Sunday, March 01, 2015

போராடக் களம் அழைக்கிறது...



நேற்று(01.03.2015) மாலை, சென்னை - ஆவடியில் உள்ள இந்திய அரசின் திண்ணூர்தித் தொழிற்சாலை [H.V.F. - O.C.F.]த் தொழிலாளர்களால் நடத்தப்படும் “தமிழர் நலக்கழகம்” அமைப்பின், நான்காம் ஆண்டுவிழா சிறப்புக் கூட்டத்திற்கு, வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டிருந்தேன்.

கூட்டத்தில், அய்யன் திருவள்ளுவர், பாவாணர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் ஆகியோரது திருவுருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், மறைமலையடிகள் அவர்களின் மகன் திரு. தி. தாயுமானவன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் செ.ப.முத்தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று, உரையாற்றினேன்.


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நான் கலந்து கொண்டு பேசினேன்.

ஆவடியில் உள்ள இந்திய அரசுத் தொழிற்சாலை என்பது, தமிழர்களின் நலனுக்காக - தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக - தமிழகத்தில் நிறுவப்பட்டத் தொழிற்சாலை. ஆனால், அத்தொழிற்சாலையில் தமிழர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டுள்ளது.


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவிலான பொறியியல் மற்றும் தொழிற்பயிற்சி(ITI மற்றும் Polytechnic) கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், ஆவடியிலோ அதிகளவிலான அயல் இனத்தார் பணியில் அமர்த்தப்பட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, இதற்கு எதிராகப் பலப் போராட்டங்களை நாம் நடத்தி வந்துள்ளோம். எனினும், இப்போக்கு தொடர்கின்றது.

தற்போது, கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின்படி, ஆவடி தொழிற்சாலை நிர்வாகத்தால் நடத்தப்படும் தொழிற்பழகுநர் பயிற்சிப் பள்ளியில் 70 விழுக்காட்டினர் அயல் இனத்தார் என்று தெரியவந்துள்ளது.



தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான நிலத்தில் - நீரை உறிஞ்சி - தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி உருவான அந்தத் தொழிற்சாலையில், தமிழர்களுக்கு இடமில்லை எனில், எதற்காக அத்தொழிற்சாலை?


எனவே, ஆவடியில் இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டுமென அங்குள்ள அனைத்து அமைப்புத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துப் பேசினேன். விரைவில், அதற்கான செயல்திட்டங்களில் இறங்குவோம்!

தமிழகத்தின் இந்திய அரசுத் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முழங்குவோம்!

தோழமையுடன்,
க.அருணபாரதி
பொதுச் செயலாளர்,
தமிழக இளைஞர் முன்னணி.
பேச: 9841949462

Wednesday, January 30, 2013

புதுச்சேரியில் கணினி விழிப்புணர்வு முகாம் - ஆலோசனைகள் தேவை



புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல் கீழ்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. 

நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).

இடம் :மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004. நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  விளக்கம் அளிக்கப்படும்.
  1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
  2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
  3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
  4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
  5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers)
  6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
  7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
  8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
  9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
  10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
  11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
  12. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு, எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த  பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது.

பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
இரா.சுகுமாரன் 9443105825,
எல்லை.சிவக்குமார்.  9843177943
என்ற  தொலை பேசியில் தொடர்பு கொள்க.

Wednesday, July 25, 2012

“புதுச்சேரி என்பது அரசியல் பூமி” - 'என் விகடன்' இதழில் எனது பேட்டி!


ஆனந்த விகடன் இதழுடன் வெளிவரும் என் விகடன்” துணை இதழின் புதுச்சேரிப் பதிப்பில், “எங்கள் ஊர்” பகுதியில், இவ்வாரம் (சூலை1-26) எனது செவ்வி வெளியானது.  அதனை இங்கு பதிகின்றேன். 


ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் தமிழகத்தையும், ஏனைய இந்தியத் துணைக் கண்டத்து சமஸ்தானங்களையும் கைப்பற்றியதைப் போலவே, பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிகள் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, யானம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தன.

1917 களில் இரசியப் புரட்சி தோற்றுவித்த எழுச்சி, புதுச்சேரியிலும் படர்ந்தது. அப்போது கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவராக இருந்த வ.சுப்பையா தலைமையில், விடுதலை வேண்டி பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தளவிற்கு கம்யூனிசப் பிடிப்புடன் இருந்த புதுச்சேரி, பிற்காலத்தில் காங்கிரசின் கோட்டையாக மாறிப் போனது வியப்பானது" என்ற வரலாற்றுத் தகவல்களோடு தன் ஊர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் 'தமிழர் கண்ணோட்டம்' ஆசிரியர் குழுவினைச் சேர்ந்த க.அருணபாரதி. 

“தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இங்கும் எதிரொலித்தன. இந்தி எதிர்ப்புப் போரின் போது கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு 22 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவத்தினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 15 பேரை சுட்டுக் கொன்றது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது, புதுச்சேரியிலும் சோ்த்தெ வெற்றி கண்டார். ஆனால், புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது குறித்து அ.தி.மு.க. அரசு பேசியது, அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது.

தமிழகத்துடன் இணைக்கப்பட்டால் புதுச்சேரிக்கு இந்திய அரசால் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அம்முடிவை கடுமையாக எதிர்த்தனர். அம்முடிவை மேற்கொண்ட அ.தி.மு.க. அரசு விரைவிலேயே டிஸ்மிஸ் ஆகும் அளவிற்கு மக்கள் போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றது. அதன் பின், இன்றுவரை புதுச்சேரியில் அ.தி.மு.க. செல்வாக்குப் பெற்றக் கட்சியாக வளர முடியவில்லை.

காலனிய ஆட்சியின் போது, புதுச்சேரி நகர்ப்பகுதி, பிரஞ்சு அரசால் நன்கு திட்டமிட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. பிரஞ்சு வெள்ளையின மக்கள் தனியாகவும், மண்ணின் மக்களான தமிழர்கள் “கருப்பின” மக்களாகவும் கருதி அவர்களைத் தனியாகவும் பிரித்து வைக்கும் வகையில் புதுச்சேரி நகரத்தை பிரெஞ்சு அரசு வடிவமைத்தது. காலனிய ஆட்சிமுறை முடிந்து விட்ட நிலையிலும், இந்நகர வடிவமைப்பு  இன்று வரை அப்படியே தொடர்கின்றது. 

இன்றைக்கு நாங்கள் சிறுபிராயத்தில் விளையாடி மகிழ்ந்த ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் மகிழுந்தும், இதர மோட்டார் வாகனங்களும், நாங்கள் விளையாடிய இடங்களை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. பல காலமாக பூட்டியவாறே கிடந்த பழைய வீடுகளின் திண்ணைகளில் புதிய வண்ணங்களில் கடைகளின் பெயர் பலகைகள் தொங்குகின்றன. கேரம் போர்டும்,  செஸ்ஸும்  விளையாடிய திண்ணைகள் இடிக்கப்பட்டு, அவை கார் நிறுத்துமிடமாகவும், புதிய கடைகள் வைக்கவும் உருமாற்றப்பட்டு விட்டன.

கிரிக்கெட் விளையாடி தெருவிளக்கை உடைத்து காவல்துறை வரை சென்ற அத்தெருவின் பத்தாண்டுகளுக்கு முன்னான “வரலாற்று” நிகழ்வுகள் எல்லாம், இத்தெருவில் இப்போது வசிக்கும் சிறுவர் - சிறுமியர்க்குத் தெரியாது. இப்போது, அவர்களில் பெரும்பாலோர், பெற்றோர்களின் எதிர்காலம் குறித்த அறிவுரையின் காரணமாக, ட்யூசன்களிலும், பயிற்சி வகுப்புகளிலும் மூழ்கிவிட்டனர்.

படங்கள்: முத்துக்குமார், ஆ.நந்தக்குமார், நன்றி: ஆனந்த விகடன்



குறிப்பிடத்தக்க பதிவுகள்