Wednesday, October 27, 2010

இந்தியாவே வெளியேறு - க.அருணபாரதி


‘இந்தியாவே வெளியேறு’ என்ற ஒற்றை முழக்கம் ஜம்மு - காசுமீர் பள்ளத்தாக்குகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக காசுமீர் மக்களின் போராட்டம், மீண்டும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

காசுமீரி தேசிய இனத்தவரின் தாயகமான காசுமீரை, ஆக்கிரமித்த இந்தியா, அங்கு தன் இராணுவத்தை நிறுவி பேயாட்சி நடத்தி வருகின்றது. பதவிக்காகவும், பணத்திற்காகவும் இன உரிமையை விலை பேசுகின்ற, தேர்தல் கட்சிகளை வைத்துக் கொண்டு அங்கு சனநாயகம் தழைத்தோங்குவதாக இந்திய அரசு வெளியில் பொய் சொல்லி வருவதை இப்போராட்டங்கள் அம்பலப் படுத்துகின்றன.

1 இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத் தினரையும், சி.ஆர்.பி.எப். எனப்படுகின்ற நடுவண் காவல் படையினர் சுமார் 70,000க்கும் மேற் பட்டோரையும் காஷ்மீர் மண்ணில் குவித்து வைத்துக் கொண்டு அங்கு சனநாயக ஆட்சி நடைபெறுவதாக கூறுகின்றது, இந்திய அரசு. நடைமுறையில் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அத்துமீறல்களிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபட்டு வந்ததன் காரணமாக, 2005ஆம் ஆண்டு நடுவண் துணை இராணுவப் படையினர் திரும்பப் பெறப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கென ஒரு சிறுதுரும்பைக் கூட இந்திய அரசு இதுவரைக் கிள்ளிப் போடவில்லை.

பாகிஸ்தானும் தன் பங்கிற்கு அம்மண்ணை, தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. காசுமீரிகளின் தாயகமான காசுமீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பங்குபோட்டுக் கொண்டு உள்ளன.

இவ்விரு அரசுகளும், தங்களது ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல போராளிக் குழுக்களை தானே உருவாக்கியும் இருந்தன. இந்தக் குழுக்களிடையே நடைபெறும் மோதல்களை முன்னிறுத்தி, காசுமீர் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களை இவ்விரு அரசுகளும் இணைந்தே ஒடுக்கி வந்துள்ளன.

தம் மண்ணை மீட்கப் போராடுகின்ற காசுமீர் விடுதலை இயக்கங்களுக்கு தீவிரவாத முத்திரைக் குத்துவதும், அதற்கு இந்து - முஸ்லிம் மதவாத சாயம் பூசுவதும், ஏகாதிபத்தியங்களின் சதி என்று இட்டுக் கட்டுவதுமாக தொடர்ந்து காசுமீர் விடுதலைப் போராட்டம் இவ்விரு அரசுகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றது.

போலி மோதல் என்ற பெயரில் அப்பாவி காசுமீர் மக்களும், காசுமீர் விடுதலைப் போராளிகளும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாகவே நடந்து வருகின்றது. இந்தியப் படையினர் காசுமீரிப் பெண்களை வல்லுறவு கொள்வதும் அன்றாடம் தொடர்கிறது.

இந்திய இராணுவத்தின் இந்த அத்து மீறல்களுக்கு எதிராக, விடுதலை வேட்கையோடு காசுமீர் மக்கள் அவ்வப்போது போர்க் குணமுள்ள போராட்டங்களையும் முன்னெ டுத்தே வருகின்றனர். பல் வேறு மனித உரிமை ஆர்வலர் களும், பத்திரிக்கை யாளர்களும் இந்திய அரசின் இந்த அடக்குமுறை களுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப் பியும் வருகின்றனர்.

இந்நிலையில் தான், கடந்த 30.04.2010 அன்று மச்சீல் செக்டர் என்ற பகுதியில், வீடு ஒன்றில் ‘தீவிரவாதிகள்’ பதுங்கி யிருப்பதாகக் கூறி, மூவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் ரபியாபாத் பகுதியிலிருந்து இராணுவத்தினரால், கடத்திக் கொண்டு வரப்பட்ட அப்பாவிகள் எனத் தெரிய வந்தது. பதவி உயர்வுக்காக இராணுவ மேஜர் உபேந்தர் என்பவன் அந்த போலி மோதலுக்கு உத்தரவிட்டிருந்ததும் அம்பலமானது. இது தொடர்பான இராணுவ அதிகாரிகளின் பேச்சுகள் ஊடகங்களில் வெளியாயின.

குற்றச்சாட்டுகள் உறுதியான பின், இந்த போலி மோதலை நிகழ்த்திய, இராணுவப் படையைச் சேர்ந்த அப்பாஸ், இராணுவத்திற்கு தகவல் கொடுக்கும் பஷிகர் அகமது, அப்துல் ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேஜர் உபேந்தர் தலைமறைவானார். அவரை காவல்துறை இன்னும் தேடி வருகிறதாம்.

இந்தியத் தேசிய வெறியின் நிழலில் இந்த படுகொலைகள் மூடிமறைக்கப் படுவதும், இந்தியத் தேசப் பக்தியின் பெயரால் இப் படுகொலைகள் நியாயப் படுத்தப் படுவதும், இந்த போலி மோதலை விடக் கொடுமையானது.

தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த போலி மோதலையடுத்து, காசுமீரெங்கும் இந்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. இந்திய இராணுவத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக, 11.06.2010 அன்று பாரமுலா மற்றும் சிறீநகர் மாவட்டங்களில், ஆர்ப் பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நடுவண் துணை இராணுவப் படை. அதில் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த 16 வயது மாணவன் துஃபைல் அகமது சுட்டுக் கொல்லப் பட்டான். பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், 25.06.2010 அன்று சுபோரில் பகுதியில் மீண்டும் ஒரு போலி மோதல் நிகழ்த்தப்பட, அதில் அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் ‘தீவிரவாதிகள்’ என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல் களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்தது, இந்திய இராணுவம். இந்நிலையில் அவர் களது உடலை ஒப்படைக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில், அஹமத் பட் என்ற 9 வயது சிறுவனின் உயிரைக் குடித்தன, துப்பாக்கிக் குண்டுகள்.

இவ்வாறு, ஜூன் 11 லிருந்து 27 வரை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது மட்டும், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராடிய மக்கள் மீது நடுவண் துணை இராணுவப் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை, காசுமீர் மாநில அரசின் சட்ட அமைச்சர் அலி முகம்மது சாகர் கூட கண்டித்தார். நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், மக்களை மேலும் மேலும் கொதிப் படையச் செய்தன. ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி மக்கள் ஒன்றுகூடிப் போராடினர்.

இந்திய இராணுவத்தின் இக்கொடுஞ்செயல்களைக் கண் டிக்கும் வகையில், ஜம்மு - காசுமீர் விடுதலை முன்னணி, ஹூரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. காவல் துறையும், நடுவண் துணை இராணுவப் படையும் இணைந்து, இப்போராட்டங்களின் போதும் வன்முறையை ஏவின. இப் போராட்டங்களை நடத்திய ஜம்மு - காசுமீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் மீர்வாஜ் உமர் பாரூக் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்ட போதும், போராட்டங்கள் தொ டர்ந்தன.

இப்போராட்டங்களின் போது காசுமீரி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஓங்கி உச்சரித்த ஒரே முழக்கம் ’இந்தியாவே வெளியேறு” என்பது தான்.

காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா இப்போராட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக வெட்கமின்றிப் புளுகித் தள்ளினார். இந்தப் புளுகலை அப்படியே ஒப்பிவித்தது பார்ப்பன பாரதிய சனதா கட்சி. பாதுகாப்புப் படை யினர் மீது விசாரணை செய்வதை விட ‘பிரிவினைவாத’ அமைப்புகள் மீது முதலில் நடவடிக்கை எடுங்கள் என்றார், பா.ச.க. செய்தித் தொடர்பாளர் அருண் ஜெட்லி. அதனை அப்படியே வழி மொழிந் தார், நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

போலி மோதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். காசுமீரில் குவிக்கப்பட்டுள்ள நடுவண் துணை இராணுவப் படை யினரும், இந்திய இராணுவத்தினரும் திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசு காசுமீர் மண்ணை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும். இதுவே காசுமீர் மக்களின் நலன் விரும்புகின்ற, மனித நேயர்களின் கோரிக்கையாகும்.
(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Friday, October 01, 2010

நடந்தேறியது என் திருமணம்..!


தோழருக்கு வணக்கம்...!


அவசரமாய் நடந்ததால், அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. மேளதாளங்கள் இல்லை. ஆனாலும், எளிமையாக இனிமையாக நடந்தேறியது என் திருமணம்..!



இரு வீட்டுப் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி நடந்த இந்த திருமணம், முறைப்படி தஞ்சை மாவட்ட பதிவு அலுவலகத்தில் 21.09.2010(செவ்வாய்க்கிழமை) அன்று காலை பதிவு செய்யப்பட்டது. 23.09.2010 அன்று தஞ்சையில் எளிமையான முறையில் தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன்னின்று, சரோஜ் நினைவகத்தில் வரவேற்பு நிகழ்வை நடத்தி வைத்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர். பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் இன உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்து அதிக முறை சிறை சென்றவரும், தஞ்சை த.தே.பொ.க. நகரச் செயலாளருமான தோழர் இராசு.முனியாண்டி வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியரும், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, இளந்தமிழர் இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன், கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினரும், திரைப்படபாடலாசிரியருமான கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.

தமிழ் மொழியை புறந்தள்ளி வடமொழியை முன்னிறுத்தும் புரோகித முறையை புறந்தள்ளியும், பெண்களை அடிமைப்படுத்தும் தாலியை அணிவிக்காமலும் தந்தைப் பெரியார் காட்டிய சீர்திருத்த வழியில் இத்திருமணம் இனிதே நடந்தது.

என்னை பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கும் தோழர்களுக்கு, எனது துணைவியார் சத்யாவையும் அறிமுகப்படுத்தி வைப்பதில் மகிழ்கிறேன்.

நன்றியுடன்,

க.அருணபாரதி


Tuesday, July 13, 2010

தலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க.அருணபாரதி


கடந்த ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனவெறிப் போரின் போது, சிங்கள இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பல புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சேனல் 4 செய்தி நிறுவனம், சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றை முன்வைத்து, உலக நாடுகள் பலவற்றிலும் வாழுகின்ற புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தத்தமது நாடுகளை பணிய வைத்ததன் காரணமாக, சிங்கள அரசின் மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்ட புதிய ஒளிப்படம்

நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் போராளிகளை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் ஒளிப்படக் காட்சிகளை சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தொடக்கத்தில் இலங்கை அரசு அக்காணொளியை மறுத்த நிலையில், அக்காணொளி உண்மையானது தான் என்று ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழுவும் சான்று வழங்கியிருந்தது. தற்போது புதியதொரு ஒளிப்படக் காட்சியையும் சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இக்காணொளியில், இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப்பட்டிருப்பதும், பெண் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும், இக்காணொளியை தமக்கு அனுப்பிய சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் பேட்டியையும் இச்செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், அவர் தமது உயரதிகாரிகளின் கட்டளைக்கு ஏற்பவே தாம் மக்களை படுகொலை செய்ததாக அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றதையும் அவர் கூறினார்.

இதே போல, கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் போராளிகளின் பிணங்களைக் கூட நிர்வாணப்படுத்தி விலங்குகளைப் போல அவர்களை இராணுவத்தினர் வீசியெறிவது போன்ற காட்சிகளைக் கொண்ட புதிய காணொளியை ‘அதிர்வு’ இணையதளம் வெளியிட்டுள்ளது. இராசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக உடல்கள் கருகிக் கிடப்பதையும் இக்காணொளியில் காண முடிகின்றது.

சர்வதேச நெருக்கடிக் குழு அறிக்கை

இலங்கை அரசு போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது என்றும் அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரஸல்ஸ் நகரைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ‘சர்வதேச நெருக்கடிக் குழு’ (International Crisis Groups) என்ற மனித உரிமை அமைப்பு மே 17 அன்று தனது அறிக்கையில் கூறியது. இதற்கு வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர் ஐ.நா. சபைக்கும் இப்போர்க் குற்றங்களில் பங்குண்டு என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இலங்கை அரசு நியாயமான நீதி விசாரணையை மேற்கொள்ளாது என்றும், உள்நாட்டு முரண்பாடு களை தீர்த்துக் கொள்ள, இலங்கை அரசை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் செயல்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் அவ்வமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

• தமிழ் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குண்டுகளை வீசியது,

• குறுகிய பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை வற்புறுத்தி அழைத்து குண்டு வீசிக் கொன்றது,

• சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் அரசுக்குத் தகவல் தெரிவித்தும் கூட, காயம்பட்டவர்களும், நோயாளி களும் நிரம்பிய மருத்துவமனைகள் மீது குண்டு வீசியது,

• மனிதாபிமான பணியாற்றிக் கொண்டிருந்த அமைப்புகள் மற்றும் ஊழியர்களை அறிந்து அவர்கள் மீது குண்டு வீசித்தாக்கியது,

• பொதுமக்கள் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக் காட்டி, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகித்தலை தடுத்து நிறுத்தியது

மேற்கண்ட குற்றச்சாட்டு களுக்கு இலங்கை அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தனது அறிக்கையில் அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதே போல புலிகள் மீதும் அவ்வமைப்பு குற்றச்சாட்டு களை முன் வைத்துள்ளது. சர்வதேசச் சமூகம் இனப்படுகொலை நடந்த போது அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையும் அவ்வறிக்கை சுட்டுக்காட்டி சாடியுள்ளது. ஐ.நா.வின் நம்பகத்தன்மையும் குலைக்கப்பட்டு விட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை

இதனைத் தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு, மே 25 அன்று இலங்கை மீதான போர்க் குற்றங்களை விசாரிக்கும் நிபுணர் குழு அமைக்கும் முடிவை எக்காரணம் கொண்டும் ஐ.நா. கைவிடக் கூடாது என்று கோரியது. அத்துடன், உயிருடன் இருந்த தமிழ்ப் போராளி ஒருவர் இரத்தம் கசிய அடித்துக் கொல்லப்படும் கோரக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் மற்றொரு மொரு போர்க்குற்ற ஆவணமாக வெளியிட்டது.

கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு அவரை இராணுவத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டுவதும், இறந்த பின் அவர் மீது புலிக்கொடியை வீசுவதும் அதில் பதிவாகியுள்ளது. கோடரியால் தலை சிதைக்கப்பட்டு அவரது மூளை சிதறிக்கிடப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தன் அறிக்கையில் கூறியிருந்தது.

‘இலங்கை அரசு தானே நியமித்துள்ள விசாரணைக்குழு கண் துடைப்பு நடவடிக்கை தான். இதற்கு முன்பு இதே போல இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட 9 குழுக்கள் எவ்வித உருப்படியான பரிந்துரை களையும் வழங்கவில்லை. எனவே, இலங்கை அரசு நியமித்துள்ள குழுவை ஐ.நா. சபை நம்பக்கூடாது’ என்றும் இவ்வமைப்பின் அறிக்கைத் தெரிவித்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு, போர் முடிந்து ஓராண்டாகிவிட்ட சூழலிலும் கூட இவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சுதந்தி ரமாக நடமாட இலங்கை அரசு தடை விதித்திருந்து என்றும் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஓராண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை காண அனுமதி மறுத்துள்ள இலங்கை அரசு, அவர்களின் நிலையை தெரியப் படுத்தவும் தவறிவிட்டது என மன்னிப்புச் சபை கூறியுள்ளது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை மன்னிப்புச் சபையின் செயலாளர் கிளொடியோ கோர்டான் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார்.

இதனிடையே, அமெரிக்க காங்கிரசு உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ்டிரை கோஸ் என்பவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் எழுதினார்.

ஏற்கெனவே, கடந்த சனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கை மீதான போர்க்குற்றங்களை விசாரணை செய்த பின், இலங்கை அரசை போர்க் குற்றவாளி அரசு என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இத்தீர்ப்பாயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நீதிபதிகள் பங்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

விசாரிக்குமா ஐ.நா.?

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் வெளிவந்த பின்னர், கடந்த மார்ச் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை மீது விசாரணை நடத்த ஓர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அக்குழுவிற்கென ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளையும், போர்க்குற்ற ஆவணங்களையும் தொடர்ந்து, பான் கீ மூன் மீண்டும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை அவசியம் தான் என்று கூறினார்.

இதனைக் கண்டு பதறிய இலங்கை அரசு மே 23 அன்று அவசர அவசரமாக, இது குறித்து தாமே ஒரு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கிறோம் என்று ஐ.நா.விற்கு வேண்டுகோள் விடுத்தது, இலங்கை அரசு. இந்த விசாரணைக் குழுவும் கூட 2002ஆம் ஆண்டு புலிகளும் இலங்கை அரசும் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாடு ஏன் சீர்குலைந்தது என்பதனை ஆராய்வதற்குத்தான் என்பதும் வேதனையான வேடிக்கை. இந்த இலட்சணத்தில் இந்த விசாரணைக் குழுவை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாகச் சென்றிருந்த இலங்கையின் வெளி யுறவுத்துறை அமைச்சர் பெரிஸ் ‘இலங்கையின் உள்நாட்டு விவகாரங் களில் தலையிட வேண்டாம்’ என்று கூறினார். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதும், முகாம்களில் அவர்களை அடைத்து வைத்துத் துன்புறுத்துவதும் தான் ‘உள்நாட்டு’ உரிமை என்று, வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியிருக்கிறது, சிங்கள அரசு.

இதனிடையே, இலங்கை அமைச்சர் பெரிஸின் பதிலை நிராகரித்துப் பேசிய பான் கீ மூன் விசாரணைக் குழு திட்டவட்டமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒத்து ழைப்பு வழங்கப் போவதில்லை என திமிருடன் அறிவித்தார், ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் பாலித கொஹன்னா. உலக நாடுகளின் சபையான ஐ.நா.வையே எதிர்த்துப் பேசுகின்ற அளவிற்கு இலங்கை அரசிடம் வெளிப்படுகின்ற திமிர், அவர்களிடமிருந்து முளைத்தது அல்ல. இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும், இலங்கைக்கு ஆயுத வியாபாரம் செய்த ஏனைய நாடுகளிடமிருந்தும் கிடைத்த திமிர் அது.

ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. அமைப்பு அமைக்கும் விசாரணைக் குழு இலங்கை அரசை எந்தளவு குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் என்பது கேள்விக் குறியே என்றாலும், அதற்குக் கூட ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறுகிறது இலங்கை.

போர்க் குற்றத்திலும், இன அழிப்பிலும் ஈடுபட்ட சிங்கள அரசை உலகின் முன் விசாரணைக் கூண்டில் நிறுத்த தமிழினமும், உலக மனித உரிமை அமைப்பினரும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதையே இது காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க பதிவுகள்