Tuesday, July 13, 2010

தலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க.அருணபாரதி


கடந்த ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனவெறிப் போரின் போது, சிங்கள இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பல புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சேனல் 4 செய்தி நிறுவனம், சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றை முன்வைத்து, உலக நாடுகள் பலவற்றிலும் வாழுகின்ற புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தத்தமது நாடுகளை பணிய வைத்ததன் காரணமாக, சிங்கள அரசின் மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்ட புதிய ஒளிப்படம்

நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் போராளிகளை சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் ஒளிப்படக் காட்சிகளை சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தொடக்கத்தில் இலங்கை அரசு அக்காணொளியை மறுத்த நிலையில், அக்காணொளி உண்மையானது தான் என்று ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழுவும் சான்று வழங்கியிருந்தது. தற்போது புதியதொரு ஒளிப்படக் காட்சியையும் சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இக்காணொளியில், இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைக்கப்பட்டிருப்பதும், பெண் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும், இக்காணொளியை தமக்கு அனுப்பிய சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் பேட்டியையும் இச்செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், அவர் தமது உயரதிகாரிகளின் கட்டளைக்கு ஏற்பவே தாம் மக்களை படுகொலை செய்ததாக அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றதையும் அவர் கூறினார்.

இதே போல, கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் போராளிகளின் பிணங்களைக் கூட நிர்வாணப்படுத்தி விலங்குகளைப் போல அவர்களை இராணுவத்தினர் வீசியெறிவது போன்ற காட்சிகளைக் கொண்ட புதிய காணொளியை ‘அதிர்வு’ இணையதளம் வெளியிட்டுள்ளது. இராசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக உடல்கள் கருகிக் கிடப்பதையும் இக்காணொளியில் காண முடிகின்றது.

சர்வதேச நெருக்கடிக் குழு அறிக்கை

இலங்கை அரசு போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறது என்றும் அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரஸல்ஸ் நகரைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ‘சர்வதேச நெருக்கடிக் குழு’ (International Crisis Groups) என்ற மனித உரிமை அமைப்பு மே 17 அன்று தனது அறிக்கையில் கூறியது. இதற்கு வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர் ஐ.நா. சபைக்கும் இப்போர்க் குற்றங்களில் பங்குண்டு என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இலங்கை அரசு நியாயமான நீதி விசாரணையை மேற்கொள்ளாது என்றும், உள்நாட்டு முரண்பாடு களை தீர்த்துக் கொள்ள, இலங்கை அரசை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் செயல்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் அவ்வமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

• தமிழ் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குண்டுகளை வீசியது,

• குறுகிய பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மக்களை வற்புறுத்தி அழைத்து குண்டு வீசிக் கொன்றது,

• சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் அரசுக்குத் தகவல் தெரிவித்தும் கூட, காயம்பட்டவர்களும், நோயாளி களும் நிரம்பிய மருத்துவமனைகள் மீது குண்டு வீசியது,

• மனிதாபிமான பணியாற்றிக் கொண்டிருந்த அமைப்புகள் மற்றும் ஊழியர்களை அறிந்து அவர்கள் மீது குண்டு வீசித்தாக்கியது,

• பொதுமக்கள் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக் காட்டி, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகித்தலை தடுத்து நிறுத்தியது

மேற்கண்ட குற்றச்சாட்டு களுக்கு இலங்கை அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதாகவும் தனது அறிக்கையில் அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதே போல புலிகள் மீதும் அவ்வமைப்பு குற்றச்சாட்டு களை முன் வைத்துள்ளது. சர்வதேசச் சமூகம் இனப்படுகொலை நடந்த போது அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையும் அவ்வறிக்கை சுட்டுக்காட்டி சாடியுள்ளது. ஐ.நா.வின் நம்பகத்தன்மையும் குலைக்கப்பட்டு விட்டதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை

இதனைத் தொடர்ந்து மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு, மே 25 அன்று இலங்கை மீதான போர்க் குற்றங்களை விசாரிக்கும் நிபுணர் குழு அமைக்கும் முடிவை எக்காரணம் கொண்டும் ஐ.நா. கைவிடக் கூடாது என்று கோரியது. அத்துடன், உயிருடன் இருந்த தமிழ்ப் போராளி ஒருவர் இரத்தம் கசிய அடித்துக் கொல்லப்படும் கோரக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் மற்றொரு மொரு போர்க்குற்ற ஆவணமாக வெளியிட்டது.

கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு அவரை இராணுவத்தினர் கத்தியைக் காட்டி மிரட்டுவதும், இறந்த பின் அவர் மீது புலிக்கொடியை வீசுவதும் அதில் பதிவாகியுள்ளது. கோடரியால் தலை சிதைக்கப்பட்டு அவரது மூளை சிதறிக்கிடப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பக அமைப்பு தன் அறிக்கையில் கூறியிருந்தது.

‘இலங்கை அரசு தானே நியமித்துள்ள விசாரணைக்குழு கண் துடைப்பு நடவடிக்கை தான். இதற்கு முன்பு இதே போல இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட 9 குழுக்கள் எவ்வித உருப்படியான பரிந்துரை களையும் வழங்கவில்லை. எனவே, இலங்கை அரசு நியமித்துள்ள குழுவை ஐ.நா. சபை நம்பக்கூடாது’ என்றும் இவ்வமைப்பின் அறிக்கைத் தெரிவித்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு, போர் முடிந்து ஓராண்டாகிவிட்ட சூழலிலும் கூட இவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சுதந்தி ரமாக நடமாட இலங்கை அரசு தடை விதித்திருந்து என்றும் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.

கடந்த ஓராண்டு காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை காண அனுமதி மறுத்துள்ள இலங்கை அரசு, அவர்களின் நிலையை தெரியப் படுத்தவும் தவறிவிட்டது என மன்னிப்புச் சபை கூறியுள்ளது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை மன்னிப்புச் சபையின் செயலாளர் கிளொடியோ கோர்டான் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார்.

இதனிடையே, அமெரிக்க காங்கிரசு உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ்டிரை கோஸ் என்பவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் எழுதினார்.

ஏற்கெனவே, கடந்த சனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கை மீதான போர்க்குற்றங்களை விசாரணை செய்த பின், இலங்கை அரசை போர்க் குற்றவாளி அரசு என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். இத்தீர்ப்பாயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நீதிபதிகள் பங்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

விசாரிக்குமா ஐ.நா.?

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் வெளிவந்த பின்னர், கடந்த மார்ச் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை மீது விசாரணை நடத்த ஓர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அக்குழுவிற்கென ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளையும், போர்க்குற்ற ஆவணங்களையும் தொடர்ந்து, பான் கீ மூன் மீண்டும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை அவசியம் தான் என்று கூறினார்.

இதனைக் கண்டு பதறிய இலங்கை அரசு மே 23 அன்று அவசர அவசரமாக, இது குறித்து தாமே ஒரு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கிறோம் என்று ஐ.நா.விற்கு வேண்டுகோள் விடுத்தது, இலங்கை அரசு. இந்த விசாரணைக் குழுவும் கூட 2002ஆம் ஆண்டு புலிகளும் இலங்கை அரசும் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாடு ஏன் சீர்குலைந்தது என்பதனை ஆராய்வதற்குத்தான் என்பதும் வேதனையான வேடிக்கை. இந்த இலட்சணத்தில் இந்த விசாரணைக் குழுவை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாகச் சென்றிருந்த இலங்கையின் வெளி யுறவுத்துறை அமைச்சர் பெரிஸ் ‘இலங்கையின் உள்நாட்டு விவகாரங் களில் தலையிட வேண்டாம்’ என்று கூறினார். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதும், முகாம்களில் அவர்களை அடைத்து வைத்துத் துன்புறுத்துவதும் தான் ‘உள்நாட்டு’ உரிமை என்று, வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியிருக்கிறது, சிங்கள அரசு.

இதனிடையே, இலங்கை அமைச்சர் பெரிஸின் பதிலை நிராகரித்துப் பேசிய பான் கீ மூன் விசாரணைக் குழு திட்டவட்டமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விசாரணைக் குழுவிற்கு ஒத்து ழைப்பு வழங்கப் போவதில்லை என திமிருடன் அறிவித்தார், ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் பாலித கொஹன்னா. உலக நாடுகளின் சபையான ஐ.நா.வையே எதிர்த்துப் பேசுகின்ற அளவிற்கு இலங்கை அரசிடம் வெளிப்படுகின்ற திமிர், அவர்களிடமிருந்து முளைத்தது அல்ல. இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும், இலங்கைக்கு ஆயுத வியாபாரம் செய்த ஏனைய நாடுகளிடமிருந்தும் கிடைத்த திமிர் அது.

ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா. அமைப்பு அமைக்கும் விசாரணைக் குழு இலங்கை அரசை எந்தளவு குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் என்பது கேள்விக் குறியே என்றாலும், அதற்குக் கூட ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறுகிறது இலங்கை.

போர்க் குற்றத்திலும், இன அழிப்பிலும் ஈடுபட்ட சிங்கள அரசை உலகின் முன் விசாரணைக் கூண்டில் நிறுத்த தமிழினமும், உலக மனித உரிமை அமைப்பினரும் தொடர்ந்து போராட வேண்டியிருப்பதையே இது காட்டுகிறது.

1 கருத்துகள்:

தமிழ்நிருபர்.காம் said...

பத்திரிக்கையாளர் அருணபாரதி மீது தாக்குதல்

http://tamilnirubar.org/?p=17087

குறிப்பிடத்தக்க பதிவுகள்