் - வணிக நிறுவனங்கள் தொடர முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மன உளைச்சலிலேயே உழல்பவர்கள் அதிகம். மக்கள் தம் துன்பங்களுக்கு மருந்து தேடி மத நிறுவனங்களிடம் சிக்குவதும் அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்கள் தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள சிறு சிறு சாமியார்களிடமும், படித்த - நடுத்தர வர்க்க மக்கள் நித்தியானந்தர் போன்ற நவீன சாமியர்களிடமும் சிக்குகின்றனர்.

இதே காலகட்டத்தில் தான், சுரண்டும் மேட்டுக் குடியினர் தம் சுரண்டலின் மூலமாக கிடைத்த பணத்தை பதுக்கிக் கொள்ளவும், அந்தச் சுரண்டலுக்கு துணை போன அரசியல்வாதிகள் தம் கருப்புப் பணத்தை பதுக்கிக் கொள்ளவும் ஓர் இடமும் தேவைப்பட்டது. அவ்விடத்தையும் இந்த நவீன சாமியார்களே நிறைவு செய்தனர்.

சுரண்டி சேர்த்துப் பதுக்கியப் பணம் குறித்த கவலையால் நிம்மதியிழக்கும் மேட்டுக்குடியினர் “எதையோ” இழந்து விட்டதாகப் புலம்பியபடி இந்த நவீன சாமியார்களிடம் தான் வருகிறார்கள். அண்மையில், தில்லியில் ‘ஜீவ் முராத் திவிவேதி என்ற சாமியார் பகலில் யோகம், தியானம், சொற்பொழிவு என்று நடித்து விட்டு, இரவில் விபச்சாரத் தரகு வேலை பார்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டு கைதான பெண்கள் பலரும் படித்த, நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்கள் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த நவீன சாமியார்கள் குறிவைத்து, இழுப்பதும் இது போன்ற பின்னணி கொண்டவர்களைத் தான். பணக்கார வெளிநாட்டு பக்தர்களின் மனநிலையும் கூட அது தான். இவ்வாறு தான் இந்த நவீன சாமியார்கள் உருவெடுக்கிறார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள், பொருளியல் ரீதியாக தமக்குக் கீழானவர்களிடமும் அன்பு செலுத்துதல், வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி, மனம் திறந்து பேச ஏற்பாடு செய்தல், தமது மன உளைச்சலை போக்கும் விதமாக அவர்களை நடனம் ஆட விடுதல், வாய்விட்டு கத்தக் கூறுதல், ’பேரானந்தம்’ - ‘மகிழ்ச்சி’ போன்ற பற்பலப் பெயர்களிட்டு அவர்களை மனம் விட்டு சிந்திக்கக் கூறுதல். இவை தான் இந்த நவீன சாமியார்கள் செய்பவை. இதற்காக ஆயிரக்கணக்கில் அவர்கள் கட்டணம் வசூலிப்பதும் உண்டு. சொற்பொழிவுகளுக்கு, சில மணிநேரங்கள் அவருடன் கழிக்க, அவர் ஆசிர்வாதம் செய்வதற்கு என இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதும் உண்டு.

மன உளைச்சலுக்கு ஆளான தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பலரும் இந்த நவீன சாமியார்களின் பிடியில் விழுவது இன்று அதிகரித்துள்ளது. மன உளைச்சலைப் போக்க அந்த சாமியார்கள் கொடுக்கும் பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. சின்னஞ்சிறு குழுந்தைகளிடம் குடும்ப உறவுகளிடமும் மனம் விட்டுப் பேசினால் கூட மன உளைச்சலைப் போக்கி விடலாம் ஆனால், கணினி, கைப்பேசி என நீண்ட நேரம் இயந்திரங்களுடன் இயங்கியே பழகி விட்ட, இவர்களுக்கு மனிதர்களுடன் பழகுவது அபூர்வமானதல்லவா? உயிரற்ற இயந்திரங்களுடன் வாழ்ந்து, உயிருள்ள இயந்திரங்களாகவே மாறிப் போன தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இதற்கென்று நேரம் வேண்டும் அல்லவா? எனவே, இதற்கென தனியாக நேரம் ஒதுக்கி அவர்கள் நவீன சாமியார்களை நாடுகிறார்கள்.

“மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!” என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதியத் தொடர், இந்த நோக்கிலேயே எழுதப்பட்டது. 2008ஆம் ஆண்டு உலகமயப் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின், உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்தப்பட்டதால், உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை போக்கும் விதமாக வெளிவந்த சின்னத்திரை சிரிப்பு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதன் பின்னணியிலும், உலகமயமே நிற்கிறது. கிராமங்களை அழித்த உலகமயம், நகரங்களில் இளைஞர்களை இடம் பெயர்த்ததன் பின்னணியில் தான், கிராமத்துக் கதைப் பின்னணி கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் வெற்றி பெற்று ஓடியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிராம வாழ்வை இழந்த இளைஞர்கள் இவ்வாறான படத்தில் ஆறுதல் அடைகிறார்கள்.

இவ்வாறு, உழைப்புச் சுரண்டலால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் மக்கள், பிறரோடு அன்பாக தாம் பேசுவதற்கும், பழகுவதற்கும் கூட ஓரு சாமியாரின் வழிகாட்டுதலுக்காக நிற்க வேண்டிய அவல நிலையை, உலகமயம் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.

இந்தச் சாமியார்கள் இதற்கென பல்வேறு பயிற்சிகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலகமயம் வலியுறுத்துகின்ற நுகர்வியப் பண்பாட்டையும், தம் போதனைகள் வாயிலாக புதிய வகையில் மக்கள் மனதில் புகுத்தும் வேலையை செய்கிறார்கள். இதற்காகவே, இவா;களை மேலும் ஊக்கமளித்து வளர்க்கின்றன, ஊடகங்கள். இந்த போதனையைத் தான் உலகமயமும் அதனால் பயன்பெறுகின்ற ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன.

‘இன்றுள்ள சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு யோசிங்கள்’ என்கிறது உலகமயம். அதனையே இந்த நவீன சாமியார்களும் வழிமொழிகிறார்கள்.

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.

‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.

அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.

இலாப வேட்டைக்காக காத்து நிற்கும் உலகமயம், ‘அனைத்துப் பொருட்களையும் நுகருங்கள்’ எனக் கூறுகின்றது. அதனையே, “அத்தனைக்கும் ஆசைப்படு” என்கிறார்கள், இந்த நவீன சாமியார்கள்.

‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.

பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல் செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.

மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு - வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.

சிறீ சிறீ ரவிசங்கர், ராமர் பாலத்தை முன்னிறுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துக் கொண்டுள்ளார். இட ஒதுக்கீட்டையும் ரவிசங்கர் எதிர்க்கிறார். நித்தியானந்தர் தலைமறைவானதும் இந்து மதவெறிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் தான் செய்தியாளர்களை சந்தித்தார்.

எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.

வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே உயர் ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.

இதைப்புரிந்து, காரணங்களுக்கு எதிராகப் போராடுவதே மக்கள் விடுதலைக்கு வழி.

(தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Tuesday, April 13, 2010

ஹைத்தி: ஏகாதிபத்தியத்தின் பிண அரசியல் - க.அருணபாரதி

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

கடுமையான நிலநடுக்கத்தால் குலைந்து போயுள்ளது, ஹைத்தி தீவு. கடந்த சனவரி 12ஆம் நாள், அத்தீவைக் குலுக்கிய 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களின் படி, சுமார் 1.5 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.

அந்நாட்டின் தலைநகரான, போர்ட் ஆவ் பிரின்ஸ் (Port – Au - Prince) நகரின் 8 மருத்துவமனைகள் நிலநடுக்கத்தால் நொறுங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பலர், தாம் இன்னும் தொட்டுக் கூடப் பார்க்காத நோயாளிகள் பலர் காத்துக் கிடக்கின்றனர் என்றும், பலர் இரத்தமின்றியும் உயிர்காக்கும் மருந்துகள் இன்றியுமே உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

அந்நாட்டில், போதிய மருத்துவர்களும் மீட்புக் குழுவினரும் இல்லாததால் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான முழுகட்டமைப்புகளும் அந்நாட்டில் இல்லாததால், அந்நாடு சர்வதேச சமூகத்திடம் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஹைத்தியின் இக்கோரிக்கையை பயன்படுத்தி, அங்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஒரு பெரும் பேரழிவு நடந்த இடத்தில், “மீட்புக்குழு” என்ற பெயரில் பிணங்களை தள்ளிவிட்டு, ஆதிக்கம் செலுத்தத் துணிந்திருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். ஹைத்தி மேல் அமெரிக்காவிற்கு இருக்கும் இந்த ஆதிக்கவெறிக்கும் ஒரு வரலாறு உண்டு.

சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட தீவு ஹைத்தி தீவாகும். இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஒரு நாளைக்கு, வெறும் 2 டாலர்கள்(அதாவது ரூ.90) வருமானம் பெறுகின்றனர். 18ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு காலனியாக இருந்த ஹைத்தியில், கருப்பின மக்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்துள்ளன. கருப்பர்களின் அரசு என அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளை இனவெறி நாடுகளால் ஹைத்தி வர்ணிக்கப்படுவதும் உண்டு. கருப்பர்களை அடிமைகளாக்கி அவர்களது உழைப்பை ‘கருப்புத்தங்கம்’ என்றும் வெள்ளையர்கள் அழைத்து வந்திருக்கின்றனர்.

தொழில்மயமாவது என்ற பெயரில், வேகவேகமாக காடுகள் அழிக்கப்பட்டு. தற்பொழுது, வெறும் 2 விழுக்காடு காடுகள் மட்டுமே அங்கு எஞ்சியுள்ளன. இவற்றின் விளைவாக, இந்த இரு நூற்றாண்டிகளில் நடக்காத மிகப்பெரிய நிலநடுக்கத்தை அந்நாடு உணர்ந்திருக்கிறது.

1990களில் முதன் முறையாக சனநாயக வழியில் ஹைய்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜீன் பெட்ரான்ட் ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் மூலம் தூக்கியெறியப்பட்டார். ஜீன் பெட்ராண்ட் நாடு கடத்தவும் பட்டார். அப்போது அதிபர் பதவி ஏற்றிருந்தவர் பில் கிளிண்டன். 1994இல் ஹைய்திக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பியதும் இவரே. இன்று அவர் தான் ஹைய்தி நிலநடுக்கம் குறித்த தகவல்களை அமெரிக்க அரசிற்கு உடனுக்குடன் வழங்கும் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒபாமா அறிவித்துள்ள இன்னொரு பிரதிநிதி வேறு யாருமல்ல. ஈராக்கிலும் ஆப்கனிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்களாலும் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஜார்ஜ் புஷ் தான் அவர். இவர்கள் இருவரும் ஹைய்தியில் நடக்கும் நிவாரணப் பணிக்கான நிதி திரட்டும் அமைப்புகளுக்குத் தலைமை தாங்குவார்களாம். இந்த இருவர் நியமனத்திலிருந்தே, அமெரிக்காவின் நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்திக்கு, நிவாரணப் பணிகளுக்காக, பொது நிதியிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா 10 கோடி டாலர்கள் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு மாதம் ஒன்றிற்கு செலவிடப்படும் தொகையில் நூற்றிலொரு பங்கு இது. இது தவிர, ஜெர்மன் நாடு 2.2. இலட்சம் டாலர்களைக் கொடுக்கின்றதாம்.

அரசியல் நிலையற்ற தன்மை, சூறையாடப்பட்ட பொருளியல் என திக்குமுக்காடிய ஹைத்தியில் அவ்வப்போது உள்நாட்டுக் கலகங்கள் வெடிப்பதுண்டு. இதனால் ஐ.நா. பாதுகாப்புப் படைகள் சுமார் 12,000 பேர் அங்கு ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் இணைந்து பிற நாட்டு மீட்புக்குழுவினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தற்பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைத்திக்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளெல்லாம் உதவிகளையும், மீட்புக்குழுவினைரையும் அனுப்பி வந்த நிலையில், ஹைத்தியின் மிக அருகில் உள்ள அமெரிக்காவிலிருந்து ஆள் வரவில்லை. ஹைத்திக்கு மிக அருகில் உள்ள மியாமியிலும் பூர்ட்டொரீகொவிலும் அமைந்துள்ள அமெரிக்க தளங்களிலிருந்து கூட ஹைத்தியில் மீட்பு உதவிகளுக்கு யாரும் வரவில்லை. விசாரித்துப் பார்த்தப் போது, ஹைத்தியில் ‘பாதுகாப்புக் குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தனர், அமெரிக்க பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகள். நிலநடுக்கத்தால் அந்நாட்டு அதிபர் மாளிகையே சிதறிக்கிடக்கும் நிலையில், அங்கு அமெரிக்கா எதிர்பார்க்கும் ‘பாதுகாப்பு’ இல்லையாம்.

நீண்ட யோசனைக்குப்பின், ஹைய்தி கடற்கரையை அமெரிக்கா அனுப்பிய, ‘கார்ல் வின்சன்’ (USS Carl Vinson) என்ற கப்பல் வந்தடைந்தது. நிவாரணப் பொருட்களும், மருத்துவர்களும் வந்திருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ஹைய்தி மக்களுக்கு, அதிர்ச்சியும் ஏமாற்றமுமே மிஞ்சியது.

அக்கப்பல், 19 ஹெலிகாப்டர்களை கொண்ட விமானம் மற்றும் ஏவுகணைகளைத் தாங்கிய போர்க்கப்பல் எனத் தெரிந்தது. இவ்வளவு மனிதநேயமிக்க அமெரிக்க அரசின் அதிபருக்கு ‘நோபல் பரிசு’ கொடுக்கப்பட்டதை எண்ணி அம்மக்கள் தன் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான். நீண்ட யோசனைக்குப் பின், அக்கப்பலிலிருந்து 3 மருத்துவர்கள் இறங்கினர். அவர்கள் அமெரிக்கா சார்பாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளனராம் நாம் நம்பித்தான் தொலைக்க வேண்டும்!

இது தவிர 2000 பேரோடு, USS Bataan எனப்படும், தரையிலும் கடலிலும் சென்று தாக்கக்கூடிய அமெரிக்கப் போர்க்கப்பல் ஹைய்தியை நோக்கிப் புறப்பட்டுவிட்டது. இவற்றோடு, 82வது விமானப்படைப் பிரிவின் 3500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஹைய்தியில் களமிறங்கியுள்ளனர். முன்பெல்லாம் ஹைத்தி மீது ஆக்கிரமிப்பு செய்திட போர் புரிந்து அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். இப்பொழுது அக்காரியத்தை நிலநடுக்கம் செய்து விட்டதால், அமெரிக்காவிற்கு ‘நல்வாய்ப்பாகி’ விட்டது.

ஆக மொத்தம், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் சேர்ந்த சுமார் 12,000 அமெரிக்க இராணுவத்தினர் ஹைய்தி தீவை நோக்கி குவிக்கப்படுகின்றனர். இவற்றோடு உலகை நம்ப வைக்க வேண்டும் என்ற கட்டாயத்திலோ என்னவோ 300 மருத்துவர்களையும் கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா.

23.01.10 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளண்டன் ஹைய்தி அதிபர் ரேனே ப்ரேவல் ‘அழைப்பின்’ பேரில், அந்நாட்டுத் தலைநகரான போர்ட்-ஆவ்-பிரின்ஸ் நகருக்கு வருகை தந்தார். ஹைய்தியில் இறக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கும் அதிகாரங்களை வழங்கும்படியான சட்ட திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என அப்பொழுது அவர் வலியுறுத்தினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு நடக்கவிருக்கும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கான பங்கு என்ன என்பதும் குறித்தும் பேச்சுகள் நடந்தன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்கள் என எங்கும் சோகமயமான சூழலில் ஹைய்தி தலைநகரம் தத்தளித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், உலக உணவுத் திட்டத்தினர் (World Food Program - WFP) வழங்கும் நிவாரண உதவிகளை அம்மக்கள் பெறுவதற்குப் போட்டியிடுகின்றனர். இதனால், ஆங்காங்கு விநியோகித்தல் தொடர்பான சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இவற்றைக் காரணம் காட்டி, நாடு சிச்கலான பாதுகாப்பற்றச் சூழலில் இருப்பதாக வர்ணித்தார், ஹைய்திக்கான அமெரிக்க இராணுவத் தளபதி கென் கீன். அதற்காகவே, இந்த இராணுவப்படைகள் வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஹைய்தி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்தை அமெரிக்க இராணுவம் அதன் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அங்கு வந்திருந்த பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் நாட்டு விமானங்கள் கூட தரையிறங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவசரகால மருத்துவமனையை தாங்கி வந்த பிரான்ஸ் விமானத்தை அமெரிக்க இராணுவம் தடுத்ததை, ஹைய்திக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் டிட்டியர் லீ பிரெட் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னார்ட் குஷ்நெர் ஆகியோர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பின்னர், இவ்வறிக்கை ஏனோ சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 12 டன் மருந்துப் பொருட்களை கொண்டு வந்திருந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் விமானம், 3 முறை திருப்பி அனுப்பப்பட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. செஞ்சிலுவை சங்க விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறுகின்றனர். ‘அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த தீவிரச் சிந்தனை உயிர்களைக் காப்பாற்றுவதையும் தடை செய்கிறது’ என ‘இன்டர்வன்சியா’ Intervencion, Ayuday Emergencia எனப்படும் ஸ்பெயின் நாட்டு உதவிக்குழுவும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தது. இலங்கை முதல் துருக்கி வரை உதவியுள்ள தாம் இவ்வாறான செயல்பாடுகளை வேறெங்கும் எதிர் கொண்டதில்லை என்றும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

ஹைய்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட, சின்னஞ்சிறிய நாடான கியூபாவிலிருந்து மட்டும் 344 மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்க, உலகையே ஆள்வதாக பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலிந்து வெறும் 300 மருத்துவர்கள் மட்டுமே வந்தனர். ஹைய்தி நிவாரணப் பணிகளுக்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ (Doctors without Borders) அமைப்பு மட்டும் 800 மருத்துவர்களை அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் எண்ணிக்கை வியப்பையும் அதிர்ச்சியையுமே தருகின்றது.

இழவு வீட்டில் ஆதிக்கம் செலுத்த முனையும், அமெரிக்காவின் இது போன்ற இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஒன்றும் புதிதானதல்ல. 1993ல் பஞ்சத்தால் சீர்குலைந்து போன சோமாலியாவில் நுழைந்து, மேலாண்மை செய்த “பெருமை” இவர்களையே சேரும். அமெரிக்காவின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு உலகெங்கும் உள்ள மனிதநேயர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியது கடமை.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Saturday, April 10, 2010

அலைவரிசைப் பயன்பாடும் ஊழல் பண்பாடும் - க.அருணபாரதி


அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட முதலாளியம், அவ்வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டதன் மூலம் இலாப வெறியுடன் கூத்தாடுகின்றது. இதன் உச்சகட்டமாகத் தான், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3ஜி அலைவரிசைப் பயன்பாடு.

வடநாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே நடுவண் அரசின் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்புத் துறை நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அலைவரிசை சேவை, சென்னையில் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1860களில் உலகெங்கும் உள்ள தந்திச் சேவைகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union- ITU) எனப்படுகின்ற அமைப்பு, தற்பொழுது, உலகளவில் மின்காந்த அலைவரிசைகளை தொலைத் தொடர்புப் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கும் அவற்றை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இவ்வமைப்பு, அலைவரிசைகளை அதன் தன்மையையும், பயன்பாட்டையும் வைத்து, அவற்றை ஒன்றாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என பிரிக்கின்றது. முதல் தலைமுறை என்பது கம்பியில்லாத் தொலைத் தொடர்புக் கருவிகளான வாக்கி - டாக்கி போன்ற கருவிகளின் செயல்பாட்டை உள்ளடக்கியது. இரண்டாம் தலைமுறை என்பது, நாம் இன்றைக்கு பெரும்பான்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்பியில்லாக் கைபேசிக் கருவிகளைக் கொண்டது.

அவ்வகையில் “மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்” எனப்படுகின்ற Third Generation – 3G என்ற அலைவரிசைப் பயன்பாடு, நவீன வசதிகளைக் கொண்டதாகும். குரலொலிகளையும், குறுந்தகவல்களையும், படங்களையும் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியே பரிமாறிக் கொள்ளும் வகையில் இருக்கின்ற, தற்போதைய இரண்டாம் தலைமுறை கைபேசி அலைவரிசைக்கு பதிலாக, இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வலிமை கொண்ட 3ஜி மூன்றாம் தலைமுறை அலைவரிசைக்கு மாற்றப்படும்.

இதன் மூலம் இனி இணையம், தொலைக்காட்சி, பேசுபவரை பார்த்துக் கொண்டே பேச வழிவகுக்கும் ‘ஒளிப்படக் கலந்துரையாடல்’ (வீடியோ கான்பிரன்சிங்) வசதி, போன்ற பல சேவைகளை நாம் கைபேசியிலேயே பெறலாம்.

இரண்டாம் தலைமுறை கைபேசிகள் பரிமாறிக் கொள்ளும் தகவலுக்கான இடத்தை(Space) இந்த 3ஜி அலைவரிசையின் மூலம், அதிகரிப்பதால், அதிகமானத் தகவல்களை நாம் பறிமாறிக் கொள்ள முடிகின்றது. எனவே தான், இந்த அலைசரிசையை வைத்து நன்கு சம்பாதிக்க இயலும் என்பதால் இவற்றை வாங்குவதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இவ்வகை புதிய அலை வரிசையை, உலகமய பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் விலை பேசவும், இதற்கான அனுமதி உள்ளிட்டவற்றை பேரம் பேசித் தரகு வேலை புரிவதற்கும், அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 10 பேரைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் நடுவண் அரசு நியமித்திருந்தது நினைவிருக்கலாம். இதில், திட்டக்குழுத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் அடக்கம்.

நாட்டின் உணவு தானியக் கையிருப்பு குறைந்து வருவது குறித்தோ, விவசாயிகள் தற்கொலை குறித்து விசாரிக்கவோ எந்த சிறப்பு அமைச்சர்க் குழுவையும் அமைக்காத இந்த அரசு, முதலாளிகளுடன் பேரம் பேச மட்டும் சிறப்பு அமைச்சர் குழுக்களை அமைக்கிறது.

இவ்வாறான, கைபேசி களுக்கான இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வதில் தான், நடுவண் தகவல் தொடர்புத் துறை அமைச்சரான இராசா, சுமார் 60,000 கோடி ரூபாய் பணத்தை ஊழல் செய்து சுருட்டியிருக்கிறார். ‘சுதந்திர’ இந்தியாவின் வரலாற்றில் இவ்வளவுப் பெரியத் தொகை சுருட்டப்பட்டது, இதுவே முதல் முறை என்ற போதும், தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறும் ஊழல்கள் இது ஒன்றும் புதிதல்ல.

கலாநிதி மாறன் குடும்பத்தினருக்கும், கருணாநிதிக்கும் இடையே தகராறு நிலவிய போது, மாறன் சகோதரர்களின் சன் தொலைக்காட்சி, தினகரன் இதழ் ஆகியவை இந்த ஊழல் குறித்து பெருமளவில் பெரிதாக செய்தி வெளியிட்டன. அமைச்சர் இராசாவும், தயாநிதி மாறன் பதவியில் இருந்த போது அரசுக்கு சுமார் 10, 000 கோடி நட்டம் ஏற்பட்டதை அம்பலப்படுத்தினார்.

முதலாளிகள் எப்பொழுதும், அவர்களைப் பாதுகாக்கும் முதலாளிய அரசு இயந்திரத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை. இதன் பின்னணியில் தான் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் சமரசம் ‘பேசி’க் கொண்டது, மாறன் குடும்பம். அமைச்சர் இராசாவின் அலைக்கற்றை ஊழலை, மாறன் குடும்பமும், ஊடகங்களும் அத்தோடு மறந்தன.

1980களில் பெரும்பாலும் கம்பிகளைக் கொண்டே இயங்கி வந்த தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இன்று கம்பியில்லா தொழில்நட்பமாக(Wireless Technology) முன்னேறி இருக்கிறது. இந்த முன்னேற்றம் வெறும் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமல்ல, உலகமய முதலாளிகளின் பணச் சுரண்டலுக்கான தேடலின் வளர்ச்சியும் கூட.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 52.56 கோடி மக்கள் தொலைபேசி, கைபேசி இணைப்புகளை பெற்றிருக்கின்றனர். மேலும், மாதத்திற்கு சுமார் 1 கோடிய 30 இலட்சம் புதிய கைபேசி இணைப்புகளை பெற்றுத் தரும் பெரும் சந்தையாக, இந்திய தொலைத் தொடர்புத் துறை சந்தை விளங்குகின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால், உலகமய நிறுவனங்களுக்கு இத்துறையில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகின்றன என்பது எளிதில் விளங்கும்.

1990களில் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில், இலாபத்தில் இயங்கிய அரசுத்துறை நிறுவனங்களை வெளிப்படையாக, முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது எப்படி என கண்டறிந்து, நடைமுறைப் படுத்துவதை, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. தொடங்கி வைத்தது. அப்பொழுது தான்,பெருமளவில் அரசே ஆதிக்கம் செலுத்தி வந்த தொலைத் தொடர்புத் துறையை தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் முறைகளைக் சட்டரீதியாகக் கண்டறிந்து, தொலைத் தொடர்புத் துறை ஊழல் முறைகேடுகளுக்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது.

உலகமயத்தின் வரவால், உலக வங்கி, பன்னாட்டுத் தொலைத் தொடர்பு ஒன்றியம்(ITU), இந்திய முதலாளிகளின் அமைப்பு (CII) போன்ற பல்வேறு முதலாளிய அமைப்புகள் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீடு என்ற பெயரில், தனியார்மயத்தை ஏற்படுத்த நடுவண் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன. இதன் பின்னணியில் தான், இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 74 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதை நாம்
காண்கிறோம்.

நரசிம்மராவ், தனியார் தொலைத் தொடர்புத் துறையை முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிடுவதற்கு உதவியாக, 1994இல் ‘தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை’ (National Telecommunications Policy [NTP]) என்ற கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அப்போது நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம், வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை(சி.பி.ஐ) 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 3.61 கோடி ரூபாயை கட்டுக்கட்டாகக் கைப்பற்றியது.

விசாரித்ததில், இதனை அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சீத்தாராம் கேசரி தான் தம்மிடம் கொடுத்ததாக அப்பாவித்தனமாகக் கூறினார், சுக்ராம். இது குறித்து, சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையின் விளைவாக தொலைத் தொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமாயின. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த, அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்ஸ்(Advanced Radio Masts - ARM) என்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு முறைகேடாக தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்கியதில் ஊழல் நடந்தது தெரியவந்தது. இந்த மோசடி நிறுவனத்தை நடத்துபவர் ஏற்கெனவே அமைச்சர் சுக்ராமுடன் இணைந்து ரேடியோ ரிலே சிஸ்டம்ஸ் Radio Relay Systems எனப்படும் தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் நடந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, தரகு வேலை பார்த்து வரும், தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு ஆணையம் (Telecom Regulatory Authority of India -TRAI) என்ற அமைப்பு, இதன் பின்னர் தான் 1997 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் அரசின் இந்த ஊழல்களில், ‘பாடம்’ படித்த பா.ச.க., தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமய பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும் சட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்பொழுது நடுவண் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், இந்தத் தரகு வேலைகளின் மூலம் பெருமளவு முதலாளிகளை வசப்படுத்தி, கட்சிக்கு நிதித் திரட்டினார். ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இன்டிகாம் என தொடர்ந்து வடநாட்டு பன்னாட்டுத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சந்தை மட்டுமே இங்கு விரிவுபட வேண்டும் என்ற உள்நோக்குடன், அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியை வேண்டுமென்றே மட்டுப்படுத்தியப் ‘பெருமை’, இவரையே சேரும்.

இக் காலகட்டத்தில் தான், அயல்நாட்டுத் தொலைபேசி அழைப்பு களை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் றுவனம் மோசடி செய்தது அம்பலமானது. இது கண்டுபிடிக்கப்பட்டு அந்நிறு வனத்திற்கு விதிக்கப்பட்ட சிறு அபராதத் தொகையும் கூட இரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு ஊழல்களைக் கடந்து தான், அதன் உச்சகட்டமாக அமைச்சர் இராசா நடத்திய சட்டப்பூர்வமான ஊழலும் நடந்தேறியிருக்கிறது. அமைச்சர் இராசா, திரும்பத் திரும்ப கூறி வருவது, நடந்தவை அனைத்தும் சட்டரீதியாகத் தான் நடந்தேறியுள்ளது, இவை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும் என்பதைத் தான். சட்டரீதியாகவே நடத்தப்பட்டுள்ள இந்த ஊழலில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பங்குள்ளது என்ற அளவில் தான் அவரதுக் கூற்றை புரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க.விற்கும், காங்கிரசிற்குமான அந்த புரிந்துணர்வு அண்மையில் கூட அம்பலப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக கருணாநிதி கண்டனக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த சில நாட்களிலேயே, அமைச்சர் இராசாவின் அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறையினரால்(சி.பி.ஐ.) சோதனையிடப்பட்டது. அதன் பின்னர், நிலைமையை புரிந்து கொண்ட கருணாநிதி அக்கூட்டத்தை இரத்து செய்தார். ஆக, தி.மு.க.வின் இந்த அலைக்கற்றை ஊழல் குறித்து காங்கிரஸ் பேசாது. காங்கிரசின் அடாவடித்தனங்கள் குறித்து தி.மு.க.வும் பேசாது. இது தான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ராசா கூறும் ‘சட்டப்படியான’ இவ்ஊழல், நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள முறை நாம் அறிந்தது தான். பொதுப்படையான ஏலம் விடப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அலைவரிசைகளை, முதலில் வரும் நிறுவனத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், தனக்கென அலுவலகம் கூட இல்லாத போலி நிறுவனங்களுக்கான ஸ்வான், யுனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது, அமைச்சர் இராசாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.

இந்த அலைவரிசையை 2001ஆம் ஆண்டு என்ன விலைக்கு ஏலம் விட்டார்களோ அதே விலையில் தான் இப்பொழுதும் ஏலம் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சுமார் 60,000கோடி மதிப்புள்ள அலைவரிசைகளை வெறும் 3000 கோடிக்கு விற்றனர். தனக்கென சொந்தத் தொலைத் தொடர்புக் கருவிக் கூட இல்லாத நிறுவனங்களுக்கு தான் இதுவும் விற்கப்பட்டது. அலைவரிசையை பெற்றுக் கொண்டதைக் காரணம் காட்டி, அந்த போலி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை மட்டும் விற்று சுமார் 5500 கோடிக்கும் மேல் சம்பாதித்தன.

இந்த நிறுவனங்களின் பங்குகள் பலவும் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலின் போது மக்களுக்கு வாரி இரைக்கப்பட்ட பணம், இவை போன்ற ஊழல் கொள்ளையிலிருந்து செலவு செய்யப்பட்டது தான் என்று நாம் ஊகித்தால் அது தவறல்ல.

தற்பொழுது, அரசுத்தறையின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 3ஜி எனப்படுகின்ற இந்த புதிய அலைவரிசைப் பயன்பாட்டை வைத்து பெருமளவில் இலாபம் பார்க்க, பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனங்கள் அனுமதி வேண்டிக் காத்துக் கிடக்கின்றன. இந்த அனுமதிக்கான ஏலங்களிலும் நிச்சயம் ஊழல் நிறைந்திருக்கும் என்று நாம் சந்தேகமின்றி நம்பலாம்.

முதலாளிகளின் இலாப வேட்கை மக்களைக் குதறுகின்ற இந்நேரத்தில், மண்ணுக்கேற்ற மாற்றுப் பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியும், மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 இதழ்

குறிப்பிடத்தக்க பதிவுகள்