Thursday, March 04, 2010

நளினி விடுதலை: குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான எனது பேட்டி!

செவ்வணக்கம் தோழர்களே...

நளினி விடுதலை தொடர்பாக கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதில் கொடு்க்கும் விதமாக, இளந்தமிழர் இயக்கம் சார்பில் புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். இது குறித்து “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் வெளியான எனது பேட்டியை இப்பதிவில் இடுகின்றேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித சண்டையும் இல்லை. ஆனால், பலர் என்னிடம் இளங்கோவனை ஏன் திட்டமிட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதற்கான பதில் மிகவும் எளிதானது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எதிரி முகாமின் கோமாளி என்பதே அது.

பேட்டியை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்...

தோழமையுடன்,
க.அருணபாரதி
பேச: 9841949462
சீக்கியருக்கு ஒரு நீதி; தமிழருக்கு ஒரு நீதியா?

‘‘இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கியரை பஞ்சாபில் தியாகியாகக் கொண்டாடுகிறார்கள். அதை எதிர்க்கத் துப்பில்லாத தமிழக காங்கிரஸார், ராஜிவ் கொலை வழக்கில் கு ற்றம்சாட்டப்பட்டு, 19 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி போன்றோரை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.இப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை’ என்று புதிய சூட்டைக் கிளப்பியிருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதியிடம் பேசினோம். முதலில் நளினி விவகாரம் பற்றிப் பேசினார் அவர்.

‘‘ஆயுள் தண்டனை என்பதை 14 ஆண்டுகள் என்று கிரிமினல் நடைமுறைச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த வரையறையை மீறி, தமிழக அரசு பத்தாண்டுக் காலம் தண்டனை அனுபவித்த எத்தனையோ ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்துள்ளது. ஆனால், 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட, ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உள்ளிட்டோருக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இதற்கு அரசியலைத் தவிர வேறு முறையான சட்டக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நளினியின் மனமாற்றம், தாயின்றி வளரும் அவரது குழந்தை உள்ளிட்ட மனிதநேயக் காரணிகளை முன்வைத்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்.அவரை மட்டு மின்றி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை, மனிதர்களை மன மாற்றத்திற்கு உள்ளாக்கி திருத்த வே ண்டுமே தவிர, தண்டிப்பதற்கான சித்திரவதைக் கூடமாகிவிடக் கூடாது என்பதே எங்கள் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்.

நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே அருகதை கிடையாது. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று சொல்ல இவர்கள் என்ன நீதிபதிகளா? நளினி விடுதலை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நளினியை விடு விக்கக்கூடாது என்று
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் கூறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

‘ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நளினிக்கு, அந்தக் கொலை நிகழ்த்தப்பட இருப்பது குறித்து பின்புதான் தெரியும்; தெரிந்த நிலையிலும் கூட அவரால் அதிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலை இருந்தது’ என்று நீதிபதி தாமஸ் அவ்வழக்கின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் புத்திசாலிகள் யாராவது ஒருமுறையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், நீதிபதியின் தீர்ப்பை அப்படியே புறம்தள்ளிவிட்டு, அந்தத் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக, நளினிதான் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தார் என்பதுபோல் ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சித்திரிக்கிறார்கள்.

நளினியை ‘தீவிரவாதி’ என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பேசி வருகிறார். நளினியா தீவிரவாதி? இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களைப் படுகொலை செய்து, சீக்கியப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ்காரர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்! அந்தச் சம்பவத்தை ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்திக் கூட பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைக் கடைப்பிடிக்கத் தெரியாமல் பதவி, பணத்திற்காக கோஷ்டிகள் அமைத்துச் சண்டையிடும் காங்கிரஸ்காரர்கள், தேச ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கேலிக்கூத்து!

பல்கலை மாணவிகள் மூவரை உயிருடன் எரித்துக் கொன்றவர்கள், ரிமோட் குண்டு மூலம் சிவகங்கை தி.மு.க. நகராட்சித் தலைவர் முருகனைக் கொன்றவர்கள், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தா.கிருட்டிணன் போன்றவர்களைப் படுகொலை செய்தவர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை எரித்து அங்கிருந்த மூன்று ஊழியர்களைக் கொன்றவர்கள் எல்லாம் இன்று கட்சி மற்றும் அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் சமூக அந்தஸ்துடன் உலா வருகிறார்கள். அப்படியிருக்க யாரைப் பார்த்து தீவிரவாதி என்கிறார், இளங்கோவன்?

காங்கிரஸ்காரர்கள் ‘அன்னை’ என்று தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, அவரது பாதுகாவலர் பியாந்த் சிங் சுட்டுக் கொன்றார். அந்த பியாந்த் சிங்கை ‘வீரத்தியாகி’ என்று போற்றி எழுதி, பஞ்சாப்பில் உள்ள சீக்கிய மதப்பீடமான பொற்கோயிலில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு ள்ளது. ‘1984-ம் ஆண்டு பொற்கோயில் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக, இந்திராகாந்தியைக் கொல்லும்போது உயிரிழந்த சீக்கிய வீரத்தியாகி, பியாந்த் சிங்’ என்று அந்தப் புகைப்படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறார்கள். பியாந்த் சிங் புகைப்படம் இந்த வாசகங்களுடன் பொற்கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் இயக்கத் தோழர் ஒருவர் நேரில் சென்று பல தடைகளைத் தாண்டி அதைப் புகைப்படம் எடுத்து வந்திருக்கிறார். (அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்)

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டுக்காக நளினியை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துணிவிருந்தால், சீக்கிய மதப் பீடத்தின் இந்தச் செயலைக் கண்டித்து பியாந்த் சிங்கின் புகைப்படத்தை நீக்கக் கோரி ஓர் அறிக்கையாவது விட முடியுமா? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? சீக்கியர்களிடம் ஷூவால் அடிவாங்கியும் கூட, அவர்களுக்கு எதிராகப் பொங்காத இவர்கள், தமிழர்களுக்கு எதிராக மட்டும் குமுறுவது ஏன்? தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்களா? தமிழர்களின் தந்தை பெரியாரையே அவமதித்துப் பேசிவிட்டு இவர்கள் தமிழகத்தில் நடமாட முடியும் என்கிற நிலை இருக்கும் போது வேறு என்ன சொல்ல?

பொற்கோயிலில் வைக்கப்பட்டுள்ள பியாந்த் சிங்கின் புகைப்படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வாசகத்தையும் தமிழகம் முழுக்க எங்கள் இளந்தமிழர் இயக்கம் பரப்புரை செய்ய உள்ளது. நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்கள் முடிந்தால், அதைத் தடுத்துப் பார்க்கட்டும்!’’ என்று முடித்துக் கொண்டார் அருணபாரதி.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். ‘‘நளினி ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை. முருகன் உடனிருந்த தொடர்பில் பயங்கரவாத அமைப்புடன் ஐக்கியமாகி இளந்தலைவர் ராஜிவ்காந்தியை அவர் கொன்றிருக்கிறார். பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது. இவர்கள் கேட்பது நளினியை எதிர்க்கும் நீங்கள், பின்லேடனை எதிர்ப்பீர்களா என்பது போல உள்ளது. பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர். அதனடிப்படையிலேயே நளினி விடுதலையை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார் இளங்கோவன்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Wednesday, December 02, 2009

கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்



“இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...”


வறுமைக்கு பெயர் பெற்ற சோமாலியா நாட்டில் தற்பொழுது என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை, அங்கு பணியாற்றுகின்ற ‘எல்லைகள் கடந்த மருத்துவர்கள்’ - மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் - Médecins sans Frontières (MSF) என்ற பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மேலுள்ளவாறு அறிவித்திருக்கிறது. ஏறத்தாழ 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சோமாலியாவில் உச்சத்தில், தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது, பஞ்சப்பேய்.


கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம், சோமாலியாயில் குடும்பம் ஒன்றிற்கான உணவு மற்றும் குடிநீர்ச் செலவு மாதம் ஒன்றிற்கு 92 டாலர்களாக இருந்தது. அது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 171 டாலர;களாக, சுமார் 85 விழுக்காடு உயர்ந்துள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் தவிர்த்து விட்ட, சோமாலியா மக்கள் அதிகமானோர் உள்ளனர். பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர்.

மேலும், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் இங்கு நீடிக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நீடிக்கிறது. அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.


வேலையின்மையாலும், வறுமையாலும் வாடி வதையுறுகின்ற, ஆப்ரிக்க நாடுகளுக்கு, இந்நிலை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. கடந்த 1966-1970 ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஆப்பிரிக்க நாடுகள், அப்பொழுதே சுமார் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்களை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளமான பகுதியாகத் தான் இருந்தது. ஆனால், இன்றோ பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் 25 விழுக்காட்டிற்கும் மேலான உணவை முதலாளிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டியளவிற்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முதலாளிய நாடுகளின் கண்ணை உறுத்திய ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளம், பணக்கார நாடுகளால் சூறையாடப்பட்டது. தமது இராணுவ மேலாதிக்க நடடிவக்கைகள் மூலமும், ‘பொருளாதார ஒருங்கிணைப்பு’ என்ற பெயரிலான, உணவு உற்பத்தியை சீர்குலைக்கிற சந்தைப் பொருளாதாரச் சுரண்டல் திட்டங்களின் மூலமாகவும் ஆப்பிரிக்க நாடுகளை சிதைத்ததில், முழு பங்கும் ஏகாதிபத்திய நாடுகளையே சேரும்.

இவற்றின் விளைவாக, தம் வளங்களையும், உரிமைகளையும் இழந்து, பரிதவிக்கின்றனர், அந்நாட்டு மக்கள்.


உலகமய முதலாளியத்தின் சுரண்டல் தீவிரவாதத்தின் எதிர் விளைவாக, ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இது தான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது.

முதலாளிய இலாப வெறியின் விளைவாக தோற்று விக்கப்பட்ட, தற்போதைய பொருளியல் நெருக்கடியை முன்னிட்டு, நிறுவனங்கள் மூடப்படுதல், வேலை யிழப்பு அதிகரித்தல், தொழிலாளர்கள் மேலும் அதிகமாக சரண்டப்படுதல், சுரண்டுகின்ற நிறுவனங்களுக்கு இன்னும் அதிகமான வரிச்சலுகை களை அள்ளி வீசுதல், இவ்வாறான தொடர் நடவடிக்கை களின் காரணமாக விலை வாசி உயர்தல் என பல்வேறு வடிவங்களில் உலக மக்கள் இன்று வாட்டப்பட்டு வருகின்றனர்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labor Organization- ILO), உலகில் ஒரு நாளுக்கு 2 டாலருக்குக் கீழ் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக உயரும் என்று அறிவித்திருக்கிறது. உலகமய வேட்டைக்காரர்களின் நாடான அமெரிக்காவிலோ, வேலையின்மை யின் விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டு மட்டும் சுமார் 106 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. (காண்க: பினான்சியல் எக்ஸ்பிரஸ், 26.10.09). ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன்(1000 கோடி) டாலர் கடனாளியாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.



“மனித குல வரலாற்றில் இவ்வாறான பஞ்சத்தை, முதன் முறையாக இவ்வுலகம் எதிர் கொள்கிறது” என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய (UN’s Food and Agriculture Organisation FAO) அமைப்பின், வளர்ச்சித்துறை இயக்குநர் கோஸ்டஸ் ஸ்டமௌலிஸ் குறிப்பிடுகிறார். அவ்வமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மிக அதிகபட்சமாக, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஆசிய - பசிபிக் பகுதிகளில் 642 மில்லியன் மக்களும், சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் 265 மில்லியின் மக்களும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதிகளில் 53 மில்லியன் மக்களும் பட்டினியில் உழல்கின்றனர்.


முதலாளிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்கள் பட்டினி கிடப்பதாகவும் அவ்வமைப்புத் தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், வெளியிடப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத்துறை நிறுவனத்தின் ஆண்டறிக்கை (United Nations - Food Agency, Annual report 2009), உலகம் முழுவதும் சராசரியாக 100 கோடி மக்கள் பட்டினியில் உழன்று கொண்டிருப்பதாகவும் அறிவித் துள்ளது. உலக நாடுகள் விவசாயத் துக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது.


விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படாததும், சேவைத்துறை ஊட்டி வளர்க்கப்படுவதும், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாத பெரும் நிதி மூலதனச் சூதாட்டங்களின் ஊக்குவிப்பும் தான் உலகமயத்தை உயிருடன் வைத்துள்ளன. வெளிப்படையாக இதனைக் குற்றம் சாட்டாமல், மறைமுகமாக அவ்வறிக்கை இதனை தெரிவித் திருப்பதன் மூலம், இவ்வறிக்கை, உலகமயத்திற்கு எதிரான குற்றப் பத்திரிக்கையாகவே விளங்குகின்றது.

மேலும் அவ்வறிக்கையில்,

· உலகின் 6இல் ஒரு மனிதர் பசியில் உழன்று கொண்டிருக்கிறார்,

· உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மையாலும், ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது,
· சகாராப் பகுதி ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராக விலை வாசி உயர்வையும், வறுமையையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்,


என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘உணவு இல்லாமல் போனால், மக்கள் கலகம் செய்வார்கள், இடம் பெயர்வார்கள் அல்லது இறப்பார்கள். எனவே இது உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்’ என்கிறார் ஐ.நா. உணவுத்திட்டத்தின் இயக்குநர், ஜோசட் ஷரன். அவர் தெரிக்கும், ‘உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்ற சொற்றொடரை, உலகமய முதலாளி யத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


இடைவிடாத சுரண்டல்களின் மூலம், ஏழை நாடுகளை சீரழித்த முதலாளிய நாடுகள், ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ என்பது போல, தம் சுரண்டலின் ஒரு மிகச்சிறிய பகுதியை ‘ஏழை நாடுகளின் வறுமையைப் போக்குவதற்காக’ என்ற பெயரில் எலும்புத் துண்டுகளென வீசுயெறிகின்றன. அதற்கான தரகராக செயல்படுவது தான், ஐ.நா. உணவுத்துறைத் திட்ட நிறுவனத்தின் வேலை.

தற்பொழுது முதலாளிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில், சிக்கியிருப்பதால், பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்த சிறு உதவித் தொகையையும் கூட நிறுத்தி வைத்துள்ளன.


சோமாலியாவில், உணவுக்காகவும், உரிமைக்காகவும் உழைக்கும் மக்கள் ஆயுதமேந்தி நடத்தி வருகின்ற ஒருங்கிணைக்கப்படாத கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று முத்திரைக் குத்தி, ‘தாம் வழங்கும் உதவிகள் தீவிரவாதிகளுக்குத் தான் போய்ச் சேரும்’ என்று சோமாலியாவிற்கான நிதி உதவிகளை ஒருமையில் நிறுத்தியுள்ளது அமெரிக்கா. உணவு கொடுத்தால் அது தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேரும் என்று வேடம் போடுகின்ற அமெரிக்கா, சோமாலியா கலகக்காரர்களை அடக்கும் பொருட்டு, வலிமையும், பயிற்சியும் இல்லாத அந்நாட்டின் சிறு இராணுவத்திற்கு 40 டன் அளவிற்கான ஆயுதங்களை மட்டும் அள்ளி வீசியிருக்கிறது.


இவ்வாயுதங்கள் அல்-கொய்தா போன்ற இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு வணிகம் செய்யப்படுகின்றன என்று சோமாலியா நாட்டின் அரசியல்வாதிகள் சிலரே வெளிப்படையாக எச்சரித்துள்ள போது கூட அமெரிக்காவிற்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. உழைக்கும் மக்களின் கலகங்களை அடக்குவதில் மட்டுமே அமெரிக்கா அதீத கவனம் செலுத்துகிறது.


இவ்வாறு, ஏகாதிபத்திய நாடுகள் தாம் வீசும் எலும்புத் துண்டுத் தொகையைக் கூட, கொடுக்காத நிலையில், இவ்வாண்டு ஐ.நா.வின் உணவுத்துறை திட்ட அமைப்பிற்கான உதவி நிதி கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத வகையில், குறைந்து விட்டதாகவும் அவ்வமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.

கடந்த சூலை மாதம் இத்தாலியில் நடந்த ஜி8 எனப்படுகின்ற பணக்கார நாடுகளின் மாநாட்டிற்கு முன்பாக, ஐ.நா. உணவுத்துறை அமைப்பு இது குறித்து வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த ஜி8- பணக்கார நாடுகளின் மாநாட்டில், ஏழை நாடுகளுக்கான உதவித் தொகையை ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர்கள் அதிகரிப்போம் என்று கூட்டாக அறிவித்திருந்தன, பணக்கார நாடுகள். ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதற்கும், அந்நாடு களில் நுழைந்து மேலாதிக்கம் செய்வதற்குமே இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற போதும் கூட, பணக்கார நாடுகள் இதற்கென ‘உதவ’ இப்பொழுது தயாரில்லை.


இவ்வாறான தொடர் நடவடிக்கைகளின் மூலம், ‘உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம்’ என்கிற முதலாளிய நாடுகளின் போலி முழக்கத்தை, அந்நாடுகளே காற்றில் பறக்க விட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்நிலைமை என்றால், வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இன்றைய இந்தியாவில், 5 வயதுக்கு கீழான எடை குறைவுள்ளக் குழந்தைகளின் விகிதம் மட்டும் 42.5 விழுக்காடு. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை, உகாண்டா பாகிஸ்தான், வங்கதேச நாடுகளை விட பின்தங்கிய நிலையில் தான் இந்தியா உள்ளதென உலக நாடுகளுக்கிடையே கணக்கெடுக்கப்பட்ட பசி அளவுக் குறியீடு (Global Hunger Index 2008) குறிப்பிடுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 88 விழுக்காட்டு பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களும், 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களும், 85 விழுக்காட்டு முஸ்லிம் மக்களும் ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் ரூ.20க்கும் கீழ் தான் வருமானம் பெறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும், குடிசைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 150 மில்லியன். ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியான தாராவி இந்தியாவில் தான் இருக்கிறது. அதில் வாழுகின்ற பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் ஆவர். மகாராட்டிரத்தின் 15 மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவால், ஏப்ரல் 2003லிருந்து மே 2004க்குள் இறந்த 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 9,000.

இப்படிப்பட்ட இந்தியா தான் ‘வல்லரசாக’ப் போகிறதென்று நம்மை கனவுக் காணச் சொல்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமான வளர்ச்சி என்று திரிக்கும், இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஊதுகுழலான முதலாளிய ஊடகங்களுக்கும, இப்படிப்பட்ட ஏழ்மையில் உழலும் ‘இந்தியா’வின் கோர முகம் தெரிவதற்கான வாய்ப்பில்லை தான்.


அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளுடனான உலகமயப் பிணைப்பு காரணமாக, இந்தியத் தொழிற்துறை ஆட்டம் கண்டுள்ளதை அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல்களும், வேலை இழப்புகளும் நுணுக்கமாக இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பதற்கு வசதியாக, ஏற்கெனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரை குறையாக அமல்படுத்தி வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 1.09.09).


இவ்வறிவிப்பின் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணிநேரம், குறைந்தபட்சக் கூலி, விடுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தம் விருப்பம் போல் நிறுவனங்கள் நடந்து கொள்ளலாம் என்ற இந்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இவ்வாறு, வரிச்சலுகை என்ற பெயரில், பல்வேறு தனியார் நிறுவனங்களும் மக்களை சூறையாடிக் கொள்ள தங்குதடையின்றி அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள முதலாளிய ஆளும் வர்க்கங்கள் அனைத்தும், சர்வாதிகாரத் திமிருடன் தொழிலாளர் களை தம் விருப்பம் போல் சுரண்டிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு, போலிச் சட்டங்களையும் மீறி அனுமதியளித்துக் கொண்டிருக்கின்றன. முதலாளிகளின் விசுவாசப்படையான அரச அதிகார வர்க்கத்திற்கு எதிராக, அவ்வப்போது கோபத்துடன் குமுறி எழுகின்ற மக்களின் பதிலடிகள், கலகங்களாக பிறப்பெடுத்து, ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கச் செய்கின்றன.


இதனால் தான், சோமாலியா விலும் கென்யாவிலும் நடக்கிற உழைக்கும் மக்களின் கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று பெயரிட்டு, அமெரிக்கா அலறுகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், நொய்டாவில் கிராசியாநோ என்ற தனியார் நிறுவனத்தில், பணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியை அடித்துக் கொன்றதும், அண்மையில் கோவையில், 42 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்த பிரிக்கால் ஆலையின் நிர்வாகத்திற்கு, எதிரான போராட்டத்தில், அந்நிறுவனத்தின் நிர்வாகிக் கொல்லப்பட்டதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உழைக்கும் மக்களின் பதிலடிகள் தான். தொழிலாளர்களின் இந்த பதிலடிகளை ‘வன்முறை’ என்று சாடுகின்றன, இந்திய ஆளும் வர்க்கங்கள்.


சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் (International Food Policy Research Institute- IFPRI) சேர் ந்த பொதுச் சுகாதார ஆய்வாளர், பூர்ணிமா மேனன் அவர்களிடம், மக்களின் வறுமை குறித்து கேட்ட போது, “ஒரு அமைப்பின் தோல்வியை தான் நாம் இன்று காண்கிறோம். அது ஏதோ செய்கிறதே தவிர, பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை” என்று கூறுகிறார். (“I see a system failing. It is doing something, but it is not solving the problem”) (காண்க : தி நியுயார்க் டைம்ஸ்,மார்ச் 12, 2009).


அவர் கூற முற்படும் அமைப்பு, தற்பொழுது நிலவுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பு. அவ்வமைப்பின் தோல்வியைத் தான் இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் மிகக் கொடூரமான முறையில்.

உலகமயம் ஏவுகின்ற வர்க்க ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, இந்தியம் ஏவுகின்ற இன ஒடுக்குமுறை யையும் தாங்கி நின்று கொண்டிருக் கிறது, நம் தமிழ்த்தேசம். இவற்றை எதிர் கொள்ளும் போர்வாளாக தமிழ்த்தேசியத்தை நாம் கைகளில் ஏந்த வேண்டியச் சூழலை, வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது.



(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 இதழில் வெளியான எனது கட்டுரை)


Visit : www.tamizharkannotam.blogspot.com, www.keetru.com


Wednesday, October 21, 2009

பன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி


இனக்குழு சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த மனித இனம், முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கால், இயற்கையின் மீதே படையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதல் முதல் இன்றைக்கு உலகை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் பன்றிக் காய்ச்சல் வரையான அனைத்து நிகழ்வுகளும் முதலாளியத்தின் வழிநடத்தலால் மறைமுகமாகப் பிறப்பெடுத்தவையே.

இராசாயன உணவுமுறையும், இயற்கைக்கு எதிரான வாழ்முறையும் ஏற்படுத்திய கோலங்களாகவே நோய்கள் மனித இனத்தை ஆட்டிப்படைக்கின்றன. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், பிளேக், சார்ஸ், பறவைக் காய்ச்சல் என பலவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு தான் பாதிப்பு. ஆனால், மருந்து முதலாளிகளுக்கு இவை சந்தையை உருவாக்கிய வரங்கள். அந்த வரிசையில் தற்பொழுது ‘பன்றிக் காய்ச்சல்’ நோயும் இடம் பிடித்துள்ளது.

வெறும் 25லிருந்து 60 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு முகமூடியை, மக்களுக்கு அச்சமூட்டிய ஊடகங்களின் துணையால், ரூ. 300, ரூ.500 வரை விற்க முடிகின்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படுகின்ற இந்நோய் அதன் பெயருக்கேற்ப பன்றிகளில் இருந்து பரவும் நோய் அல்ல. இந்நோய்க்குக் காரணமான ‘H1N1‘ என்ற கிருமி பன்றிகளில் இருந்து உருவானதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது. வழக்கமாக பன்றிகளுக்கு அவ்வப் போது ஏற்படும் தொற்று நோய்களை விட இது வேறுபட்டதாகவும் பன்றிகளுக்கு மட்டும் பரவாமல் மனிதர்களிடமும் பரவக் கூடியத் தன்மையுள்ளதாகவும் இக்கிருமி வெளிப்பட்டது.

இந்தக் கிருமி மனிதர்களுக்கு பரவியதன் பரிணாமத்தில் முதலாளியத்திற்கும் முக்கியப் பங்கிருக்கிறது. சுமித் ஃபுட்ஸ் (Smith Foods Inc.) எனப்படும் பெரு நிறுவனத்தின் பன்றிப் பண்ணையிலிருந்தே இந்நோய்க் கிருமி உருவானது. இலாபவெறியுடனும் அலட்சியத்துடனும், தொடர் பராமரிப்புகள் ஏதுமின்றி பெருமளவிலான பன்றிகளை இந்நிறுவனத்திற்குரிய பண்ணையில் இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். அகற்றப்படாத கழிவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட சுகாதரமற்ற சூழ்நிலை அங்கிருந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப பன்றிகளுக்கிடையே ஒரு புதுவிதமான தொற்று நோய்க் கிருமி பிறப்பெடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எளிதில் பரவியது. விரைவில், இந்நோய் எளிதில பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இன்று(26.08.09) வரை 84 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பேர்ப்பட்ட சுகாதரமற்ற இந்நிறுவனம் தான், ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறை”யைக் கொண்டிருப்பதாகக் கூறி ISO 14001 எனப்படுகின்ற தரச்சான்றிதழ் 2005ஆம் ஆண்டில் முதன் முதலில் பெற்ற அமெரிக்க நிறுவனமாகும். முதலாளிகளின் தரநிர்ணய முறை பல்லிளிக்க வைக்கிறது.

செலவுகளை மிச்சம் பிடித்தும், இறைச்சியை அதிகளவு விற்றும் இலாபம் சம்பாதிக்க நினைத்த அந்நிறுவனத்தின் இலாபவெறி அலட்சியப் போக்கால் ஏற்பட்ட வினையாக இந்தக் கிருமி உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில், இந்நோயின் பெயர் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றிருந்ததால் பன்றிகளின் இறைச்சி விலை குறைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பன்றிப் பண்ணை நிறுவனங்கள் முறையிட்டதன் காரணமாக, அந்நோய்க் கிருமியின் பெயரான H1N1 என்ற பெயரை ஒபாமாவே முன்மொழிந்தார். உலக சுகாதார நிறுவனம் வழிமொழிந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பல முதலாளிய நாடுகளிலும் மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட நிலையில், பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இந்நோய்ப் பரவலை எண்ணி பெரு மகிழ்ச்சி கொண்டன. அந்நிறுவனங்களின் பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்தன. முதலாளிகளின் அலட்சிப் போக்கால் மட்டுமே இந்நோய் தோன்றியது ஒருபுறமாக இருந்தாலும். இந்நோயின் பிறப்புக் குறித்து இன்றும் மர்மங்கள் நிலவுகின்றன.

முதலாளியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் உயிரியல் போரில் இறங்கியிருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆங்கிலப் படங்களிலும், ‘ஈ’ போன்ற தமிழ்ப் படங்களிலும் கூட இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

1960களில் இது போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. புற்றுநோய் ஆராய்ச்சியை முன்வைத்து இச்சோதனைகள் தொடங்கின. AIDS: A Biological Warfare என்ற ஆங்கில நூலில் தமிழக மருத்தவர் புகழேந்தி அவர்கள் எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமொரிக்காவில் அமைக்கப்பட்ட MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals என்ற திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1965 இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் இதற்கெனவே இயங்கி வந்தது. உயிரியல் சோதனை மட்டுமல்லமால் தனது சொந்த மக்கள் மீதே கதிர்வீச்சு சோதனை நடத்திய “திருப் பணி”களையும் இவ்வாய்வுக்கூடம் மேற்கொண்டதன் காரணமாக இக்கூடத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அரசோ தொடர்ந்து ஆய்வுக்கூடங்களை இடம் மாற்றியதேத் தவிர ஆய்வுகளை நிறுத்தவில்லை.

அமெரிக்காவின் வழக்கறிஞர் பாய்ட் கிரேவ்ஸ் என்பவர் எழுதிய State Origin: The Evidence of the Laboratory Birth of AIDS என்ற புத்தகத்தில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை இயக்குநர் பசீரெல்லா(A.H.Passerella - Director, Department of Defence, USA) எழுதியக் கடிதம் ஒன்றின் மூலம் இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். (பக்கம் 180)

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம், உயிரியல் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வல்லாதிக்க நாடுகளின் சோதனைகளின் ஒரு பகுதியாகக் கூட இந்நோய்க் கிருமி உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நோய்க் கிருமியின் உள்ளடக்கம் வலுத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ‘ரென்ஸ்.காம்’ (Rense.com) என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இக்கிருமியின் உட்கூறுகளாக பறவைக் காய்ச்சல் (Avian flu) மனிதக் காய்ச்சல்களுக்குக் காரணமான ‘ஏ’ ப்ளூ வகை(Human flu Type A) மற்றும் ‘பி’ ப்ளூ வகை(Human flu Type B), ஆசியாவில் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu) மற்றும் ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பு வகையாக இக்கிருமி உள்ளது. பத்திற்கு ஒன்று (1/10%) விழுக்காட்டில் தான் இயல்பு நிலையில் இவ்வாறான வடிவத்தை இக்கிருமி பெற்றிருக்க வேண்டும்.

ஒரு குறுகிய காலகட்டத்திலேயே நான்கு கண்டங்களில் உருவான பல்வேறு கிருமிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக இக்கிருமி இருப்பதால் இது சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என இவ்விணையம் ஐயம் எழுப்புகிறது.

தற்பொழுது இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளையும் வழங்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி யிருக்கிறது. முதலாளிகள் தலைமையிலான நாடுகளின் வல்லாதிக்க நோக்கிலும், முதலாளிகளின் லாபவெறியிலும் உருவாக்கப்படும் புதுப்புது நோய்களாலும், மருந்துகளாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படுவது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே ஆவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்முறைத் தற்காப்பு என்பதை விட காய்ச்சலுக்கு மருந்துகளை முன் வைப்பதிலேயே இவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள மண்ணின் மரபுக்கேற்ற வாழ்முறையும், உணவு முறையுமே நமக்குக் கேடயமாக வீற்றிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2009 இதழிலிருந்து...)

குறிப்பிடத்தக்க பதிவுகள்