Wednesday, June 09, 2010

சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட்

உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, “விளையாட்டு’ என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுத் தளத்திலிருந்த மட்டையடிப் போட்டிகள் வணிகத் தளத்திற்கு மாறி, பிறகு சூதாட்டக் களத்திற்குப் போய்விட்டன. இது பற்றி முன்னணி மட்டையடி வீரர்கள் பலரும் கூட கவலை வெளியிட்டிருந்தனர்.

ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் அண்மைய வெளிப்பாடே, ஐ.பி.எல். சர்ச்சையாக இன்று நாடெங்கும் பேசப்படுகின்றது. விலைவாசி உயர்வு, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், உழவர்களை அழித்து விட்டு பன்னாட்டு நிறுவனங் களுக்கு வேளாண்மையைத் தாரை வார்க்கும் அதிரடிச் சட்டங்கள் என விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மறக்கப்பட்டு, அவை துண்டுச் செய்திகளாயின. ஐ.பி.எல். தலைப்புச் செய்தியானது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, மட்டையடி விளையாட்டு வீரர்களை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து, தொடக்கத்திலேயே தன் வணிகத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டது தான், ஐ.பி.எல். அமைப்பு.

2008 ஆம் ஆண்டு, முன்னணி மட்டையடி வீரர் கபில் தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தோடு இணைந்து “இந்தியன் கிரிக்கெட் லீக்” (ஐ.சி.எல்.) என்ற ழைக்கப்பட்ட அமைப்பைத் தோற்றுவித்தார். பல்வேறு நாட்டு ஓய்வு பெற்ற மட்டையடி விளையாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய விளையாட்டு அணிகளை உருவாக்கி, விளையாட்டு நேரத்தைக் குறைத்து பரபரப்பானப் போட்டிகளை நடத்தி, அதன் ஒயூரப்பு உரிமைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதே இவ்வமைப்பின் ‘உயரிய’ நோக்கம்.

இவ்வமைப்பின் இந்த நோக்கத்தை உணர்ந்து கொண்ட, இந்திய மட்டையடி வாரியத்தின் பண முதலைகள், அவ்வமைப்பன் வழியே தானும் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டது. ஐ.சி.எல். அமைப்பை சீர்குலைக்கும் வகையில், ஐ.பி.எல். என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. நடுவண் காங்கிரஸ் அரசில் பங்கு வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் இந்திய மட்டையடி வாரியத்தின் பேரங்களை முன்னின்று நடத்துபவருமான அமைச்சர் சரத் பவார் இதற்கு பின்னணியில் இருந்தார். அவரைப் போன்றே தரகு வேலைகளில், ஈடுபடுவதில் ‘திறமைசாலி’யான இந்திய மட்டையடி வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்தே, ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல ‘விளையாட்டு’ வீரர்கள், ஐ.பி.எல். போட்டிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அம்பானி, விஜய் மல்லையா போன்ற பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், இந்தியா சிமெண்ட்ஸ் போன்ற தனியார் பெரு நிறுவனங்களும், சீரழிந்த உலகமயப் பண்பாட்டை போதிக்கும் ‘டெக்கான் க்ரோனிக்கல்’ போன்ற ஊடகங்களும், அப்பண்பாட்டை செயலில் காட்டும் சாருக்கான், ப்ரீத்தீ ஜிந்தா போன்ற நடிகர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய ரூ. 2000 கோடி இலாபம் சம்பாதித்தத்தோடு மட்டுமின்றி, போட்டிக்கான பார்வையாளர் நுழைவுச் சீட்டு, ஒயூரப்பு உரிமை, விளம்பரங்கள் என மேலும் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தது, ஐ.பி.எல்.

ஐ.பி.எல். ஏலம் எடுக்கப்பட்ட போதே, அந்த ஏலத்தில் புழங்கியப் பணம் எங்கிருந்து வந்தது என்று நடுவண் அரசு கூட ஆராய்ந்திடவில்லை. உழவர்கள் தற்கொலை, சிறுதொழில்கள் நசுக்கப்பட்டது குறித்தெல்லாம் வாய் திறக்காத ஊடகங்கள், ஐ.பி.எல். ஏலத்தொகையைக் கணக்குக் காட்டி ‘இந்தியா’ வளர்ந்து விட்டதாக பெருமையடித்தன.

ஐ.பி.எல். மட்டையடிப் போட்டிகளின் நடுவில் ‘இளைப்பாறுதல்’ என்ற பெயரில், அரைகுறை ஆடைப் பெண்களை ஆடவிடுவதும், நடிகைகளை விட்டுக் கட்டிப்பிடிக்க வைப்பதும், போட்டி முடிந்ததும் தினமும் நடத்தப்படுகின்ற, ‘இரவு’ ‘விருந்தில்’ நடக்கும் ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளும், அது சார்ந்திருக்கும், உலகமய நுகர்வியப் பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்ள வலியுறுத்துகின்ற இந்த, உலகமய பாலியல் சீரழிவுகளுக்கு ‘பாலியல் விடுதலை’ என்று புதுப்பெயர் வைத்து, வளர்க்கின்றன ஊடகங்கள். கோடி கோடியாகக் கொள்ளையடித்த முதலாளிகளும், அவர்தம் கையாள் அரசியல்வாதிகளும், அவர்களது வாரிசுகளும், விலை மாதர்களுடன் கொஞ்சிக் குலாவுகின்ற, அந்த இரவு விருந்துகளில் கலந்து கொள்ள ஒருவருக்கான அனுமதிச் சீட்டின் இன்றைய நிலவரப்படி, விலை 40,000 ரூபாய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

உலகமய நுகர்வியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய, மேட்டுக்குடியினர் மட்டுமின்றி, உலகமயப் பாலியல் சீரழிவுகள் மீதான கவர்ச்சியால் ஈர்க்கப்படும் நடுத்தர வர்க்கத் தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களும், ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்ப்பதோடு, இந்த இரவு விருந்துகளில் பெருமளவில் கலந்தும் கொள்கின்றனர்.

இவ்வாறு, கோடி கோடியாக இலாபம் சம்பாதித்து வந்த ஐ.பி.எல். இந்தக் கொள்ளையின் இலாபம் போதாமல், இவ்வாண்டு மேலும் 2 புதிய அணிகளை உருவாக்கிக் கொள்ளையிடத் திட்டமிட்டது. இதன் விளைவாகவே புனே, கொச்சி என புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டன. கொச்சி அணி அதிகபட்சமாக ரூ. 1553 கோடி களுக்கு ஏலம் போனது.

மொரீசியஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு வரும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு என்பதால், அங்கிருந்து செயல்படுவதாக கூறிக் கொள்ளும் பல போலி நிறுவனங்கள் கருப்புப் பணத்தை ‘முதலீடு’ என்ற பெயரில், இந்தியாவிற்கு அனுப்பி வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றன. இவ்வகை முதலீடுகள் ஐ.பி.எல். போட்டியிலும் பெருமளவு குவிந்துள்ளன என்பதை, ஐ.பி.எல். ஏலத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்த போது தெரியவந்தது.

தமது ட்விட்டர் இணைய தளப்பக்கங்களில், கொச்சின் அணியின் உண்மையான உரிமை யாளர்கள் யார் யார் என, ஐ.பி.எல். ஆணையர் லலித் மோடி ஒரு பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதும், ஐ.பி.எல். விதிமுறைகள் மீறப்பட்டு, அதன் மரியாதை மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார், காங்கிரஸ் நடுவண் அமைச்சர் சசி தரூர். இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சசாங் மனோகரும், லலித் மோடி வெளியிட்ட ‘இரகசியங்களுக்கு’ எதிராகக் கண்டனம் தெரிவித்தார்.

நடுவண் அமைச்சர் சசி தரூரின் பதட்டப் பின்னணியை ஆராய்ந்த போது, கொச்சி அணியின் ரூ. 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பது, துபாயில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான சுனந்தா புஷ்கர் என்று தெரியவந்தது. அவர் சசி தரூரின் வருங்கால மனைவி என பேசப்படுபவர். பட்டியலை வெளியிட்ட பின், இதனை வெளியிடக் கூடாது என தம்மை அமைச்சர் சசி தரூர் மிரட்டினார் என்று லலித் மோடி மேலும் கூறினார்.

“மெத்தப் படித்தவர், நிர்வாகவியல் தெரிந்தவர், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்” என்றெல்லாம் ஊடகங்களால் காட்டப்பட்ட சசி தரூர், அந்த செல்வாக்கின் மூலம் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்று, அமைச்சராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மலையாளி என்பது அவருக்குள் சிறப்புத் தகுதி. தற்போது, தம் காதலி சுனந்தாவிற்கு ஐ.பி.எல். அணியின் பங்குகளை வாங்கிக் கொடுத்தது போல், வேறு சில பினாமிகளின் துணையோடு வேறு அணிகளையும் தம் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தாரா என்ற ஐயம் அனைவரிடத்தும் வலுவாக எழுந்தது.

‘நல்ல நிர்வாகி’ என்றெல் லாம் போற்றப்பட்ட லலித் மோடி, ‘அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அடிதடி வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையிலிருந்தவர். அவருக்குத் தான் நாம் உயர்பதவி கொடுத் திருக்கிறோம்’ என அமைச்சர் சசி தரூரின் செயலாளர் ஜாக்கப் ஜோசப், லலித் மோடிக்கு எதிராக வெளிப் படையாக சீறி எழுந்தார்.

பெருமுதலாளிகளும், முதலாளிகளின் ஊடகங்களும், அதில் நடித்த நடிகர்களும் தாம் கொள்ளையடித்தப் கருப்புப் பணத்தை, கண் முன்பே வெள்ளை யாக மாற்றுவது குறித்தும் எந்த தேர்தல் கட்சியும் சீறவில்லை. மாறாக, அதில் பங்கு கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வையோடே ஐ.பி.எல். மீது கரிசனத்தோடு கிடந்தனர். இந்நிலையில், பா.ச.க. அதுவரை ஐ.பி.எல். போட்டிகளை இரசித்துப் பார்த்து வந்தது. ஆனால் காங்கிரஸ் நடுவண் அமைச்சர் ஒருவர் தம் அதிகாரத்தின் மூலம், தம் காதலிக்கு பங்குகள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதும், ‘திடீர்’ அக்கறை யோடு நாடாளுமன்றத்தை கேள்வி களோடு முற்றுகையிட்டது.

உழவர்களை நசுக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாத பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பனர்கள், சசி தரூரின் அதிகார மீறலுக்கு எதிராக ‘பொங்கி’ எழுந்தனர். எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்குப் படிந்து, சசி தரூரின் பதவியைப் பறித்து, நல்லவர் போல தமக்கு ஏதும் தெரியாதது போல் வேடமிட்டுக் கொண்டு, சிக்கலை அத்தோடு முடிக்க நினைத்தது சோனியா - மன்மோகன் அரசு.

2009ஆம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போது கூட, அதனை மதிக்காது புறந்தள்ளி, இந்திய அரசுக்கு சவால் விடுக்கும் விதமாக அப்போட்டிகளை தென் னாப்பரிக்காவில் நடத்தியது, ஐ.பி.எல். அமைப்பு. அப்போதும், நடுவண் அரசு லலித் மோடி மீது சினங்கொள்ளவில்லை. தற்போது, ஐ.பி.எல். ஊழலில் தம் கட்சி அமைச்சர் ஒருவர் பதவி இழந்து, ஊரெல்லாம் காறி உமிழும் நிலைவந்த பின்னர் தான், அவமானம் தாங்காமல் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது, நடுவண் காங்கிரஸ் அரசு.

இதுவும் தற்காலிகமான நடவடிக்கைகளே. திரைமறைவு பேரங்கள் நடத்தப்பட்டு, அதில் நல்ல ‘விலை’யும் பேசப்பட்டு விட்டால், காங்கிரஸ் அரசு ஐ.பி.எல். அமைப்பின் கொள்ளைகள் குறித்து சிறிதும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஐ.பி.எல். அமைப்பு தான் கொள்ளையடித்த பணத்தில், பா.ச.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி களுக்கும் பங்கு கொடுத்திருந்தால், பாராளுமன்றத்தில் அவர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கமாட் டார்கள். பங்கு கொடுக்காததால், ஐ.பி.எல்.லுக்கு வந்தது சிக்கல்.

ஐ.பி.எல். அமைப்புக்கு மட்டுமின்றி, உற்பத்தியில் ஈடுபடாத நிதி புழங்குகின்ற எந்தவொரு தனியார் அமைப்பின் ஊழல்கள் - மோசடிகள் அம்பலமாகின்ற தென்றால், அரசியல்வாதிகளுக்கும், முதலாளிகளுக்கும் பண பேரம் படியவில்லை என்று தான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. ஏனெனில், இதுவே இன்றைய உலகமய காலகட்டத்தின் அரசியல் யதார்த்தமாக உள்ளது.

அரசுக்கு சவால் விடுக்கும் அளவிற்குப் பணவலு பெற்றிருந்த ஊழலிலும் கூட லலித் மோடி மீது ஐயம் கொள்ளாத நடுவண் காங்கிரஸ் அரசு, இச்சிக்கலில் தம் அமைச்சரின் பதவியை பறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில் தான் ஐ.பி.எல். குறித்து உற்று நோக்கத் தொடங்கியது. ஐ.பி.எல். அணிகளை ஏலம் எடுத்தவர்களின் அலுவலகங்கள், ஒயூரப்பு உரிமை பெற்ற நிறுவனங்கள், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் என பலரது வீடுகளும் வருமானவரித் துறை யினரால் முற்றுகையிட்டு சோதனை யிடப்பட்டன.

மும்பையில் இயங்கிய லலித் மோடி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர், சோதனை நடத்தவருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றது, அங்கிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதனை விஜய் மல்லையாவும் ஒப்புக் கொண்டார். இருந்த போதும், அவர் எடுத்துச் சென்ற கோப்புகள் குறித்து லைலாவிடம் விசாரித்து, விஜய் மல்லையாவின் கோபத்தை சம்பாதிக்க காங்கிரஸ் அரசு ஒன்றும் ஏமாளி அரசல்ல. அடுத்த தேர்தலில் அவரிடம் தான் தேர்தல் நிதி வசூலுக்குப் போய் நிற்க வேண்டியிருக்கும். எனவே, அந்தக் கோப்புகள் காணாமல் போனது போனதாகவே இருக்கட்டும் என அங்கிருந்து கிளம்பினர் வருமான வரித் துறையினர்.

இந்த சோதனைகளின் முடிவில், சசி தரூர் மீது புகார் கூறிய, லலித் மோடி அவரை விடப் பெரிய மோசடிக்காரர் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 19 இலட்சம் வருமானவரி செலுத்திய லலித் மோடி, 2008-2009 நிதியாண்டில் 32 இலட்சம் வரி செலுத்தினார். 2009ஆம் ஆண்டு அதிக வரி செலுத்திய 100 பேர் பட்டியலில் இடம் பிடித்தார். 2010ஆம் ஆண்டிற்கு 11 கோடி ரூபாய் வரியை முன்பணமாக செலுத்திவிட்டார். லலித் மோடியின் இந்த ‘அபார’ வளர்ச்சி, அரசியல்வாதிகளை மட்டுமின்றி இந்திய மட்டையடி வாரிய உறுப்பனர்களில் பலருக்கும் எரிச்சலூட்டத் தொடங்கியது.

வருமானவரித் துறை யினரின் பல்வேறு கட்ட சோதனை களுக்குப் பின், லலித் மோடி செய்த பல்வேறு தில்லுமுல்லுகள் தெரிய வந்தன. ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்’ என சசி தரூரை குற்றம் சாட்டிய லலித் மோடியோ, தம் சுற்றத்தாரை பினாமிகளாக்கி அணிகளை ஏலத்தில் எடுத்திருந்தது அம்பலமானது. மேலும், போட்டி யின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்து சூதாட்டம் நடத்தியது உட்பட பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டிருந்தது குறித்தும் ஐயப்பாடுகள் எழுந்தன.

“ராஜஸ்தான் அணியின் 25 விழுக்காட்டுப் பங்குகள், நைஜீரியா வைச் சேர்ந்த லலித் மோடியின் ஒன்று விட்ட சகோதரர் சுரேதீ செல்லாராம் என்பவர் வைத்திருக் கிறார். கொல்கத்தா அணியின் 45 விழுக்காட்டுப் பங்குகளை மொரீசியசைச் சேர்ந்த ‘சீ ஐலாண்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜெய் மேத்தா என்பவர் பெற்றுள்ளார். இவர் நடிகை ஜூகி சாவ்லாவின் கணவர் மட்டுமின்றி லலித் மோடியின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் கவுரவ் பர்மா இங்கிலாந்தில் இயங்கும் ‘பெட்பேர்’ எனப்படும் சூதாட்ட நிறுவனத்துடன் தொடர் புடையவர்” என, வருமான வரித்துறையினரின் கமுக்க அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, ‘தி எக்னாமிக் டைம்ஸ்’ ஏடு எழுதியது. (காண்க: எக்னாமிக் டைம்தி, ஏப்ரல் 19, 2010).

அணிகளைப் பினாமிகளின் பெயரால் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி மீது மேலும் எழுந்தன. ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக் காட்சி ஒயூரப்பு உரிமைகளில் மோசடி நடந்ததும் அம்பலமானது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒயூரப்புவதற்காக, ரூ. 8225 கோடி ரூபாய்க்கு, மொரீசியசில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கீரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த உரிமையை பெறுவதற்காக, சோனி நிறுவனத்தின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத் திடமிருந்து ரூ. 125 கோடி கைளிட்டு பெற்றதை வெளிப் படையாகவே ஒத்துக் கொண்டது, வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம். இதிலும், லலித் மோடியின், மோடி என்டர்டெய்ன் மெண்ட் நிறுவனத்திற்கு தொடர் பிருந்தது தெரியவந்தது.

“அரசுத்துறை நிறுவனங்கள் லஞ்சத்தில் திளைப்பவை. அரசு ஊழியர்கள் அனைவரும் சோம் பேறிகள். தனியார் நிறுவனங்களே வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த வல்லவை” என்று உலகமய ஊடகங்கள் போதித்து வருகின்றன. ஆனால், இன்றோ அந்த ஊடகங் களில் நடைபெறுகின்ற லஞ்ச ஊழல்களே வாய்பிளக்க வைக்கின்றன.

வேகமாக வளர்ந்து வரும் லலித் மோடியின் செல்வாக்கால் திணறிய இந்திய மட்டையடி வாரியமும், நடுவண் காங்கிரஸ் அரசும் இந்த ஊழலை, பயன்படுத்தி லலித் மோடியை அப்பதவியிலிருந்து தூக்கி விட்டு, வேறொருவரை அப்பதவியில் அமர்த்தும் நடவ டிக்கையில் இறங்கின. “முடிந்தால் நீக்கிப் பாருங்கள்” என சவால் விடுத்தார் லலித் மோடி. மோடியின் சவாலுக்கு பின்புலமாக, ஐ.பி.எல். அணிகளை ஏலத்தில் எடுத்த பண முதலைகள் நிற்பது உலகறியாததல்ல.

முற்றிலும் வணிகமயமாகி சூதாட்ட மாகவும் விபச்சாரமாகவும் ஆகிவிட்ட மட்டையடி விளையாட்டைப் புறக்கணித்து, உடலுக்கு உற்சாகம் தருவதோடு தம் இனத்தின் பெருமையையும் பறைசாற்றுகின்ற தேசிய இன விளையாட்டுகளில் நடுத்தர வர்க்க இளைஞர்கள் கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும்.

மேலும், ‘தேசிய விளையாட்டு’ என இந்திய அரசு பறைசாற்றிக் கொள்ளும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு, சம்பளம் தராமல் இழுத்தடிப்பதும், அயலார் விளையாட்டான மட்டைப்பந்து போட்டிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதும், இந்திய அரசுக்கே உரிய ‘வந்தேறித் தன்மை’யைத்தான் வெளிப்படுத்து கின்றது.

தேர்தல் அரசியல்வாதிகளும், முதலாளியத் தரகர்களும் இணைந்து நடத்துகின்ற சூதாட்டத் திருவிழாவான, இந்த ஐ.பி.எல். விளை யாட்டுப் போட்டிகள் தடை செய்யப் பட வேண்டும். ஐ.பி.எல். உள்ளிட்ட அமைப்புகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை அரசு டைமையாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த அரசும் முன்வராது என்று தெரிந்தே இக்கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். மக்களை ஆளுகின்ற அரசுகளிடம் அல்ல, ஆளு கின்ற அரசுகளைத் திருப்பித் தாக்கும் திறனுள்ள மக்களிடம் தான் இதனை எழுப்பியாக வேண்டும்.
நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழ்

Friday, May 14, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு (16.05.2010)

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை, 17. 29.04.2010.

தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.
சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.

மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.

இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!





வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நோர்வே ஈழத் தமிழர் அவையின் வணக்கம்.

வரலாற்றின் ஆதி காலம் முதல் இன்று வரை மொழி, இன, பண்பாட்டால் தமிழகமும் தமிழீழமும் ஒன்றென வாழ்ந்து வந்தாலும், முத்துகுமாரின் உயிர் தியாகம் நம் உறவின் மேன்மைக்கு புதியதோர் அத்தியாத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வீர இளைஞனுக்கு இளந்தமிழர் இயக்கம் நினைவு சின்னம் எழுப்புவதை முன்னிட்டு, நோர்வே ஈழத் தமிழர் அவை பெரு மகிழ்ச்சி அடைவதுடன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வன்னிப் போரின் பொழுதும் இன்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சீர்மிகு வரலாற்றுக் கடமையினை நோர்வே ஈழத் தமிழர் அவை அறிந்தே வைத்துள்ளது.

எம் மாவீரர்களின் தியாகத்தால் தணல் விட்டு எரியும் விடுதலை தாகம், தமிழக மக்களின் உறுதுணையுடன் தான் விடை காணும் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எம் இலட்சிய தீயை அணையாமல் எடுத்து சென்றிட யாம் புதிதாக அரசியல் வழிப் போராட்டத்தை முன்னெடுத்து உலகின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளோம். எம் வரலாற்றில் முதல் முறையாக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் ஆணையை வாக்கெடுப்பின் மூலம் பெற்று பலம் மிக்க அமைப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவை செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாக்கத்தைப் பற்றி எம் தமிழக உறவுகளிடையே எடுத்தியம்பி எம் விடுதலைக்கு வலு சேர்க்க இவ்வேளையில் வேண்டிநிற்கிறோம்.

மேலும், எம் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ்த் தேசிய சிந்தனையின் விதியினை விதைப்பது நம் போன்றோரின் கடமை என்பதனையும், கடல் கடந்து வாழ்ந்தாலும் எம் கைகள் ஒன்று சேர்ந்தால் பல பணிகளை நாம் செய்யலாம் என்பதனையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.

இவ்வாறு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தமிழர் இயக்கம் நன்றி

நோர்வே ஈழத்தமிழர் அவையின் வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று தொடர்ந்து இன விடுதலைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் நாம் உறுதியளிக்கிறோம்.

குமுதம் ரிப்போhட்டரில் சிலை திறப்பு நிகழ்வு குறித்த செய்தி

தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல செய்தி வார இதழான 'குமுதம் ரிப்போர்ட்டர்” ஏடு, முத்துக்குமார் சிலை தொடர்பாக இவ்வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


சிலை திறப்பு நிகழ்வு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்ட நிகழ்வையும் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட, மீனகம்.காம் இணையதளத்தினர் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு செய்ய விரும்புவோர்க்கு...

மாவீரன் முத்துக்குமார் சிலையில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன உணர்வாளர்கள் தமது பங்களிப்புகளை 14.05.2010 மாலைக்குள் அனுப்பி வைக்கமாறு அன்புடன் வேண்டுக் கேட்டுக் கொள்கிறோம். இதற்குரிய வங்கிக் கணக்கு எண் விபரத்தையும் யாம் இங்கு வெளியிடுகின்றோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்:


தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இயக்கம்
Cell : +91 9841949462

Thursday, May 13, 2010

தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பு மாநாடு(16.05.2010) வெற்றி பெற வாழ்த்துகள்!

செவ்வணக்கம் தோழர்களே..

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் முக்கியக் காரணியாக விளங்கும் தமிழ் மொழியை, சிதைக்கும் நோக்கிலேயே இந்த எழுத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளதோ என்ற கேள்வி தான், எழுத்து மாற்றம் குறித்து முதன் முதலில் அறிந்த போது ஏற்பட்டது.

எழுத்து மாற்றும் குறித்து அறிந்த போது, தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், மொழியை சிதைக்கும் நோக்கில் செயல்படும் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமையாகும என்றும் உணர்ந்தேன்.

இந்த தருணத்தில் தான், தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்க நினைக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள தமிழ் எழுத்து சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதுச்சேரியில், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் 16.05.2010 அன்று 'தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு ஏற்பாடாகியுள்ளது.

இந்த மாநாடு தொடர்பான புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தொடக்க நிலை ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். மாநாட்டு ஏற்பாடுகளிலும் பங்கு வகிக்க நினைத்திருந்தேன். ஆனால், நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கம் சார்பில் தஞ்சையில் மாவீரன் முத்துக்குமார; சிலை திறப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டதால், மாநாட்டில் பங்கு பெற இயலாமல் போனதற்கு மிகவம் வருந்துகிறேன்.

எனினும், மாநாடு வெற்றி பெறவும், மாநாட்டில் உரையாற்றும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்க்கணினி ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இந்த முயற்சி பெரு வெற்றி பெற்று, தமிழ் எழுத்து சீர்திருத்த எதிர்ப்பிற்கு மேலும் உதவும் என்று மனதார நம்புகிறேன்.

வாய்ப்புள்ள நண்பர்கள், பதிவர்கள், இம்மாநாட்டில் நிச்சயம் பங்கு பெற வேண்டும். எழுத்து சீர்திருத்தம் தொடர்பான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து நாம் உறுதுணையாக நிற்கவும் உறுதியேற்க வேண்டும்.

தோழமையுடன்,
க.அருணபாரதி


"தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு” மாநாடு" - 16.05.2010


நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை

இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,

காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை

உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை

பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,

  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,

  3. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  4. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  5. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,

  6. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  7. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி

  8. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.

  9. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)

  10. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை

  11. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

  12. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,

  13. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி

  14. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

  15. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி

  16. திரு.விருபா. குமரேசன் சென்னை

  17. திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,

அனைவரையும் வருக என வரவேற்கும்,


குறிப்பிடத்தக்க பதிவுகள்