Monday, February 23, 2009

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
 
             ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
             பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழினம் இன்று நாதியற்ற நிலையில் உள்ளது. ஈழத்தில் தமிழர்களை மலைமலையாகக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசுக்க எதிராக 10 கோடி தமிழர்கள் உலகெங்கும் இருந்து போராடியும் கூட நமக்கு சர்வதேசம் செவிசாய்க்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவின் சிங்களச் சார்பு நிலைபாடே.  தமிழகத்தில் உள்ள இந்தியத் தமிழர்களை சிறிதளவும் இந்திய அரசு மதிக்கவில்லை என்பதும் புலனாகிறது.
 
             ஈழத்தமிழர்களின் உயிர் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழகத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் தமிழின விரோதியாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகின்றது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழினத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கூட தடை செய்யப்படுகின்றது.
 
இளந்தமிழர் இயக்கம்
             இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து போராட வேண்டுமென்ற நோக்கில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர், உழவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு நீண்ட விவாதத்திற்கு பின் அக்குழு ஒரு இயக்கமாக செயல்பட ஒருமனதாக முடிவெடுத்தது. அவ்வியக்கத்திற்கு "இளந்தமிழர் இயக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ ஆதரபு பரப்புரைப் பயணம்
             இவ்வியக்கத்தின் சார்பில் தமிழீழ மக்கள் மீது சி்ங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் இன அழிப்புப் போர் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்ள "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படுகிறது. இப்பயணத்தின் போது தமிழீழ மக்களின் இன்னல்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, வீதி நாடகங்கள், குறும்படங்கள் திரையிடல் என பல்வேறு வழிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
 
பயணத்தின் தொடக்க விழா
             பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சையில் 25-02-09(புதன்) அன்று நடக்கிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன்,  ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்திப் பேசி பயணத்தை தொடக்கி வைக்கின்றனர்.
 
"காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" - கையெழுத்து இயக்கம்
             பயணத்தின் போது "இன விரோத காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. பயணத்தின் முடிவில் 6-3-09(வெள்ளி) அன்று சேலத்தில் "இன எழுச்சி மாநாடு" நடக்கிறது. அதில் இக்கையெழுத்துகள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.

க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
பேச - 9841949462
 
தொடர்புக்கு :
 
கோ.ராஜாராம்,
நிர்வாகக் குழு,
பேச - 9894310997
 

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்