Tuesday, May 15, 2007

மேதா பட்கர் புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர்
புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் கட்டுவதால் பழங்குடியினர் வாழும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிவதை எதிர்த்து தொடர்ந்துப் போராடி வருபவர். அதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் நிற்கும் களப்பணியாளர்.

தமிழகத்தில் கடந்த 15-02-2007 அன்று கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் கட்டப்படுவதால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டு, அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தார். போராடும் மக்களுக்கு ஆதரவளித்தார்.

இது போன்று மக்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கு பெரும் கேடு விளைவிக்கும், மீனவ கிராமங்களை அழிக்கும், ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே எதிரான இத்திட்டத்தை எதிர்த்து தேங்காய்த்திட்டு மக்களும்,ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களும் போராடி வருகின்றனர். துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

ஆனால், புதுச்சேரி அரசு இத்திட்டத்தைக் கைவிட மறுத்து வருகிறது. முதல்வர் ந.ரங்கசாமியை பலமுறை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. துறைமுகம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி ஒரு உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள்படி முடிவு எடுப்போம் என முதல்வர் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால், இதுநாள் வரை வல்லுநர் குழு கூட அமைக்கப்படவில்லை. இதனால், போராடும் மக்கள் அரசு மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

எனவே, போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், புதுச்சேரி அளவில் நடைபெறும் இப்போராட்டத்தை அகில இந்திய அளவில் விரிபடுத்தவும், போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கரை புதுச்சேரிக்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. போராடும் மக்களின் அழைப்பை ஏற்று, அவர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார்.

வரும் மே 17 வியாழனன்று காலையில் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், மதியம் புதுச்சேரி வந்து சேருகிறார். போராட்டம் நடத்தி வரும் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்திக்கிறார். கடந்த 13-04-2007 அன்று சவப்பாடை ஊர்வலம் நடத்தி துறைமுகத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தி்ன் போது போலீஸ் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

புதிதாக துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடங்களைப் பார்வையிடுகிறார். ஏற்கனவே கட்டப்பட்ட அரியாங்குப்பம் துறைமுகத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நேரிடையாக பார்க்கிறார். மேலும், இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் மீனவர் கிராமங்களை பார்வையிடுவதோடு, மீனவ மக்களையும் சந்திக்கிறார். பிறகு நடக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் வருகை துறைமுக விரிவாக்கத் திட்டப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செய்திக்கு நன்றி: கோ.சுகுமாரன்
www.kosukumaran.blogspot.com
 

0 கருத்துகள்:

குறிப்பிடத்தக்க பதிவுகள்